November 27, 2008

மரத்துப் போய்விட்ட மனது

மும்பையில் தொடரும் தீவிரவாத தாக்குதலில் பலியான மக்களுக்கு அஞ்சலி.

மேலும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போலிசார், ராணுவம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் எல்லாரும் வெற்றி பெற்று மும்பை மாநகரம் அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப பிரார்த்தனைகள்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் ஒரு வேலை நிமித்தமாக அமெரிக்காவில் சிகாகோ பக்கத்தில் ஒரு சிறிய ஊரில் ஆறு மாதங்கள் வேலை பார்த்தேன். ஒரு மென்பொருள் வடிவமைக்கும் சிறிய இந்தியக் குழுவில் நானும் ஒரு அங்கதினன். அலுவலகம் போவது / வருவது எல்லாமே குழுப் பயனம்தான். காலையில் அலுவலகம் சென்றதுமே பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒரு பிளேன் நியூயார்க் உலக வர்த்தக கோபுரத்தை தகர்த்து விட்டது என்று செய்திகள். பெரும் பரபரப்பு தொற்றிக் கொள்ள ‘டைம்ஸ்’ இணைய தளத்தை பார்வையிட்டு எங்கள் குழுவிடையே விவாதித்துக் கொண்டிருந்தோம். வீட்டிற்கு வந்து Fox News-ல் பார்க்கும்போது இரண்டாம் கோபுரம் தாக்கப்பட்டதை லைவ்-ஆக காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இந்தியாவிற்கு தொலைபேச முடியாத அளவிற்கு எல்லா இணைப்புகளும் உபயோகத்தில் இருந்தன. சிகாகோவில் 105 மாடி உயரக் கட்டிடம் (’சியர்ஸ் டவர்ஸ்’) இருந்ததினால் அடுத்த இலக்காக அது இருக்குமோ என்று எல்லாரும் பயந்து கொண்டிருந்தோம். எல்லாவற்றையும் விட ஆசியர்கள் மேல் அமெரிக்கர்களுக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அந்த நகரத்தில் இருந்து சொற்ப ஆசியர்களில் நாங்களும் அடக்கம். ஓரிரு மாதங்கள்வரை தெருவில் நடந்து போனால் கூர்மையான பார்வைகளை தவிர்க்க முடியாது. ஒரு முறை சைக்கிளில் சென்று கொண்டிருந்த அமெரிக்கர் ஒருவர் நின்று என்னை உறுத்துப் பார்த்துவிட்டு உரக்க வெறுப்பை உமிழும் வார்தைகளை கொட்டிவிட்டுப் போனார்.

2001-க்கு முன்னர் நடந்த மும்பை குண்டுவெடிப்போ வேறு சில ஒருங்கிணைந்த தீவிரவாத தாக்குதல்களை தினசரி தாள்களில் அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் பாதிப்பு எப்படி இருந்தது என்று இப்பொழுது சொல்லத் தெரியவில்லை. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு செய்தி ஊடகங்களின் பங்கு மிகவும் அதிகரித்து விட்டது. இந்தியப் பாராளுமன்ற தாக்குதலைப் பற்றி NDTV-ல் விலாவாரியாக கார்டூன் படம் போல விவரித்து சொல்லும்போது எவ்வளவு நுணுக்கமான தகவல்கள் என்று பிரமித்துப் போயிருக்கிறேன். தற்போது நடக்கும் தாக்குதலையும், மீட்பு நடவடிக்கைகளையும் CNN IBN நேரடி ஒளிபரப்புவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது. தொடர்ந்து போலிஸார் வேண்டுகோள் விடுத்து பிறகே நேரடி ஒளிபரப்பை நிறுத்தினார்கள். செய்தி ஒளிபரப்பில் இது வளர்ச்சி மாதிரி தோன்றவில்லை. ஏதேனும் புலிட்ஸர் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் பார்த்தவர்களுக்கு மனது மரத்துப் போய்விட்டது.

தற்போது மும்பையில் நடந்த தாக்குதல் ஒருங்கிணைந்த தீவிரவாதம் (Organized Terrorist Attack). தீவிரவாதிகளின் நோக்கம் பணம் பறிப்பதோ, கைதிகளை விடுதலை செய்வதோ இல்லை. பொதுமக்களின் அமைதி வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பது. இது ஒருவகையில் தற்கொலை போர்முறைதான். இதற்காக அவர்கள் பெருமளவு மூளைச் சலவை செய்யப்பட்டு ப்ரொபஷனல் முறையில் தயார்படுத்தப் பட்டிருப்பார்கள். இந்த தயாரிப்புக்கு செலவு செய்யப்பட்ட நேரமும், இளமையும், சித்தாந்தங்களும் மிகவும் அதிகம். இதை எண்ணிப் பார்க்கையில் தீவிரவாத தடைச் சட்டமோ, போலிஸின் தீவிர கண்காணிப்போ இம்மாதிரி செயல்களை எதிர்காலத்தில் தடுத்து நிறுத்தும் என்று தோன்றவில்லை. விதைக்கப்பட்ட நஞ்சு விளைந்து கொண்டே இருக்கும்.

