July 28, 2008

சுப்ரமணியபுரம் சொல்லும் கதைகள்

நமது பிராந்திய மொழிகளில் எடுக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களில் பொதுவான ஒரு அம்சமாக எனக்குத் தெரிவது இவை எந்த மொழிக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு இருக்கும். இப்படி எடுப்பது ஒரு பாணி. அந்தந்த மொழிக்கு தேவையான 'skin'ஐ மட்டும் மாற்றிவிட்டால் அது தெலுங்குப் படமா, தமிழ்ப் படமா என்று வித்தியாசம் தெரியாது. தமிழ் சினிமாவின் நிகழ்கால சுனாமியான ஜே.கே.ரித்தீஷ் கூட தமிழ் தெலுங்கு என்று இருமொழிகளிலும் தயாராகும் ஒரு படத்தில் நடிப்பதாக கேள்வி. அன்னாரின் கலைத்தாகம் விரைவில் சாந்தி அடைவதாக :-).

இப்படியாக இல்லாமல் ஆழமாக சூழலை பிரதிபலிக்கும் படங்களில் ஒன்று சுப்ரமணியபுரம். நான் படித்த கல்லூரி சுப்ரமணியபுரத்தில் இருக்கும் மதுரைக் கல்லூரிதான்.

1980களில் நடக்கும் ஒரு கதை. இம்மாதிரி பீரியட் படங்களின் பெரிய சவால் அந்த சூழலை நீங்கள் எப்படி திரையில் கொண்டு வருகிறீர்கள் என்பது. அதிக செலவில்லாமல் அதை நுணுக்கமாகவே கொண்டு வந்திருக்கிறார்கள்.

சுப்ரமணியபுரம் சொல்லும் கதைகள் சில:

- இந்தக் கதைக்கும் இது நடக்கும் காலகட்டதிற்கும் என்ன சம்பந்தம்? இதே கதையை சமகாலத்தின் பின்னனியில் எடுக்க முடியாதா? செய்யலாம். ஆனால் இந்தக் கதையின் முக்கிய விஷயம் அழகரும், பரமனும் ஒரு கூலிப்படையோ, தாதாக் கூட்டமோ அல்ல. அவர்கள் வெறும் பொறுப்பில்லாத வேலையில்லா இளைஞர்கள். 80களின் வேலையில்லா திண்டாட்டமும், பொழுதுபோக்கு அம்சங்கள் அறவே இல்லாத மதுரையும் அவர்களை அரசியல்வாதிகளின் அல்லக்கைகளாக மாற்றுகின்றது.

- SMS இல்லாத, இ-மெயில் இல்லாத, செல் பேசி இல்லாத காலத்தில் கண்களால் மட்டுமே காதலைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இந்தக் காட்சிகள் நீளம் கொஞ்சம் அதிகப்படிதான். அவளுடைய சித்தப்பா தொழில் கணக்ககப் பார்த்துக் கொண்டிருக்க அழகரும், துளசியும் பரிமாறிக் கொள்ளும் காதல் பார்வைகள் சுகம்தான். நல்லவேளை சித்தப்பா கண்டுபிடிக்கவில்லை.

- துளசியின் குடும்பத்தின் விவரிப்பு. கவுன்ஸிலராக தந்தை. அவருக்கு துணையாக சித்தப்பா. தவிர பெரியப்பா ஒரு அரசு அதிகாரி. கூடவே சில அல்லக்கைகள் என்று ஒரு லோக்கல் அரசியல் புள்ளியின் குடும்பம். நல்ல சித்தரிப்பு.

- exaggerate செய்யப்படாத போலீஸ் காட்சிகள். லோக்கல் அரசியலின் 'நடைமுறை'க்கு பழக்கப்பட்ட ஆனால் நல்ல போலிஸ் இன்ஸ்பெக்டர்.

- முரட்டுக் காளை திரைப்படம் வெளியாகும்போது இருக்கும் கொண்டாட்ட நிலைக்கும் (euphoria) இன்றைக்கு சிவாஜி வெளியாகும்போது இருக்கும் கொண்டாட்ட நிலைக்கும் வித்தியாசம் நிறையவே உண்டு. இன்றைய ரஜினி மட்டுமல்ல பலரின் ரசிக மன்றங்களும் அந்த நடிகர்களின் அரசியல் அபிலாஷைகளின் தொடக்கமாக வெளிப்படையாகவே தெரிகின்றன. முக்கியமானது, தொலைக்காட்சிகளே கிடையாது, ரூபவாஹினியைத் தவிர. ரஜினியை நீங்கள் பார்க்க திரையரங்குக்குதான் செல்ல வேண்டும். ஊடகங்களின் 'hype' எதுவும் இல்லாத, ஆதாயம் எதுவும் எதிர்பார்க்காத, சாதாரண ரசிகனின் கொண்டாட்டமாக இதைப் பார்க்கலாம்.

