நான் பொருளாதார மாணவனில்லை. ஆனால் பொருளாதாரம்தான் வாழ்வாதாரமாகிவிட்டபடியால் அதனை தொடர்ந்து அவதானித்து வந்து கொண்டிருக்கிறேன். பொதுவாக இம்மாதிரி விசயங்களில் நிறைய கேள்விகள் வைத்துக் கொண்டு அறிஞர்களைத் தேடிக் கொண்டிருப்பதுதான் வழக்கம். இம்முறை தேடலில் சிக்கிய சில விசயங்களை ஒரு பதிவாக தொகுத்தால் நல்லது என்று தோன்றியது. தொடர்ந்து நடக்கப் போகும் நிகழ்வுகளோடு எனது பார்வையும் ஒப்புநோக்க ஒரு வசதியாக இங்கே பதிகிறேன்.
ஒரு தனி மெயிலில் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் சுருக்கமாக பொருளாதார குமிழிகளை பற்றி விளக்கியிருந்தார். அதை சற்று சுருக்கி தமிழ்படுத்தி இங்கே தருகிறேன்.
_/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\_
ஒரு சின்னஞ்சிறு தீவில் மூன்றே மூன்று பேர்தான் இருக்கிறார்கள். ராமு, அம்மு மற்றும் சோமு. ராமு அந்த தீவின் நிலத்துக்கு பாத்யக்காரர். அம்முவிடமும் சோமுவிடமும் தலா 1 உரூபாய் இருக்கிறது. இப்பொழுது அம்முவிற்கு ஒரு ஆசை. உரூபாய்க்கு பதிலாக நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று. 1 உரூபாயைக் கொடுத்து ராமுவிடமிருந்து நிலத்தை வாங்கிவிடுகிறார்.
இப்பொழுது ராமுவிடமும், சோமுவிடமும் தலா 1 உரூபாய் இருக்கிறது. அம்முவிடமோ 1 உரூபாய் பெறுமானமுள்ள நிலம். ஆக அந்த நாட்டின் மொத்த சொத்து மதிப்பு 3 உரூபாய்கள். கணக்கு சரியாகத்தானே இருக்கிறது?
சோமுவிற்கு இப்பொழுது ஒரு சம்சயம். இந்த நாட்டில் இருப்பதோ ஒரே ஒரு நிலம்தான். வேறு நிலம் இனிமேல் உருவாகப் போவதில்லை. அதனால் நிலத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென்று தன்னிடம் உள்ள 1 உரூபாயுடன் ராமுவிடம் உள்ள 1 உரூபாயையும் சேர்த்து 2 உரூபாய்களுக்கு அம்முவிடமிருந்து நிலத்தை வாங்கிவிடுகிறார்.
இப்பொழுது கணக்குப் போட்டு பாருங்கள்.
ராமுவின் சொத்து மதிப்பு 1 உரூபாய். சோமுவிற்கு கொடுத்திருக்கும் கடன்.
அம்முவின் சொத்து மதிப்பு 1 உரூபாய்.
சோமுவின் சொத்து மதிப்பு 2 உரூபாய்கள். 2 உரூபாய் பெறுமானமுள்ள நிலம் இருக்கிறதல்லவா?
அந்த நாட்டின் நிகர சொத்து மதிப்பு 4 உரூபாய்கள்.
இப்பொழுது ராமுவின் முறை. தான் ஒரு காலத்தில் வைத்திருந்த நிலத்திற்கு இப்பொழுது விலை கூடியிருப்பதால்... அதை மீண்டும் வாங்க முடிவெடுக்கிறான். தனது 1 உரூபாயையும், அம்முவிடம் உள்ள 2 உரூபாயயையும் கடன் வாங்கி 3 உரூபாய்களுக்கு நிலத்தை வாங்குகிறான். இப்பொழுது கணக்குப் போட்டுப் பாருங்கள். நாட்டின் மொத்த மதிப்பு 5 உரூபாயாக உயர்ந்து விட்டிருக்கும்.
இப்படியாக உயர்ந்து கொண்டுப் போகும் மதிப்பு ஒரு நீர்க்குமிழிப் போலததான். இப்பொழுது அங்கிருக்கும் மூவரில் ஒருவர் சந்தேகம் ஏற்பட்டு, 'இருப்பது என்னவோ 2 உரூபாய்களும் ஒரே ஒரு நிலத்துண்டும்தான். எப்படி நிலத்தின் விலை இவ்வளவு ஏற முடியும்' என்று கடன் கொடுப்பதை நிறுத்தியோ அல்லது கொடுத்த கடனைத் திருப்பியோ கேட்டால் இந்த குமிழி உடைந்துவிடும். நாட்டின் ஒட்டுமொத்த மதிப்பு அதனுடைய பழைய மதிப்பிற்கோ அல்லது வேறு குறைந்த மதிப்பிற்கோ போய்விடும்.
