Loading...

தொடர்ச்சியாக - சரோஜா முதல் சாருவரை

September 8, 2008

சரோஜா - வெங்கட் பிரபுவின் இரண்டாவது படம். முதல் படம் பிரம்மாண்டமான வெற்றியான இயக்குநர்கள் பலர் இரண்டாவது படத்தில் சறுக்கியிருக்கிறார்கள். விதிவிலக்குகள் வெகு சிலர்தான். வெங்கட் பிரபு தப்பித்துவிட்டார். ஒரு புத்துணர்ச்சி படம் முழுவதும் விரவி இருக்கிறது. ஃபார்முலா கதை, க்ளிஷேக்கள் போன்றவற்றை கவனமாக தவிர்த்துவிட்டு படத்தை வெகு திறமையாக இயக்கியிருக்கிறார். நான்கு நண்பர்கள் சென்னையிலிருந்து ஹைதரபாத் செல்லும் பொழுது மாற்றுப் பாதையில் போக நேர்கிறது. அங்கே ஒரு கடத்தல் கோஷ்டி ஒரு பெண்ணை கடத்திக் கொண்டு வந்து அவளுடைய பணக்கார அப்பாவை ப்ளாக்மெயில் செய்கிறார்கள். அந்தப் பெண்தான் சரோஜா. சந்தர்ப்பவசத்தால் அந்த பெண் நண்பர்கள் குழாமைச் சேர எல்லாரும் சேர்ந்து வில்லன் கோஷ்டியிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். இறுதியில் அந்தப் பெண் அவள் அப்பாவை சேர்ந்தாளா? நான்கு பேரும் தப்பித்தார்களா? உச்சக் கட்டத்தில் சில எதிர்பாரா திருப்பங்களோடு படம் இனிதே முடிகிறது. பிரேம்ஜியின் காமெடி பெரும் பலம். சில ஒரிஜினல் டைலாக்குகளை ரசிக்க முடிகிறது. இயல்பாக நடிக்கிறார்கள். காமிரா உத்திகள் சில நன்றாக இருக்கின்றன. வில்லனின் அடியாள் சரோஜாவிடம் (கடத்தப்பட்ட பெண்) தவறாக நடக்க முனையும்போது காமிராவின் அதிர்வுகள் காட்சியை தெளிவில்லாமல் காட்டுகிறது. ஆனால் ஏதோ நடக்கிறது என்று மட்டும் ஒரு படபடப்பு உருவாக்குக்கிறது. 1.5 மணி நேரக் கதையை சாமர்த்தியமாக சில பாடல் காட்சிகள், திருமண நிச்சயதார்த்தம், எஸ்.பி.பி. சரணின் குடும்பப் பின்னனி, பிரும்மானந்தம் காமெடி என்று 2.5 மணி நேரத்திற்கு கொடுக்கிறார்கள். பிற்பகுதி இருட்டு கொஞ்சம் அயர்ச்சி தருகிறது. சரோஜா - புத்துணர்ச்சி. இறுதி கிரடிட்ஸில் வெங்கட் பிரபுவின் பெயருக்கு கிடைக்கும் கைதட்டல் நிச்சயம் ஒரு வெற்றிதான்.