- 'ஒரு பொம்பளை காலில விழ வச்சிட்டாண்டா' என்று அழகர் அழுகின்ற காட்சியும். 'பொம்பளயை நம்பவே நம்பாதேன்னு சொன்னேனே' என்று பரமன் பேசும் வசனமும் கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அந்தக் காட்சிகள் நமது சமூகத்தைதானே பிரதிபலிக்கின்றன. ஒரு வேளை அழகரும், பரமனும் 50 வயது வழி உயிர் வாழ்ந்திருந்தால், தங்கள் பெண் குழந்தைகளை மிகவும் பெருமையாகவே கருதியிருப்பார்களாக இருக்கும் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

- அழகரைக் கொல்ல துளசியின் சித்தப்பா போடும் திட்டம். இதற்கப்புறம் படம் ஒரு சாதாரண 'பழிவாங்கும்' கதையாக மாறி விடுகிறது.

- பரமனை காட்டிக் கொடுத்துவிட்டு காசி நடந்து செல்லும் காட்சி நீளமாக, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டு, எதுவும் சொல்லாமல் முடிகின்றது. படமும் அப்படியே. இதை சசியே தயாரித்து இயக்கியிருக்கிறார். அவருடைய தன்னம்பிக்கைக்கு ஒரு பாராட்டு. வன்முறை அதிகமாக இருந்தாலும் இந்தப் படம் பெருவாரியான வரவேற்பை பெற்றிருப்பது நமது tolerance எல்லை உயர்ந்து விட்டது என்று காண்பிக்கின்றதோ என்னவோ.

விருமாண்டி, பருத்தி வீரன், வெயில் வரிசையில் சுப்ரமணியபுரமும் மண் மணத்தோடு.

19 மறுமொழிகள்:

ஸ்ரீதர் நாராயணன் said...

முக்கியமா சொல்ல நினைச்சது, 81-ல் 'தில்லுமுல்லு' வெளியான போது நான் மூன்றாவது படித்துக் கொண்டிருந்தேன். படம் வெளியான முதல் சனிக்கிழமை மதியம் திரைப்படம் பார்க்கப் போய் சட்டை எல்லாம் கிழிந்து, அப்படியும் டிக்கெட் கிடைக்காமலே வீட்டிற்கு வந்த சோகம். அது ஒரு அனுபவம் :-)

G.Ragavan said...

நீங்களும் படம் பாத்துட்டீங்களா. நான் இன்னும் பாக்கலை. ஊர்ப்பக்கம் போனாத்தான் பாக்க முடியும். இல்லைன்னா ஆன்லைன்ல நல்ல பிரிண்ட் வர்ர வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.

இவன் said...

//தமிழ் சினிமாவின் நிகழ்கால சுனாமியான ஜே.கே.ரித்தீஷ் கூட தமிழ் தெலுங்கு என்று இருமொழிகளிலும் தயாராகும் ஒரு படத்தில் நடிப்பதாக கேள்வி. அன்னாரின் கலைத்தாகம் விரைவில் சாந்தி அடைவதாக :-).//

தலைவர் தெலுங்கிலயும் நடிக்கிறாரா??

இவன் said...

//தமிழ் சினிமாவின் நிகழ்கால சுனாமியான ஜே.கே.ரித்தீஷ் கூட தமிழ் தெலுங்கு என்று இருமொழிகளிலும் தயாராகும் ஒரு படத்தில் நடிப்பதாக கேள்வி. அன்னாரின் கலைத்தாகம் விரைவில் சாந்தி அடைவதாக :-).//

தலைவர் தெலுங்கிலயும் நடிக்கிறாரா??

இவன் said...

விமர்சனம் நன்றாக இருக்கிறது.... கூடிய விரைவில் படம் பார்க்க வேண்டும்

ஸ்ரீதர் நாராயணன் said...