_/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\_
அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரம் எப்படி இருக்கிறது? பாங்க் ஆஃப் அமெரிக்காவின் ஒரு சீனியர் ஊழியர் சொல்கிறார் 'அமெரிக்கா இன்னமும் அறிவிக்கவில்லை ஆனால், அதனுடைய பொருளாதார வீழ்ச்சி தொடங்கிவிட்டது. இதிலிருந்து மீண்டு வர அதிக காலம் பிடிக்கும். பொதுமக்கள்தான் சிரமப்படுவர்'. சிதறும் குமிழிக்கு இது ஒரு உதாரணம்.
எதனால் இந்த வீழ்ச்சி? அமெரிக்க ஏகாதிபத்தியம், முதலாளித்துவ சுரண்டல்கள் போன்ற ஜல்லிகளை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு கொஞ்சம் அருகில் சென்று பார்த்தால்... இந்த பொருளாதார முன்னேற்றமும் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் விபத்தும் புரியும். பாதுகாப்பான வாகனங்கள், உறுதியான சாலைகள், வாகனங்கள் பயனிக்க நெறிமுறைகள், பயனம் செய்பவர்களுக்கு பயிற்சி, காப்பீடு என்று எல்லாவித வசதிகளும் இருந்தும் விபத்து நடக்கத்தானே செய்கின்றன? இப்பொழுது நிகழ்ந்திருக்கும் விபத்து ஒரு சிறு தொடக்கம். இத்துடன் முடிந்துவிடுமா அல்லது இதனுடைய தொடர்விளைவுகள் மேலும் பல பாதிப்புகளை கொடுக்குமா?
இதனைப் பற்றிய விரிவான ஒரு இடுகை எழுதலாமா என்று ஆசை மேலிட்டாலும், வல்லுனர்கள் பலர் நிறைந்திருக்கும் இந்த சபையில் நாம் கொஞ்சம் அடக்கமாக இருப்பது அமரருள் உய்க்கும்தானே? இதுவரை வெடித்திருக்கும் பொருளாதார குமிழிகளைப் பற்றி சிறு வரலாறு தொகுப்பு இங்கே இருக்கிறது.
தற்போதைய அமெரிக்க சிக்கலைப் பற்றிய் விரிவான பதிவு இங்கே இருக்கிறது.
சொந்த வீடு வாங்குவது என்பது பலருக்கும் உள்ள கனவுதான். வாழ்நாளில் பெரும்பகுதி உழைத்து பணம் சேமித்து வீடு வாங்கும் கஷ்டங்களை குறைக்க ஏற்பட்டதுதான் வீட்டுவசதிக் கடன். இந்தக் கடனை பரவலாக்கி எல்லாரும் பயனுற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சில திட்டங்கள் போடப்பட்டு, இடையில் அவற்றின் இலாபத்தை மட்டுமே பார்க்கும் கண்ணோட்டத்தை புகுத்தி இரண்டும்கெட்டானான நிலையில்தான் பல நிதி நிறுவனங்களும் இருக்கின்றன இன்றைக்கு. பண சுழற்சி சீரான வேகத்தில் இருக்கும் வரை இதன் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். சுழற்சி தடைப்பட்டுப் போனால் ஒட்டுமொத்த அச்சும் முறிந்து போகும். இந்த வருடத்தின் மத்தியில் அமெரிக்காவின் பெரும் கடன் அளிக்கும் நிறுவனங்களான ஃபேன்னி மே மற்றும் ஃப்ரெட்டி மேக் முதலில் தடுமாறத் துவங்கின. நிதி மேலாண்மை கோளாறு, குறைபாடுகள் எல்லாம் தாண்டி இதன் தடுமாற்றத்தை தவிர்க்க வேண்டிய கட்டாய அவசியம் அமெரிக்காவிற்கு. இந்த நிறுவனங்களின் பங்குகள் வீழ்ந்தால் பல வங்கிகள் திவாலாகும் நிலை. அதனால் அமெரிக்க ஃபெடரெலின் கட்டுபாட்டுக்குள் (Conservatorship) கொண்டு வந்தாகிவிட்டது. இது ஒருவகை திவால் நிலைமதான். முதலில் கணக்குகளை முடக்கிவிடுவார்கள். பிறகு எல்லாம் கண்ட்ரோல்ட் செயல்பாடுகள்தான். ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து லீமென் ப்ரதர்ஸ் காற்றோடு கரைந்து போனது. இந்த தொடர் வீழ்ச்சியில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த கடன் மதிப்பும் (Credit rating) ஆட்டம் கண்டுவிட்டது. பற்பல நாடுகள் அமெரிக்காவின் கடன் பத்திரம் மூலமாகத்தான் தங்கள் கையிருப்புகளை நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்படியே போனால் இந்த வீழ்ச்சி உலகெங்கும் உள்ள சாமானியனின் நிலையையும் அசைத்து பார்த்து விடும். இதன் வீச்சு பெரும் நிதி மாற்றத்தை உலகெங்கும் கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகம்.
