September 22, 2008

ஒருபக்கம்: எல்லா எழுத்தும் எழுத்தல்ல

மீபத்தில் ஒரு நண்பருடன் விவாதித்துக் கொண்டிருக்கையில் எழுத்தை எப்படி அணுக வேண்டும் என்று ஒரு கேள்வி எழுந்தது. 'எழுத்திற்கு ஒரு அறம் தேவை' என்று வாதிட்டார் நண்பர். அந்த அறம் என்ன என்று விவாதிக்க புகுந்த போது, 'நீங்கள் எழுத்தை ஒழுக்கம் சார்ந்து அணுகுகிறீர்கள்' என்றும் சொன்னார். அறமும், ஒழுக்கமும் எந்தப் புள்ளியில் பிரிகிறது என்ற ஒரு குழப்பம் எழுகிறது. என்னைப் பொறுத்தவரையில் நேர்மையான எழுத்திற்கு எனது ஓட்டு எப்பொழுதும் உண்டு. ஒரு படைப்பாளியை தொடர்ந்து படிக்கும்போதே நேர்மையைப் பற்றிய ஒரு படிமம் கிடைத்து விடுகிறது நமக்கு. இந்தியாவில் குழந்தைகள் கவனிக்கப் படாமல் இருக்கிறார்கள் என்று கவலைப் பட்டுக் கொண்டே கல்லூரிப் பெண்களின் மேல் மறைமுக பாலியல் வக்ரத்தை பிரயோகிக்கும் படைப்புகளை எந்த அறத்திலும் சேர்க்க முடியாது என்பது என் எண்ணம். சரி விடுங்கள். ஒரு மத்தியதட்டு மூர்க்கனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

ஒரு காலத்தில் பத்திரிகைகளில் வருவதைத்தான் படிக்க முடியும் என்ற நிலை மாறி இன்று கட்டற்ற வெட்டவெளியில் ஏராளமாக படிக்க மற்றும் பார்க்கக் கிடைக்கிறது. இணைய தொழில்நுட்பத்தின் வீச்சைப் புரிந்து கொள்வதில் இன்னமும் நிறைய பேருக்கு சிக்கல் இருக்கிறது. இந்த மாதிரி transition காலத்தில் ஏற்படுகின்ற வழக்கமான சிக்கல்தான். பதிவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. எழுத்தாளர்களின் குறிக்கோள் எப்பொழுதும் உள்ளடக்கமும், பதிப்பகத் துறையும், அதிக வாசகர்களும்தான். வலைப்பதிய அத்தனை அகண்ட குறிக்கோள் தேவையில்லை. தீவிர உலக எழுத்தாளர்கள் பலரும் வலைத்தளத்தை ஒரு முகவரியாக, வாசல்படியாக (gateway) வைத்துக் கொண்டு தங்கள் எழுத்து திறமையை சந்தைபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். தீவிர வலைப் பதிவர்களும் தங்கள் வலைத்தளத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்துக் கொண்டு பல்வேறு வணிக சாத்தியங்களை அடையத்தான் செய்கிறார்கள். ஆனால் இரண்டு நிலைக்குமிடையே இன்னமும் பெரும் இடைவெளி இருக்கிறது. ஜே கே ரௌலிங்கின் ஹாரி போர்ட்டர் புத்தகம் படைத்த சாதனையை உதாரணமாகச் சொல்லலாம். தற்சமயம் வலைப்பதிவுகள் அம்மாதிரியான பெரும் வணிக வெற்றிகள் / விமர்சக ஈர்ப்புகள் சாத்தியமில்லை. இனி வருங்காலத்தில் இந்த வித்தியாசம் குறையலாம். இப்பொழுதே எழுத்தாளர்கள்களுக்கு குறைந்தபட்ச தகுதியாக கணிணியில் தட்டச்சு செய்யும் முறையை தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது.