இதற்கு மாற்றாக எல்லோருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய தலைமை கண்டிப்பாக தேவை. கடுமையான சட்டங்களும், அதனை தீவிரமாக அமல்படுத்துவதும் தவிர அந்த சட்டங்களின் நோக்கத்தை தெளிவான பார்வையில் மக்களுக்கு எடுத்து செல்வதில் ஊடகங்களின் பங்கு முக்கியம்.

இப்பொழுதே இணையப் பதிவுகளில் சிலவற்றில் வெறுப்பை வளர்க்கும் எழுத்துகளை பார்க்க முடிகிறது. இன்னமும் சில நாட்களில் முற்போக்காளர்களாக அறிவித்துக் கொள்ளும், லைம் லைட்டுக்கு ஏங்கும் சில ஆத்மாக்கள் இந்திய இறையாண்மையைப் பற்றி புதிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள். அதையும் படித்துக் கொண்டிருப்போம் மரத்துப் போன மனதோடு.

15 மறுமொழிகள்:

ச.சங்கர் said...

///இப்பொழுதே இணையப் பதிவுகளில் சிலவற்றில் வெறுப்பை வளர்க்கும் எழுத்துகளை பார்க்க முடிகிறது. இன்னமும் சில நாட்களில் முற்போக்காளர்களாக அறிவித்துக் கொள்ளும், லைம் லைட்டுக்கு ஏங்கும் சில ஆத்மாக்கள் இந்திய இறையாண்மையைப் பற்றி புதிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள். அதையும் படித்துக் கொண்டிருப்போம் மரத்துப் போன மனதோடு///

வாங்க தல.

Sharing your feelings :(

Sridhar Narayanan said...

சங்கர்,

உங்கள் வருகைக்குக்ம் புரிதலுக்கும் மிக்க நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஸ்ரீதர்,

இதில் உள்ள பெரும்பான்மையான விஷயங்களோடு ஒத்துப் போகிறேன்.

/இன்னமும் சில நாட்களில் முற்போக்காளர்களாக அறிவித்துக் கொள்ளும், லைம் லைட்டுக்கு ஏங்கும் சில ஆத்மாக்கள் இந்திய இறையாண்மையைப் பற்றி புதிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள்./

ஏன், கேட்கக் கூடாதா? ஏன் அப்படிப்பட்டவர்களை, லைம் லைட்டுக்காக ஏங்குபவர்கள் எனக் குறுக்குகிறீர்கள்? வெறுப்பை உமிழும் வேறுமாதிரியான பதிவுகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல், இப்படி எழுதுவது எனக்கு அயர்ச்சியைத் தருகிறது :(

Sridhar Narayanan said...

சுந்தர்,

வெறுப்பை வளர்ர்க்கும் எழுத்துகள் என்று சொன்னது பிரிவினையத் தூண்டும் எல்லா எழுத்தையும்தான்.

முக்கியமாக நான் சொல்ல நினைத்தது... தொடரும் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுபடுத்த தீவிர போலிஸ் நடவடிக்கையும் கடுமையான சட்டமும் மட்டும் பயன் தராது.

//ஏன், கேட்கக் கூடாதா? ஏன் அப்படிப்பட்டவர்களை, லைம் லைட்டுக்காக ஏங்குபவர்கள் எனக் குறுக்குகிறீர்கள்? //

லைம் லைட்டுக்காக ஏங்குபவர்கள் என்று குறிப்பிட்டது குறுக்குவதற்காக அல்ல. அது இயல்பான மனிதச் செயலே. இம்மாதிரி பதிவில் எழுதி பொதுவில் வைப்பதும் ஒருவகையில் பொதுஜனப்பார்வையை ஈர்ப்பதற்கே என்பதை அறிந்தே இருக்கிறேன்.

நோய் நாடி நோய் முதல் நாடி அதன் வாய் நாடி வாய்ப்பச் செயல்

அம்மாதிரியான தொலைநோக்கு சிந்தனையுள்ள, எல்லாப் பிரிவினரிடத்திலும் நம்பிக்கை பெற்ற, எல்லாரையும அரவணைத்து செல்லக்கூடிய தலைமையை எதிர்நோக்கி எதிர்நோக்கி மரத்துப் போய்விட்டது மனது.

ராஜ நடராஜன் said...