எனது சக ஊழியர் ஒருவர் மிகவும் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருந்தார். "அரசாங்கம் எப்படி தனியார் நிறுவனங்களின் நிர்வாக குளறுபடிகளுக்கு பொறுப்பேற்க முடியும்? எனது வரிப்பணத்தை இந்த பன்றித்தலையர்களுக்கு எடுத்துக் கொடுக்கவா நான் ஓட்டுப் போட்டேன்?" நியாயம்தான். ஆனால் இந்த நிதி நிறுவனங்களின் மேல் இருக்கும் இந்த பாரத்தை தவிர்க்காவிடில் இன்னமும் பல நம்பிக்கைகள் நொறுங்கிப் போகும் சாத்தியங்கள் இருக்கின்றன. விரைவான வளர்ச்சியினால் ஏற்படும் விபத்துகள் விரைவான வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லுமா? இல்லை பொறுப்பான அரசாங்கம் விரைந்து நிலையை சீர்படுத்துமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
_/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\_
இந்த வாரம் இரா முருகன் குங்குமத்தில் எழுதும் 'அற்ப விஷயம் பத்தி' பத்தியிலிருந்து ஒரு சிறு துணுக்கு.
"சென்னை நகரத்துக்கும் இந்துஸ்தானி சங்கீதத்துக்கும் தாயாதி பங்காளி உறவு. கூட்டம் அலைமோதும். ‘இதான் கிரானா கரானா சங்கீத பாணியா? வாஹ், ஆஹிர் பைரவி’. இப்படி கண்டக்டட் டூரில் தாஜ்மஹாலைப் பார்க்க ஆக்ரா போகிற டூரிஸ்ட்கள் போல் எட்டி நின்று பார்த்துக் கேட்டு நாலு கிளாப்ஸ் உதிர்த்துவிட்டு அகாதமிக்கு வெளியே ஆட்டோ பிடிக்க நின்று அடுத்து கைதட்டுவார்கள். பண்டிட்டுக்கு பதிலாக ஓதுவார் தேவாரம் பாடினால்? காலி அரங்கமே மிஞ்சும்."
:))))))
கதை சொல்லும் நேரம்...
இதுவரை வெளியான சிறுகதைகள்
அமெரிக்கா - சிதறிய குமிழியும், நொறுங்கிய நம்பிக்கையும்
September 30, 2008எழுதியது Sridhar V at 9/30/2008 07:40:00 PM 25 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: credit rating, அமெரிக்கா, குமிழி, நிதி நிலைமை
நேரத்தின் வரலாறும், புதிர்பிரதேசமும், கவுண்டமணியும்
September 28, 2008மனித இனத்தின் மகத்தான அறிவியலாளர்களாக சொல்லப்படுபவர்கள் மூன்று பேர். கலிலியோ, ஐசக் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன். நமது காலகட்டத்தில் இவர்களுக்கு இணையான ஒரு அறிவியலாளராக சொல்லப்படுபவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். உடல் முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஹாக்கிங் தற்போது வாழ்வதும் பேசுவதும் தொழில்நுட்ப சாதனங்களின் மூலமாகத்தான். இருபத்தியோரு வயதில் 'இன்னமும் 2-3 வருடங்களே வாழ்நாள் என்று கணிக்கப்பட்டவர் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியலுக்கு அரிய பங்காற்றி வருகிறார். ஹாக்கிங் எழுதிய புத்தகம்தான் 'நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு' (A brief history of Time).. என்னை மாதிரியான அறிவியல் பாடங்களை வெறுக்கும் சாதாரணர்களுக்கு பல சிக்கலான விசயங்களை எளிதாக சொல்லிக் கொடுக்கும் புத்தகம். இந்த புத்தகம் முழுவதிலும் ஒரே ஒரு இடத்தில்தான் அறிவியல் சூத்திரம் காணப்படும். e = mc^2. மற்றபடி கருந்துளைகள், பெருவெடிப்பு, வெளிச்ச கூம்பு போன்ற பல விசயங்களையும் எளிதாக சொல்லிக் கொடுக்கின்றது. இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் நான் எழுதிய ஒரு சின்னக் கதை -"வெடிப்பு".