நேர்மையான எழுத்தைப் பற்றி பேசும்போது சென்ற வாரம் பார்த்த ஒரு திரைப்படம் நினைவுக்கு வருகிறது. விக்டர்/விக்டோரியா ஒரு ம்யூஸிக்கல் நகைச்சுவைப் படம். ஓரினச் சேர்க்கை, க்ராஸ்-ட்ரெஸ்ஸிங், gay கலாச்சாரம் போன்ற பல விசயங்களை பின்புலமாக வைத்து என்பதுககளில் எடுக்கப்பட்ட அற்புதமான நகைச்சுவை திரைப்படம். யாரையும் காயப்படுத்தாத ரசமான நகைச்சுவை உத்தரவாதம். பாரிஸில் விக்டோரியா என்ற பாடகி நைட் கிளப்புகளில் வேலை தேடுகிறாள். அவளுடைய நேர்த்தியான குரலுக்கு வரவேற்பு இல்லை. பின்னர் அவள் கேரோல் டாட் (Carroll Todd)என்னும் ஆண் பாடகரை சந்திக்கின்றாள். டாட் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழும் gay. டாட்-இன் யோசனைப்படி விக்டோரியா விக்டர் என்னும் ஆணாக மாறுகிறாள். அதாவது பெண் போல வேடம் போடும் (female impersonator) ஆணாக அவள் வேடம் போட்டு பாரீஸின் நைட் கிளப்புகளில் பாடுகிறாள். நடனமாடுகிறாள். வெகு விரைவில் பாரிஸின் இரவு நட்சத்திரமாக ஆகின்றாள். அவள் பாடலையும் ஆட்டத்தையும் காண வரும் கிங் மார்செண்டின் மேல் காதல் கொள்கிறாள். கிங் ஒரு சிக்காகோவிலிருந்து வந்திருக்கும் நிழலுலக தாதா. விக்டோரியா மேல் ஈர்க்கப்பட்டாலும் அவள் ஒரு ஆண் என்பதால் அவனுக்கு தடுமாற்றம். பிறகு பெண் என்று கண்டுபிடித்து இருவரும் காதல் செய்கிறார்கள். ஆனால் விக்டோரியாவிற்கு தன்னுடைய தற்போதைய தொழிலை விட மனமில்லை. ஆண் கிராஸ் ட்ரெஸ்ஸ்ராக இருந்து கொண்டே கிங்-கை காதலிக்க நினைக்கிறாள். கிங்-க்கோ மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலைமை. விக்டோரியா மேல் இருக்கும் காதலால் விக்டர்-உடன் வாழ சம்மதிக்கிறான். தொடர்ந்து அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்று சுவையான சம்பவங்கள் மூலம் காட்டுகிறார்கள்.

இந்தப் படத்தின் நல்ல நகைச்சுவையை விட அதன் நேர்மை என்னை கவர்ந்தது. பசியினால் தனது ஒழுக்கங்களை (virtues) மீறத் தயாராக இருக்கும் விக்டோரியாவிற்கு அதனால் எந்த குற்றவுணர்வும் இருப்பதில்லை. இருக்க வேண்டிய தேவையில்லை. ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர்களை வேற்றுகிரகவாசிகளாகவோ, விளிம்புநிலை மனிதர்களாகவோ உருவகப் படுத்தாமல் இயல்பாக சித்தரித்திருந்த விதம் மிகவும் பாராட்டுகுரியது. நான் ரசித்த வசனம்: கிங் ஆணுடடயில் இருக்கும் விக்டோரியாவிடம், 'நீ ஆணாக இருந்தாலும் பரவாயில்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்லி முத்தமிடுகிறான். பதிலுக்கு விக்டோரியா 'நான் ஆண் இல்லை' என்கிறாள். உடன் கிங் 'அப்படியென்றாலும் எனக்கு கவலையில்லை' என்று மீண்டும் முத்தமிடுகிறான் :-) A classical romance.

லிவேட்டர் டாக் (elevator talk) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உடனடி உரையாடல் என்று சொல்லாம் என்று நினைக்கிறேன். எலிவேட்டரில் பயனிக்கும் போது அறிமுகமில்லாத சக பயனியிடம் அதிகபட்சம் புன்னகைத்திருப்போம். உடனடி உரையாடல் எத்தனை முறை சாத்தியப்பட்டிருக்கிறது? முன்பின் அறிமுகம் இல்லாத அவரிடம் அந்த குறுகிய கால அவகாசத்தில் எப்படி பேச்சை துவக்குவது? இம்மாதிரியான உடனடி உரையாடல் தொடங்கும் திறமை நிறைய இடத்தில் தேவைப்படுகிறது. நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் பொழுதோ, புதிய பொருட்களை விற்பனை செய்யும் பொழுதோ இந்தத் திறமை நிச்சயமாக கைகொடுக்கிறது. 30-40 விநாடிக்குள் எதிரிலிருப்பவரோடு சிநேகமாகி அவரையும் உரையாடலில் பங்கேற்கச் செய்தல் மிகவும் கடினமான ஒரு செயலே. சிலசமயம் இம்மாதிரி உரையாடல் வேறுவகை பலனைத் தரும் சாத்தியமும் உண்டு. ஒரு லிஃப்டில் நடக்கும் சிறு உரையாடல் கீழே.