பாலுமகேந்திரா - அழியாத கோலங்களும், மூன்றாம் பிறையும், வீடு-ம் தமிழ் சினிமா உலகின் மைல்கற்கள் என்பது நிச்சயம். குறிப்பாக வீடு படம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மனதை கசிய வைத்த படம். அதன் படைப்பாளி அனுஹாசனோடு விஜய் டிவியில் காபி குடிக்க வந்திருந்தார். கூடவே அவருடைய சிஷ்யர்கள் சீமான், ராமசுப்பு (கற்றது தமிழ்) மற்றும் வெற்றி மாறன் (பொல்லாதவன்). அவருடைய 'அது ஒரு கனாக் காலம்' அவ்வளவாக ரசிக்கவில்லை. விடலைப் பருவத்தின் இன்பாச்சுவேஷன் என்பதெல்லாம் சரி. ஆனால் காட்டிய களம் சரியாக அமையவில்லை. 'மூன்றாம் பிறை என்பது நானும் ஷோபாவும்தான்' என்று சொன்னார். "ஷோபாவின் பிரிவு தந்த வலியில் ஒரு சதவீதம்தான் அந்தப் படத்தின் உச்சக் காட்சியான இரயில்வே ஸ்டேஷனில் சீனு அழும்காட்சி." என்று சொன்னார். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் நடிகை மௌனிகா தன்னை அவருடைய மனைவியாக அடையாளப் படுத்திக் கொண்டது நினைவிற்கு வந்தது. நடிகைகள், இயக்குநர்களுக்கிடையே இருக்கும் இந்தவகை உறவானது இயல்பே என்று அவர் நினைத்திருப்பார்ப் போல. ஜீரணிக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. மேலும் அவர் சொக்கலிங்க பாகவதரைப் பற்றி நினைவு கூர்ந்த விஷயமும் ஏனோ அவர் படைப்புகளிலிருந்து அவரை அந்நியப் படுத்திவிட்டன. சிகரம் வைத்தாற்ப் போல காந்தியின் அகிம்சையை உச்சபட்ச வன்முறை என்று அவர் சொல்ல, அனுஹாசன் கூடவே 'கால்பெட்டி' வாசித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து 'வெள்ளைக்காரனை என்ன செய்ய முடியும்? அவன்கிட்ட வண்முறை எடுபடாது. அதனால் காந்தி இண்டெல்க்சுவல் வண்முறை என்ற பெயரில் அவனுடைய மனதை அடித்தார்' இப்படித்தான் ஏதோ சொன்னார். காந்தீயத்தைப் இப்படி ஒற்றைப் பரிமாணத்தில் சுருக்கியது அநியாயம். என்ன செய்ய... சில சமயம் படைப்பாளிகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது அந்த படைப்புகளை ரசிக்க சௌகரியமாக இருக்கும்.

குன்னக்குடி வைத்தியநாதன் - 'இந்தப் பாட்டை மூச்சு விடாம எஸ்பிபி பாடியிருக்கார். நான் அதை எப்படி வாசிக்கப் போறேன். பாருங்க' என்று அகலமாக சிரித்துக் கொண்டு வயலினிலிருந்து வில்லை எடுக்காமல் 'மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ' என்ற பாட்டை வயலினில் அவர் வாசிக்க, நாம் அவரையே பார்த்துக் கொண்டிருப்போம். பட்டையான விபூதி, பெரிய குங்குமப் பொட்டு. மணி பர்சை திறந்தாற்ப் போல பளிச்சென சிரிப்பு. குழைவானக் குரலில் ஏற்ற இறக்கத்துடன் பேசிக் கொண்டே கச்சேரி செய்யும் பாங்கு. ஏன் இவ்வளவு animated gestures என்று யோசிக்கிறவர்களுக்கு, அரங்கில் அத்தனை கண்களையும் இழுத்துப் பிடிக்கும் உத்திகளைப் பற்றி யோசித்திருக்க மாட்டார்கள். நிறையப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 'தோடி' என்ற படத்தில் சேஷகோபாலன் நடிக்க வைத்தியநாதன் இசையில் 'கொட்டாம்பட்டி ரோட்டிலே' என்ற ஜனரஞ்சகமான பாட்டு பிரபலம். இவரும் ஒரு காட்சியில் வந்து சேஷகோபாலனை கச்சேரி செய்ய வற்புறுத்துவார். திருவையாறு தியாகராஜ சபாவின் செயலாளராக பல கச்சேரிகளை ஒருங்கிணைத்து ஆளுமையை நிரூபித்தவர் இன்று நம்மிடம் இல்லை. மேடையிலிருந்து ரசிகனை நேரடியாக தன்னோடு இணைத்துக் கொள்ளும் வல்லமை படைத்த அவரைப் போன்ற இசைக் கலைஞர்கள் அபூர்வம். அவருடைய அசகாய சாதகம் இன்றைய இசை கலைஞர்களுக்கு ஒரு பாடம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.