எல்லையில்லா இந்தப் பிரபஞ்சம் ஒரு பலூனைப் போல விரிவடைந்து கொண்டே போகிறது என்கிறார் ஹாக்கிங். அதாவது புள்ளிகள் இடப்பட்ட பலூனை ஊதிப்பாருங்கள். புள்ளிகள் விரிவடைந்து கொண்டே அதனூடே இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறதா? அப்படித்தான் கிரகங்களும், நட்சத்திரங்களும், கேலக்ஸிகளும் நகர்ந்து கொண்டே போய்க் கொண்டிருக்கின்றன. இதை எப்படி நிரூபிப்பது? என்னுடைய நண்பர் சுவேக் ஒரு அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார். அவருடைய அனுமதியோடு அதிலிருந்து ஒரு பகுதி கீழே:
_/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\_
மொத்த பிரபஞ்சமும் அதன் அளவில் விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பதனை சிவப்பு இடமாற்றம் (Red Shift) என்ற ஒரு பரிசோதனை முடிவின் முலம் விளக்குகிறார்கள். எப்போது இந்த விரிவடைதல் முடிவுக்கு வரும், வெடிப்பதற்கு முன்பு எப்படி இருந்தது என்ற மற்ற இரு கேள்விகளுக்கும் விடை காணும் பொறுப்பை தாங்களாகவே எடுத்து கோண்ட ஹாலிவுட் இயக்குநர்கள் இக்கணத்தில் காசு பண்ணுகிறார்கள். சிவப்பு இடமாற்றம் எவ்வாறெல்லாம் பிரபஞ்சம் விரிவடைதலை நிருப்பிக்க உதவுகின்றது ??
சிவப்பு:
இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் ஏதாவதொரு (கருந்துளைகள் தவிர) ஒளி அலைகளை உமிழவோ அல்லது கிரகித்து கொள்ளவோ செய்கின்றன. இதில் நம் கண்ணுக்கு புலனாகும் கண்ணுறு ஒளியானது சிவப்பு முதல் ஊதா வரையிலான அலைநீளத்தை (Wavelength) கொண்டது. அதனிலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அலைநீளம் உள்ள ஒளிகளை நம் கண்ணால் காண இயலாது. சிவப்பின் அலைநீளமானது ஊதாவை விட அதிகம்.
பூமியை விட்டு விலகி நகரும் ஒரு கிரகத்திலிருந்து வரும் கண்ணுறு ஒளியின் அலைநீளமானது சிவப்பை நோக்கி அதிகப்படியாக விலக்கம் அடைந்து காணப்படுகின்றது. இதனை டாப்ளர் விளைவினை (Doppler's effect) கொண்டு கணக்கிடமுடியும். நம்மிடமிருந்து விலகிச் செல்லும் ஒர் அவசர ஊர்தியின் ஒலி அளவானது குறைந்து கொண்டே செல்வது போல பூமியை விட்டு விலகி நகரும் கிரகத்திலிருந்து வரும் ஒளியின் அலைநீளமானது அதிகப்படியாக சிவப்பை நோக்கி இடம் மாறுவதுதான் சிவப்பு இடமாற்றம். இன்று கணக்கிடப்படும் ஒர் கிரகத்தின் சிவப்பு இடமாற்றம், நாளை மீண்டும் அளவிடப்படும் பொழுது சிறிது அதிகமாகின்றது. தூரம் அதிகமாகும் பொழுது இந்த சிவப்பு இடமாற்றம் அதிகமாகும். அதனால்தான், சூரியன் பூமியிலிருந்து அதிகபடியான தொலைவில் உள்ள காலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய ஒளியானது இளஞ்சிவப்பு நிறமாக அமைகின்றது.