முதல் ஆள்: Hi there
2-ஆம் ஆள்: Hello
முதல் ஆள்: Watt's my name. you?
2-ஆம் ஆள்: (puzzled): What's your name?
முதல் ஆள்: Right!
2-ஆம் ஆள்: Oh Wright?
முதல் ஆள்: So, What about you?
2-ஆம் ஆள்: I am Guud.
முதல் ஆள்: Great. Your good name?
2-ஆம் ஆள்: Guud.
முதல் ஆள்: You told that. Your name?
2-ஆம் ஆள்: Thats my name.
முதல் ஆள்: 'Thot' is your name?
2-ஆம் ஆள்: Yes. Guud.
முதல் ஆள்: Good. Is that Greek?
2-ஆம் ஆள்: No. Dutch.
முதல் ஆள்: Thot is Good.
2-ஆம் ஆள்: See you then Wright.

இருவரும் வெளியேறி சென்றுவிடுகிறார்கள் :-)

15 மறுமொழிகள்:

இலவசக்கொத்தனார் said...

//இந்தியாவில் குழந்தைகள் கவனிக்கப் படாமல் இருக்கிறார்கள் என்று கவலைப் பட்டுக் கொண்டே கல்லூரிப் பெண்களின் மேல் மறைமுக பாலியல் வக்ரத்தை பிரயோகிக்கும் படைப்புகளை எந்த அறத்திலும் சேர்க்க முடியாது என்பது என் எண்ணம். //

இதை யாரு செய்யறா?

ambi said...

குடுத்திருக்கும் லேபிளிகளில் ஒன்னே ஒன்னு குறையுது. என்னனு நான் சொல்ல மாட்டேன். கொத்ஸ் வந்து சொல்வார் பாருங்க. :))

இன்னிக்கு நான் தான் பஷ்ட்டா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/ஒரு மத்தியதட்டு மூர்க்கனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்./

உங்களை இந்த அளவிற்குக் கோபப்படுத்திய அந்த மூர்க்கன் யார்? சொல்லுங்க, ஒரு வழி பண்ணிடலாம் :)

/ இந்தியாவில் குழந்தைகள் கவனிக்கப் படாமல் இருக்கிறார்கள் என்று கவலைப் பட்டுக் கொண்டே கல்லூரிப் பெண்களின் மேல் மறைமுக பாலியல் வக்ரத்தை பிரயோகிக்கும் படைப்புகளை எந்த அறத்திலும் சேர்க்க முடியாது என்பது என் எண்ணம்/

இங்கு மாறுபடுகிறேன்.

ambi said...

நீங்க சொன்ன படம் பல்வேறு ரூபங்களில், சிலபல காட்சிகளாக/சீன்களாக தமிழ் படங்களில் வந்ருக்கு, இனியும் வரும். :))

அனுஜன்யா said...

ஸ்ரீதர், நல்ல, நீண்ட பதிவு.

//இந்தியாவில் குழந்தைகள் கவனிக்கப் படாமல் இருக்கிறார்கள் என்று கவலைப் பட்டுக் கொண்டே கல்லூரிப் பெண்களின் மேல் மறைமுக பாலியல் வக்ரத்தை பிரயோகிக்கும் படைப்புகளை எந்த அறத்திலும் சேர்க்க முடியாது என்பது என் எண்ணம். சரி விடுங்கள். ஒரு மத்தியதட்டு மூர்க்கனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். //

சரியான, நேர்மையான விடை இல்லாதபோது வீசப்படும் அவதூறுகளுள் ஒன்று 'மத்தியதட்டு மூர்க்கன்'. மற்றொன்று 'போலி அறிவுஜீவித்தனம்'.