மரத்துப் போய் விட்டது மனது என்பதனை விட தீவிரவாதத்தின் புரிதல் எல்லோருக்கும் இருந்தாலும் கூட வாழ்க்கையின் பிரச்சினைகளில் மனிதர்கள் அடுத்த அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடுகிறார்கள் என்பதே உண்மை.பம்பாய் தீவிரவாதத்தின் தாக்கம் மனதிலிருந்து மறையும் முன்னர் இன்னும் சில நாட்களில்,வாரங்களில்,மாதங்களில் இன்னொரு புதிய விசயம் பார்வைக்கு வரும்போது இந்த பயங்கரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது என்பதே நிதர்சனம்.உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல் அரசியல் களங்கள் இந்தப் பயங்கரவாதத்தை மறக்கடிக்கச் செய்யும்.அல்லது இதனைப் பயன்படுத்தி தேர்தல் களம் அமைத்து முடிந்தவுடன் இதன் பங்கு முடிந்துவிடும்.மீண்டும் ஒரு அசம்பாவிதம் எங்கே எப்பொழுது என்பது நம்மில் யாருக்கும் தெரியாது இந்த மனித நேயமிழந்த அயோக்கியர்களைத் தவிர:(

பத்மா அர்விந்த் said...

சில பதிவுகள் :http://reallogic.org/thenthuli/?p=143
http://reallogic.org/thenthuli/?p=110
http://domesticatedonion.net/tamil/2005/07/07

மும்பை நிகழ்ச்சி மிகவும் கலங்கடித்த ஒன்று.

Sridhar Narayanan said...

//புதிய விசயம் பார்வைக்கு வரும்போது இந்த பயங்கரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது என்பதே நிதர்சனம்.//

வாங்கள் ராஜ நடராஜன்,

மூன்றாவது மனிதனாக, பரபரப்பு செய்திகளை மேய்பவர்களுக்கு நீங்கள் சொல்வது சரி. ஆனால் இந்த மாதிரியான தீவிரவாதத்தின் ஆழமான வேரை நினைத்து பார்த்தால், முடிவில்லாத நீண்ட அதன் வரலாறை நினைத்துப் பார்த்தால், வருங்கால இந்தியா எம்மாதிரியான நிலையில் தங்களுடைய உள்நாட்டு அமைதியை கட்டிக் காப்பாற்றப் போகிறதோ என்று எண்ணும்போது எண்ணற்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

இதற்கான தீர்வு இப்பொழுது தெரியவில்லை.

Sridhar Narayanan said...

//சில பதிவுகள் //

வாருங்கள் பத்மா. சுட்டிகளுக்கு மிக்க நன்றி.

இந்த சக்கரம் என்பது இன்று நேற்று சுற்றத் துவங்கியதில்லை. அபோகலிப்டோ படத்தில் வருவது போல காட்டில் வாழ்ந்த பூர்வ குடிகள் தொட்டு, நாம் வரலாற்றில் புளகாங்கிதப்பட்டு படிக்கும் பல வெற்றி வரலாறுகள் இம்மாதிரியான தீவிரவாதச் செயல்களே.

பத்மா அர்விந்த் said...

நீங்கள் Kissa kursi ka பார்த்தீர்களா?

Sridhar Narayanan said...

//Kissa kursi ka//

இல்லை பத்மா. கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. DVD கிடைக்காது என்று தோன்றுகிறது.

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் பதிவுகளில் பதிந்திருக்கிறீர்களா? சொல்லுங்களேன். படித்துப் பார்க்கிறேன்.

Thekkikattan|தெகா said...

ஒண்ணும் சொல்ற மாதிரி இல்லை. மனிதம் தினமும் மறித்துக் கொண்டே போகிறது... எதிர்கால வாழ்வையும், அமைதியையும் நினைத்துப் பார்த்தால் கண்ணுகெட்டிய தொலைவு வரை தீர்வாக எதுவும் தென்படவில்லை.

எங்கே சென்று கொண்டிருக்கிறோம்...?

ambi said...

மனம் மரத்து மட்டுமல்ல, இது போன்ற அட்டைகத்தி இணையப் புலிககேசிகளை கண்டால் என்னயறியாமல் சிரிப்பும் வருகிறது.


இதுவும் கடந்து போகும்.

Sridhar Narayanan said...

//Thekkikattan|தெகா said...
எதிர்கால வாழ்வையும், அமைதியையும் //

வாங்க தெகா,

என்ன செய்வது? சிலருக்கு அமைதி என்பதே இப்படிப்பட்ட அழிவை எதிர்நோக்குவதாக இருக்கிறதே.

//ambi said...
இதுவும் கடந்து போகும்.//

விட்டுசென்ற வ்டுக்களோடு நாமும் தொடர்ந்து போய்க்கொண்டிருப்போம்.

Paper N Pencil said...

Hi Sridhar,

Kudos to your tamil:-). On thoughts i would read and then comment!!

Paper N Pencil said...

India can fight back on terror, only if we have advanced intelligence agencies, stringent anti terror laws and a strong leadership :-).

I do agree that the news channels do go overboad many times.

Cheers....Viji