இரா முருகன் - அரசூர் வம்சம் படித்த பொழுது பல்வேறு பிரமிப்புகள் அடைந்திருக்கின்றேன். எத்தனை செய்திகள். வரலாறு குறிப்புகள். அங்கதங்கள். போதாக்குறைக்கு மூத்தகுடிப் பெண்கள் பாடும் நலுங்குப் பாட்டுகளும், காற்றில் மிதந்து கொண்டு சிறுநீர் கழிக்க செல்லும் வயசனும் போல சில மேஜிக்கல் ரியாலிசம் (அப்படிச் சொல்லலாமா?) வேறு. அநாயசமாக எழுதுகிறார். பொதுவாக சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்வதில் எனக்கு அதிக நம்பிக்கை. இல்லையென்றால் நானெதற்கு ஒரு வலைப்பக்கத்தை திறந்து வைத்து எழுதிக் கொண்டிருக்கப் போகிறேன். ஒரு நாள் நமக்கும் எழுத்து கைவரும் என்ற நம்பிக்கையில்தானே. ஆனால் இரா.மு எழுதுவதைப் படிக்கும்பொழுது 'நாமெல்லாம் என்னத்த எழுதி... என்னத்த கிழிச்சு...' என்ற சுயபச்சாதாபம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அவருடைய தளத்தில் தமிழ் படைப்பிலக்கிய ரசனைக்கும் ஆங்கில படைப்பிலக்கிய ரசனைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி சொல்கிறார். 'இங்கீலிஷில் தமிழ் நாவல் எழுதினால் அது போய்ச் சேரும் வட்டம் மாணப் பெரிது'. விக்ரம் சேத், கோவிந்த் நிஹ்லானி போன்றவர்களோடு வோட்கா பானம் பண்ணிக் கொண்டு அரசூர் வம்சம் போன்ற புதினங்களின் ஆங்கிலப் பதிப்பை விவாதித்துக் கொண்டு... ம்ம்ம்... அடுத்த புனைவை ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்து விட வேண்டியதுதான்.

சாரு நிவேதிதா - ஆனந்த விகடனில் கோனல் பக்கங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னரே, புனைவுலகில் சாரு நிவேதிதா பெயர் பிரபலம்தான். கோனல் பக்கங்களை விடாமல் படித்து வந்திருக்கிறேன். ஆபிதீன் மற்றும் நாகூர் ரூமி சொன்ன குற்றச்சாட்டுகளையும் தாண்டி இன்றைக்கு உயிர்மை, கலாகௌமுதி போன்ற இதழ்களில் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார். அவருடைய எழுத்தில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் புனைவுலகின் தவிர்க்க முடியாத ஒரு படைப்பாளி என்பது உண்மை. சமீபமாக தனது தளத்தை கட்டணத் தளமாக மாற்ற ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்ப் போல. ஆன்லைனில் துக்ளக் ஒரு வாரத்திற்கு 20 USD கட்டணம் என்று வேறு உவமானம் கூறுகிறார். அப்படியா என்ன? அவர் முதலில் செய்ய வேண்டியது ஒரு Content management தளத்திற்கான அடிப்படையான RSS / Atom ஓடைகளை அளித்து, தேடும் வசதி சேர்த்து, அவர் எழுதியவற்றை வகைப் படுத்தி படிக்கிறவர்களுக்கு வசதி செய்து தரலாம். பிறகு கூகுள் ஆட்ஸ் போன்றவைகளை சேர்த்து, இணைய தளத்திற்கு அதிக வாசகர்களை ஈர்த்தாலே போதும். ஒரு எழுத்தாளரின் தளம் என்பதால் பல்வேறு புத்தகங்களை விற்பனைக்கு காட்சிப் படுத்தலாம் - 'நான் படிக்கும் புத்தகம்', 'இந்த புத்தகத்தைப் படித்தவர்கள், இதனையும் ரசித்தார்கள்' என்பது போல. அந்தப் புத்தகங்களை விற்பனை செய்யும் தளத்திற்கு நேரடி இணைப்பு கொடுப்பதின் ஆன்லைன் வர்த்தகம் செய்யலாம். சில கட்டுரைகளை கட்டணத்திற்கும் அளிக்கலாம். ஒட்டுமொத்தமாக கட்டணத் தளமாக மாற்றுவது என்பது இணையத்தில் தற்கொலைக்கு சமானம். அவர் தளத்தில் சுட்டிய ப்ளாக்குகளுக்கு அதிக ஹிட்கள் கிடைக்கின்றன என்று சொல்கிறார்கள். இந்த ப்ராண்டிங்கை வைத்து வர்த்தகத்தில் சாதிக்கும் சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. ஞாநி போன்றவர்கள் restricted access-உடன் தளங்கள் நடத்துகிறார்கள். ஆனால் இணையத்திற்கு ஏற்றவாறு சரியான முறையில் தனது எழுத்தை மார்கெட்டிங் செய்வதில் இரா. முருகன் ஒரு முன்னோடி (Pioneer). ஒருவருடைய எழுத்து நிறைய பேரை எளிதாக சென்றடையும்பொழுது அவருடைய படைப்புகள் காசு கொடுத்து வாங்கும் சாத்தியங்கள் கூடுகின்றன. இதை catapult effect என்பார்கள். உண்டிவில்லில் பின்னால் அதிகமாக இழுத்துவிட்டு விடும்பொழுது முன்னால் அதிகதூரம் பாய்கிறது.