எழுத்தாளர்கள்/பதிவர்கள் அவ்வப்போது அலசப்பட வேண்டிய, சுவையார்வமான விடயம். தொழில்நுட்ப சுனாமியில் தப்பிக்க இணையம் அவசியம் என்ற அளவில் எழுத்தாளர்கள் இருப்பினும், அச்சு ஊடக ஆட்சிக்கே அவர்கள் ஏங்குவது புரிந்துகொள்ள வேண்டியதே. அவர்கள் எல்லாம், மற்றவர்கள் அளவுகோலின்படி உயர்ந்து, இந்த நிலைக்கு வந்திருக்கையில், பதிவர் நாமெல்லாம், ஒரு மடி கணினி, ஒரு ஜிமெயில் அக்கௌன்ட் கிட்டியவுடன் 'ராமாயணம்.. ஒரு மீள் பார்வை' என்று புறப்பட்டுவிடுகிறோம். ஆயினும் பட்சி சொல்கிறது, இணையம் வெல்லுமென்று.

பெண்ணாக வேடம் போடும் ஆணாக ஒரு பெண்! தலைய சுத்துது தல!

Elevator talk நாமெல்லாம் தின வாழ்வில் சந்திக்கும் போராட்டம் தான். Watt & Gudd போல Bush, Rice, Hu, Yassir Arafat, Kofi Anan இவர்கள் பெயர்களைக் கலந்துகட்டி ஒரு மெயில் fwd உண்மையிலேயே உலகைச் சுற்றி வந்தது. நீங்களும் படித்திருக்கக் கூடும்.

அனுஜன்யா

Sridhar Narayanan said...

// இலவசக்கொத்தனார் said... //

வாங்க தல. இதெல்லாம் ஒரு உதாரணம்தான். அப்படியே எடுத்துக்கபிடாது. ஆமாம் :-)

// ambi said...
இன்னிக்கு நான் தான் பஷ்ட்டா?
//

வாங்க அம்பி அப்பா. நீங்க வர்றதுக்கு முன்னாடியே உங்க ஊர் பெருந்தல வந்திட்டுப் போய்ட்டாரே :-) பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :-))

லேபிள் எல்லாம் கணக்கில எடுத்துக்காதீங்க.

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
/ஒரு மத்தியதட்டு மூர்க்கனாகவே //

வாங்க சுந்தர் அண்ணா!

நமக்கெல்லாம் கோவமெல்லாம் கிடையவே கிடையாதுங்க :-) அப்படியாப்பட்ட எருமைத் தோலு.

Middleclass-தனம் என் ரத்தத்திலே ஊறினது. அதனால நானே சொல்லிக்கிறதுதான். :-))

//இங்கு மாறுபடுகிறேன்.//

உங்க கருத்துக்கு நன்றிங்க. விளக்கமாச் சொன்னீங்கன்னா என்னுடைய அறிவுக்கு உரைக்குதான்னு பாக்கலாமே. :-))

Sridhar Narayanan said...

வாங்க அனுஜன்யா,

உங்க வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி :-)

//ஒரு மடி கணினி, ஒரு ஜிமெயில் அக்கௌன்ட் கிட்டியவுடன் 'ராமாயணம்.. ஒரு மீள் பார்வை' என்று புறப்பட்டுவிடுகிறோம். //

அதில் தப்பில்லை. எழுத்து அதனுடைய இடத்தை அதாகவே தீர்மானித்துக் கொள்கின்றன இல்லையா? :-)

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் எதிர்காலத்தில் எழுத்தின் வடிவங்கள் இன்னமும் நிறைய மாற்றங்களோடு இருக்கும் இல்லையா?

//பெண்ணாக வேடம் போடும் ஆணாக ஒரு பெண்! தலைய சுத்துது தல! //

படம் கிடைச்சாப் பாருங்க. நல்ல இசை. நடனம். நகைச்சுவை.

//மெயில் fwd உண்மையிலேயே உலகைச் சுற்றி வந்தது//

அந்த மெயிலைத்தான் கொஞ்சம் மாறுபடுத்தி போட்டிருக்கேன் :-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சரி :)


சாருவின் எழுத்துகளை என யூகிக்கிறேன். சரியா எனச் சொன்னால், மேற்கொண்டு உரையாடலாம்.