ராகவன்,

வன்முறை கொஞ்சம் அதிகமா இருந்தாலும், கட்டாயம் பார்க்க வேண்டிய படம்தான். :-)

இவன்,

அடுத்த ப்ராஜக்ட் 'தளபதி'(அடிக்க வராதீங்க். அதான் டைட்டில்) தமிழ் / தெலுங்கு இரண்டிலேயுமாமாம். குமுதம் வெப் டீவில சொல்லியிருக்காப்படி.

சதங்கா (Sathanga) said...

படம் பார்க்க வைக்கும் அளவிற்கு, நல்லா எழுதியிருக்கீங்க ஸ்ரீதர்.

ஸ்ரீதர் நாராயணன் said...

சதங்கா,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. :-)

ambi said...

ம்ம், பெங்களூரில் தியேட்டர் போயே ரொம்ப நாளாச்சு. அதுவும் இப்ப இருக்கற நிலைமையில அந்த பக்கமே போவதா இல்லை. நேர்த்தியான விமர்சனம்.

இசை, கேமிரா எல்லாம் விடுபட்டவைனு தலைப்பு வெச்சு இன்னொரு பதிவா வருமா? :p

சந்தடி சாக்குல 81ல நீங்க மூணாப்பு படிச்சீங்க என்பதையும், மூணாம் வகுப்பிலிருந்தே நான் ரஜினி ரசிகன் டா!னும் சொல்லாம சொல்லிட்டீங்க.

(கொத்தனார் இல்லாத குறையை போக்க வேணாமா?) :))

ஸ்ரீதர் நாராயணன் said...

அம்பி சார்,

வாங்க வாங்க. இசை, கேமரா எல்லாம் நமக்கு அவ்வளவா தெரியாத மேட்டர். அது மட்டுமில்லாம இந்தப் படம் ம்யூசிக்கல் வகையும் கிடையாது :-))

//மூணாம் வகுப்பிலிருந்தே நான் ரஜினி ரசிகன் டா!//

:-)) அந்தப் படம் ஒண்ணுதான் அப்படி முதல் நாளே பாக்க முயற்சி பண்ணினது. சுப்ரமணியபுரம் பாக்கும்போது இந்த கொசுவர்த்தி எல்லாம் சுத்திச்சி :-)

ஆடுமாடு said...

ஸ்ரீதர்ஜி நன்றாக இருக்கிறது. இன்னும் ஆழமாக விமர்சித்திருக்கலாம்.

80 களின் பெண்கள் நேரிடையாக பார்ப்பது குறைவு. அதை கண்களாம் ஸ்வாதி வெளிப்படுத்தியிருப்பது, அந்த காலகட்டங்களில் எங்க சித்தப்பாக்கள் இப்படி ஏதாவது ஒரு சவுண்ட் சிஸ்டம் கடையில் உட்கார்ந்துகொண்டு கதையடிப்பதையும், சின்னதாக வரும் சண்டையை பெரிதாக ஆக்குவதையும் நானே கண்டிருக்கிறென். (தென்காசி பக்கம்ஜி).
அந்த காலகட்டத்தின் மறந்துபோன நினைவுகளை, அழகாக வெளிபடுத்தியிருக்கிறது.
வன்முறை கொஞ்சம் அதிகம். சில படங்களில் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது நல்லது.

முதலில் இந்தப் படத்தின் பிரமோவும், ஸ்டில்களும் இது ஒரு காதல் கதை என்ற தோற்றத்தை வெளிபடுத்தியது. உள்ள போன பிறகுதான் வெட்டு, குத்து...

ஏமாந்தேன்.

வீரசுந்தர் said...

தெளிவான, அழகான விமர்சனம். நான் படத்த ஏற்கனவே பார்த்திருந்தாலும், உங்களது விமர்சனம், திரும்பவும் ஒரு முறை படம் பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தியது! :-)

சுப்ரமணியபுரத்தின் வெற்றியானது, அது நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகளால்தான். சில விமர்சனங்களில், சுப்ரமணியபுரத்தைப் பற்றி எதிர்மறையாக சொல்லியிருந்தனர். ஆனாலும், மற்றப் படங்களுடன் ஒப்பிடும் போது, சுப்ரமணியபுரம் எவ்வளவோ தேவலை! :)

ராஜ நடராஜன் said...

எனக்கெல்லாம் கொடுப்பினை இந்தமாதிரி விமர்சனங்களைப் பார்க்குறதுதான்.ஏன்னா நான் திருட்டு சி.டில படங்களைப் பார்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்:)

ச.சங்கர் said...