தொடர்ந்து எழுதுவது என்பதே எனக்கு ஒரு சவால்தான். ஒரு சில புனைவுகள், பயனக் கட்டுரைகள் என்று அரைகுறையாக எழுதப்பட்ட பலவும் அப்படி அப்படியே கிடக்கின்றன. நேரப் பங்கீடு என்பது மிகவும் கடினமானதாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி ஏதோ எழுதிக் கொண்டு 'இருக்க'த்தான் ஆசை. 'இணையமும் இருத்தலியலும்' என்று அடுத்த பதிவு எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் :-)

25 மறுமொழிகள்:

இலவசக்கொத்தனார் said...

எல்லாரும் சரோஜா நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. பார்த்துட வேண்டியதுதான். இப்படி ஏத்தி விட்டுப் பார்த்த அஞ்சாதே அனுபவம்தான் கொஞ்சம் பயமுறுத்துது!!

படைப்பாளியைத் தெரிஞ்சுக்கிறது எல்லாம் பம்மாத்து. அவங்களும் சராசரி மனிதர்கள்தான் என்ற புரிந்துணர்வு இருந்தால் படைப்பை மட்டுமே பார்ப்போம்! (கொஞ்சம் சீரியஸா எழுதிப் பார்த்தேன். வேலைக்கு ஆவலை. எச்சூஸ்மி!)

குன்னக்குடி - ஆத்மா சாந்தி அடைய எனது பிரார்தனைகள்!

இரா முருகன் - நீர் சொல்லித்தான் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன். அரசூர் வம்சம் எல்லாம் கொஞ்சம் பெரிய லெவலா இருக்கு. இருந்தாலும் படிச்சாச்சு. ஆனா அவரது வலைப்பூவில் எழுதும் விஷயங்கள் நல்லாவே இருக்கு.

கடைசி மேட்டர் பத்திக் கருத்து சொல்லலை. ரொம்பவே கடுப்பில் இருக்கேன் அந்த ஆள் பெயரில். பதிவை கட்டணப் பதிவாக மாற்றுவதற்கு இல்லை!

Ram said...

Nalla eluthureenga.

Sridhar Narayanan said...

இ.கொ,

யூ த பர்ஸ்டு? ஆமாம் :-)

கவலைப்படாதீர்கள். க்ளிஷேக்கள் இல்லாத படம்தான். சீட் நுனியில உக்கார வைக்கிற த்ரில்லர் எல்லாம் இல்லை. ஆனா நல்லா இருக்கும் பாருங்க.

//கொஞ்சம் சீரியஸா எழுதிப் பார்த்தேன். வேலைக்கு ஆவலை. எச்சூஸ்மி!//

எதுக்கு இந்த விஷப்பரீட்சை. நானும் வேற நீங்க என்ன சொல்றீங்கன்னு ஒரு தடவைக்கும் மூணு தடவை படிச்சுப் பாத்திட்டிருக்கேன். :-(

//அவரது வலைப்பூவில் எழுதும் விஷயங்கள் நல்லாவே இருக்கு//

அவர் குங்குமம், வார்த்தை போன்ற பத்திரிகைகள்ல எழுதறதை வலைதளத்திலேயும் போட்டுடறார்.

ஆமாம் இந்த 'வலைப்பூ' என்றால் என்ன? பல வலைத்தளங்கள் இணைந்ததுதான் 'வலைப்பூ' என்று நினைக்கிறேன். Blog Aggregator. தமிழ்மணம் மாதிரி. நாம்தான் தவறா உபயோகப் படுத்தறோமோ?

Sridhar Narayanan said...

//Ram said...
Nalla eluthureenga.
//

ராம்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கள்குக்கும் மிக்க நன்றி :-)

SurveySan said...