அடிப்படையில், ஒழுக்கரீதியான பார்வையே அவ்வரிகளில் எனக்குத் தென்படுகிறது. but, let me wait till your response!

யோசிப்பவர் said...

I like that elevator talk. Thots Guud!!!;-)

சென்ஷி said...

//இந்தியாவில் குழந்தைகள் கவனிக்கப் படாமல் இருக்கிறார்கள் என்று கவலைப் பட்டுக் கொண்டே கல்லூரிப் பெண்களின் மேல் மறைமுக பாலியல் வக்ரத்தை பிரயோகிக்கும் படைப்புகளை எந்த அறத்திலும் சேர்க்க முடியாது என்பது என் எண்ணம். சரி விடுங்கள். ஒரு மத்தியதட்டு மூர்க்கனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
//

சுந்தர் கூறியதுபோல் அது சாருதானா :))

ச.சங்கர் said...

///தீவிர உலக எழுத்தாளர்கள் பலரும் வலைத்தளத்தை ஒரு முகவரியாக, வாசல்படியாக (gateway) வைத்துக் கொண்டு தங்கள் எழுத்து திறமையை சந்தைபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.///

தமிழில் இது இப்போதைக்கு சாத்தியமா என்று தெரியவில்லை.
இன்னும் பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு கணினி,ப்ளாக் இன்ன பிற அறிமுகம் இல்லை. கணினி அறிமுகம் உள்ளவர்கள் பெரும்பாலும் தீவிர வாசகர்கள் இல்லை.

Sridhar Narayanan said...

//அடிப்படையில், ஒழுக்கரீதியான பார்வையே அவ்வரிகளில் எனக்குத் தென்படுகிறது. //

அப்படித்தான் தெரிகிறது. சொல்ல வந்ததை சரியாக சொல்லாத மாதிரி :-)

//I like that elevator talk. Thots Guud!!!;-)//

வாங்க யோசிப்பவர். இதோட மூலமாக ஒரு தொலைபேசி உரையாடல் இருக்கும் பாருங்க. இன்னமும் பிரமாதமாக இருக்கும் :-)

Sridhar Narayanan said...

வாங்க சென்ஷி! :-) வருகைக்கு நன்றி.

//தமிழில் இது இப்போதைக்கு சாத்தியமா என்று தெரியவில்லை.//

வாங்க சங்கர்! சிலர் தற்பொழுது தொடங்கியிருக்கிறார்களே. இரா முருகன், ஜெயமோகன், எஸ்ரா, சாரு போன்ற சில எழுத்தாளர்களுக்கு வலைத்தளம் இருக்கிறது.

ச.சங்கர் said...

ஸ்ரீதர் நாராயணன்

///இரா முருகன், ஜெயமோகன், எஸ்ரா, சாரு போன்ற சில எழுத்தாளர்களுக்கு வலைத்தளம் இருக்கிறது.///

ஆனால் இது இவர்களது வாசகர் வட்டத்தை அதிகப் படுத்த இப்போதைக்கு எந்த அளவு உபயோகமாக இருக்கும் ? என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு.

Sridhar Narayanan said...

வாங்க சங்கர்,

கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கிறது. எழுத்தாளர்களின் எழுத்தின் மாதிரியையும் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையும் நீங்கள் அறிய உதவுகிறது. இதனால் அவர்கள் புத்தகங்களுக்கு அதிக விற்பனை சாத்தியமே.

என்ன... தமிழ் பதிப்பகங்கள் இன்னமும் முனைப்புடன் இணைய புத்தக சந்தையை உபயோகபடுத்தவில்லை. Barnes Nobles போல வாசகர்களுடன் உரையாடலை அதிகபடுத்தி வெகுமதி தந்திரங்கள் மூலமாக விற்பனையை அதிகரிப்பது சாத்தியமே.

பெங்களூரு அவென்யூ தெருவில் ஏகப்பட்ட புத்தகக் கடைகள். ஒரே ஒரு இணையக் கடையில் அத்தனை புத்தகங்களையும் வரிசைப்படுத்திக் கொடுங்கள். ஆன்லைனில் இதைப் போல பத்து மடங்கு வியாபாரம் செய்யும் சாத்தியம் உண்டு.