///80களின் வேலையில்லா திண்டாட்டமும், பொழுதுபோக்கு அம்சங்கள் அறவே இல்லாத மதுரையும் அவர்களை அரசியல்வாதிகளின் அல்லக்கைகளாக மாற்றுகின்றது///

இதுல (நுண்)அரசியல் ஏதும் இல்லியே?????

படம் பாக்குறதா இல்லை..82 ல நாங்களே மருதைல அப்படித்தான சுத்திக்கிட்டு திரிஞ்சோம்..களுத நம்ம ஃப்ளாஷ் பேக்க கொட்டாயில வேற போய் பாக்கணுமா :)

ஸ்ரீதர் நாராயணன் said...

//பிரமோவும், ஸ்டில்களும் இது ஒரு காதல் கதை என்ற தோற்றத்தை வெளிபடுத்தியது. உள்ள போன பிறகுதான் வெட்டு, குத்து...//

ஆடுமாடு,

ரொம்பச் சரி. ஆனால் ரெவ்யூ படித்தவுடன் சுதாரித்து கொண்டு விட்டேன். தனியாகத்தான் படம் பார்த்தேன். என் மனைவியுடன் 'புதுப்பேட்டை' பார்க்க முதல் நாள் போனோம். பாதி படத்திற்கு மேல் உட்கார முடியவில்லை. அந்த அனுபவத்திற்கு அப்புறம் நான் பெரும்பாலும் தனியாகத்தான் படம் பாக்கிறது :-))

//வீரசுந்தர் said...//

நீங்கள் சொல்வது மிகச் சரி. இது ஒரு சிறந்த முயற்சிதான். சசிகுமாரின் துணிச்சல் பாராட்டுக்குரியது. அடுத்த படம் எப்படி என்பதை பொறுத்து அவரை எந்தப் பட்டியலில் சேர்க்கலாம் என்று பார்க்கலாம்.

//நான் திருட்டு சி.டில படங்களைப் பார்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்:)//

ராஜ நடராஜன்,

:-) நல்ல முடிவு. வாழ்த்துகள்.

சில சமயம் நீங்கள் வெளிநாட்டு தியேட்டர்கள்ல கூட தமிழ்ப் படங்கள் பார்க்க கூடாதுதான். ஏன் தெரியுமா? வெகு சில படங்களைத் தவிர நிறைய படங்கள் 'தனிப் பார்வைக்கு' என்ற classification-லதான் வெளிநாடுகளுக்கு அனுப்பபடுகின்றன. அதைத்தான் அந்த் விநியோகஸ்தர்கள் தியேட்டரில் போட்டு விடுகிறார்கள். இது படத் தயாரிப்பாளர்களின் சம்மதத்தோடு நடக்கிறது என்பது வேறு விஷயம்.:))

//இதுல (நுண்)அரசியல் ஏதும் இல்லியே?????//

:-)) கொத்தனார் பதிவை ரொம்பவும் கொத்தறீங்கப் போல. அப்புறம் வீட்டுல 'சாப்பிட்டியா'ன்னு கேட்டாக் கூட நுண்ணரசியலைப் பார்த்து பிரமிச்சுப் போய் நிப்பீங்க. :-))

கயல்விழி said...

//தமிழ் சினிமாவின் நிகழ்கால சுனாமியான ஜே.கே.ரித்தீஷ் கூட தமிழ் தெலுங்கு என்று இருமொழிகளிலும் தயாராகும் ஒரு படத்தில் நடிப்பதாக கேள்வி. அன்னாரின் கலைத்தாகம் விரைவில் சாந்தி அடைவதாக//

இப்படி சொல்லி சொல்லியே ஜேகே ரித்தீஷ் போன்றவர்கள் பாப்புலர் ஆகிவிடுவார்களோ? பயமாக இருக்கிறது :(

நல்ல விமர்சனம், படம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீதர் நாராயணன் said...

//இப்படி சொல்லி சொல்லியே ஜேகே ரித்தீஷ் போன்றவர்கள் பாப்புலர் ஆகிவிடுவார்களோ? பயமாக இருக்கிறது :(//

நாம சொல்லித்தானா அவர் பாப்புலர் ஆகனும்... நீங்க வேற :-))

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.

sudgopal said...

How did I miss this???

sudgopal said...

நல்ல விமர்சனம்...