//குன்னக்குடி - ஆத்மா சாந்தி அடைய எனது பிரார்தனைகள்! //

:(

சரவணகுமரன் said...

//சில சமயம் படைப்பாளிகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது அந்த படைப்புகளை ரசிக்க சௌகரியமாக இருக்கும்//

உண்மைதான்...

ச.சங்கர் said...

உள்ளேன் அய்யா.

:))

ச.சங்கர் said...

'''இலவசக்கொத்தனார் said...

எல்லாரும் சரோஜா நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. பார்த்துட வேண்டியதுதான்'''

படத்தைப் பத்திதான் சொல்றீங்க இல்லியா இலவசம்? ஒரு புரிந்துணர்வுக்காக கேட்டேன்:)

ambi said...

// ஒரு நாள் நமக்கும் எழுத்து கைவரும் என்ற நம்பிக்கையில்தானே. //


அட! தன்னடக்கமாம் (கவுண்டர் குரலில் படிக்கவும்) :))

சாதுர்யமான தலைப்பு. பொதுவா நம்மாளுக அவியல், பொறியல், உப்புமானு இந்த மாதிரி பதிவுகளுக்கு தலைப்பு வைப்பாங்க. :p

//படத்தைப் பத்திதான் சொல்றீங்க இல்லியா இலவசம்? ஒரு புரிந்துணர்வுக்காக கேட்டேன்://

ROTFL :))

Anonymous said...

தல கொத்தனார் என்ன சொல்ல வாராருன்ன்னா - படைச்சது அய்யன்மீரா அடுத்தாத்துகாரா, (போச்சுடா) பார்ல உட்கார்ந்து படைக்கிறாரா, மார்ல சாய்ந்து படைக்கிறாரா, படைக்கிறது இலக்கியமா, எலக்கியமான்னு பகுத்தறிய (மறுபடியும் போச்சுடா - இது என்னோட சோதனையான தமிழுக்கு) கூடாதுன்னு சொல்லுறாரு. ஏதோ எனக்கு தெரிஞ்ச கேள்வியா இருக்கேன்னு சாய்ஷ்ல விடாம விளக்கியிருக்கேன், (விளங்கிடும்) பார்த்து மார்க் போடுங்க கொத்தனாரய்யா

Boston Bala said...

பதிவு 'எளிமையாகவே...' ஆனால் கனமாக இருக்கிறது.

Anonymous said...

போச்சுடா அடுத்து, பாபாவோட ஆக்ஷிமோரான் பின்னூட்டத்துக்கு விளக்கம் எழுதணுமா, எளிமையான கனம்னா - தாவணி கட்ற பாவனா

இலவசக்கொத்தனார் said...

//படத்தைப் பத்திதான் சொல்றீங்க இல்லியா இலவசம்? ஒரு புரிந்துணர்வுக்காக கேட்டேன்:)//

சங்கரு,

நான் படைப்பைப் பத்தி சொன்னேன்! ;-)

Anonymous said...

காலையிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் வேலை பார்த்ததால பதிவ பத்தியும் ஒண்ணும் சொல்லமுடியல சொல்லிரேன்.
சரோஜா - பார்த்துவிட்டு
பாலு - நானும் பார்த்தேன், எனக்கென்னமோ அழகர்கோவில்ல குரங்குக எல்லாம் கூட்டமா உட்கார்ந்து ஒருமாதிரி ஒண்ணுக்கொண்னு அனுசரனையா பேன் பார்க்கும், அந்த சீன் எதுக்கு ஞாபகம் வந்ததுன்னு தெரியல -கொத்தனார் உதவி please
குன்னக்குடின்னு படிச்சவுடனே - இந்திராகாந்தியும், எம்ஜிஆரும் இறந்தபோது அவர் DD ல வாசித்தத பார்த்ததும், காரைக்குடிக்கு போனதும், அரியக்குடி அவர் பிறந்தது அய்யங்கார்குடி, அறுவது ஆண்டுகளூக்கும் மேல் பறந்தது அவர் குடின்னு ஏதோ ஞாபகம் வந்தது
முருகன் - சுஜாதா, அப்பப்போ சொல்லியிருந்தாலும் இனிமேதான் யோசிக்கனும், ஆனால் உள்ள விக்ரம்சேத்ன்னு படிச்சவுடனே, போனவாரம் பாலினக் குறைபாடும் அதுக்கு காரணமான ஜீனும் (இது உண்மையிலே ஜீனுப்பா, இங்க இத ஏதோ மார்க்கெட் மீனு ரேன்ஞ்க்கு டீல் பண்றாங்க) தொடர்பா பற்றி Trends in Endocrinology la படிச்ச ஒரு ஆராய்ச்சி கட்டுரை ஞாபகம் வந்தது.
கடைசி அடிகளார் பற்றி - ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. மற்றபடி அனைத்தும் நலம்

Sridhar Narayanan said...

சர்வேசன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்க இரங்கல் பதிவையும் பார்த்தேன்.

சரவணகுமரன்,

வாங்க. கருத்துக்கு நன்றி.

சங்கர்,

உங்க தொடர் ஊக்கபபடுத்துதலுக்கு நன்றி. நல்லாக் கேட்டீங்க கொத்தனாரை :-))

அம்பி அப்பா,

வாங்க வாங்க. கொத்தனாரைச் சொன்னா அம்புட்டு சிரிப்பாணியா. சின்னப்புள்ள கணக்கா. :-))

பாலா,

வாங்க வாங்க. பாராட்டுகளுக்கு (அப்படித்தானே?!?!) நன்றி.

Sridhar Narayanan said...

அனானி நன்பரே,

மூனு கமெண்டும் நீங்கதான்னு நினைக்கிறேன். பிரிச்சு மேயறீங்களேண்ணா :-)

//கடைசி அடிகளார் பற்றி // :-))))

பேரைச் சொல்லிப் போடுங்களேன்.

Anonymous said...

ஹா ஹா, அது நீங்க எழுதியிருந்த கடைசி அடிகளார பத்தீங்க (பிச்சைபுகினும் குடித்தல் நன்றேன்னு ஆளுமையை நிருபிக்கிற-படிக்கிறதேயில்ல, நண்பர்கள் படிச்சுட்டு சொல்றத கேட்கும் போதே தண்ணியடிச்சுட்டு சாக்கடையில நான் கிடக்கிறமாதிரி ஒரு நல்ல பீலீங்) 13ம் அடிகளார் பற்றி இல்லை ! நன்றி.

Sridhar Narayanan said...

அனானி அன்பருக்கு,

கடைசி அடிகளாரைப் பற்றி எனக்கு புரிஞ்சிடுச்சி.

நான் சொன்னது உங்க பெயரைச் சொல்லிப் பின்னூட்டலாமேன்னு சொன்னேன். :-)

வெட்டிப்பயல் said...

உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு... நிறைய எழுதுங்க. படிக்க ஆவலாக இருக்கிறோம் :)

பரத் said...

arumaiyaa irukku pathivu...
VaazthukkaL!!
-Barath

Sridhar Narayanan said...

வாங்க அனானி நன்பரே - சீக்கிரமா மெயில்ல தட்டிவிடறேன்.

பாலாஜி - வாங்க. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :-)). அடுத்த தொடர்கதை எப்பங்க?

பரத் - வாங்க. உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

ramachandranusha(உஷா) said...

'நாமெல்லாம் என்னத்த எழுதி... என்னத்த கிழிச்சு...' என்ற சுயபச்சாதாபம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை//
அம்பி ரிப்பீட்டு :-) சீக்கிரம் உங்களிடம் இருந்து மாய யதார்த்த
கதையை எதிர்ப்பார்க்கிறோம்

Sridhar Narayanan said...

வாங்க உஷாக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :-)

மாய யதார்த்த கதையா? அக்காவ்... நீங்களுமா இப்படி... அவ்வ்வ்வ்வ்வ் :-)

அனுஜன்யா said...

ஸ்ரீதர்,

இதுதான் உங்கள் ப்ளாக் (வலைப்பூ என்றால் தப்பு என்பீர்கள்) பக்கம் முதல் முறை. சுஜாதா நடை ஞாபகம் வருகிறது. Am sure you must have been inspired by him. நன்றாக எழுதுகிறீர்கள். ஆதலினால்.... மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

Sridhar Narayanan said...

அனுஜன்யா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஏற்கெனவே 'பைசல் ஆன கணக்குக்கு' வந்திருந்தீர்களே. மறந்துவிட்டீர்களா? :-))

மற்றபடி உங்களின் பாராட்டுக்கு (அப்படித்தானே?!) நன்றி.