Hubble விதி:
இதன் முலம்தான் விலகி நகரும் பொருட்களின் ஒளி அலையில் இடமாற்றம் ஏற்படுவதனை நிருபிக்கின்றார்கள். இதனால் இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் தன்னுடைய நிலையிலிருந்து பூமியை விட்டு விலகி விரிவடைந்து கொண்டெ செல்வதாக கூறுகிறார்கள். இவ்வாறுதான் ஒருமித்த கணத்திலிருந்து வெடித்து விரிவடைந்து கொண்டே செல்வதாக நம்பப்படுகின்றது.
_/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\_
இப்படியாக விரிவடைந்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தின் ஆயுளை குத்து மதிப்பாக பதிமூன்றரை பில்லியன் ஆண்டுகள் (1370 கோடி ஆண்டுகள்) என்று கணக்கிடுகிறார்கள். அதில் பூமி உண்டாகி ஒரு நான்கரை பில்லியன் ஆண்டுகள் (450 கோடி ஆண்டுகள்) ஆகிவிட்டன. அற்ப ஆயுள்காரனான மனிதன் இந்த பூவுலகை நாசமாக்கிவிட்டான் என்று சொன்னால் சிரிப்புதான் வருகிறது. இந்த பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக இருக்கும் மனிதனின் செய்கைகளும் இயற்கையின் அங்கமே. மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் இத்தனை பிரயத்தனமும். தற்கால மனிதன் பிரபஞ்சத்தின் ஒரு துளியினைக் கூட முழுவதும் உணரவில்லை. எதிர்கால மனிதன் பிரபஞ்சத்தில் வேறு சில துளிகளை கண்டறியலாம். தன் மூதாதையர்கள் எப்படித்தான் இந்த பூமியில் காலம் தள்ளினார்களோ என்று நமது எதிர்கால சந்ததியினர் வியப்படைவதற்கான சாத்தியங்கள் அதிகமே.
புதிர்பிரதேசம் என்பது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சாண்டா க்ரூஸ் என்னும் ஊரில் இருக்கிறது. இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக இருக்கிறது. சிறிய குன்றை காட்டி இதுதான் புதிர்பிரதேசம் என்று சொல்கிறார்கள். தேர்ச்சிப் பெற்ற வழிகாட்டிகள் பார்வையாளர்களை குழுக்களாக பிரித்து குன்றை சுற்றிக் காட்டிக் கொண்டே பல புதிர்களான செயல்களை செய்து காட்டுகிறார்கள். உதாரணமாக ஒரு பலகையில் பந்தை வைத்து சரிவான பாதையில் உருட்டிவிட்டால் பந்து உருள மறுக்கிறது. எதிர்திசையில் ஏற்றத்தை நோக்கி உருளுகிறது. படத்தைப் பாருங்கள். 
பெரியவர் எப்படி கோனலாக சுவற்றில் ஏறி நிற்கிறார் என்று. இம்மாதிரியான புதிரான முறையில் புவியீர்ப்பு விசையை பொய்யாக்கி பல அனுபவங்களைத் தருகிறது இந்த புதிர்பிரதேசம். எங்கள் கூட வந்த இளம்பெண் வழிகாட்டி பார்வையாளர்களை வரிசையாக நிற்க வைத்து இருப்பதிலேயே குள்ளமானவரை எல்லாரையும் விட உயரமானவராகக் காட்டினார். இது ஒருவகை Forced Illusion என்று சொல்லப்படும் 'தோற்றப் பிழை'யால் தோன்றும் மாயபிம்பம்தான். குன்றில் மேல் கட்டப்பட்டிருக்கும் கோனல் வீட்டின் பின்புலத்தில் நமக்கு எல்லாமே ஒருமாதிரி Skewed-ஆக தெரிகிறது. கானலின் நீரோ? வெறும் காட்சி பிழைதானோ? நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
சிங்கங்களும், சிறுத்தைகளுமாய் ட்விட்டரில் நிறைய தகவல் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிறு எலியாய் நானும் ஆங்காங்கே உலவி சில பயனுள்ள தகவல்கள் பெற்றுக் கொண்டிருக்கிறேன். திடீரென்று இந்த வாரம் கவுண்டமணியைப் பற்றிய பல விவாதங்கள். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று தெரிகிறது. ஒரு பதிவில் சார்லி சாப்ளினோடு கவுண்டமணியை ஒப்பீடு செய்து எழுதிய பொழுது கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். உணர்ச்சி வசப்படுதலுக்கும் ஒரு எல்லையில்லையா என்ன? நிற்க!
பதினாறு வயதினிலே போன்ற படங்களிலே நடுத்தர வயது பாத்திரமேற்றி நடித்தவர், பின்னர் சில பத்து ஆண்டுகள் கதாநாயகனுக்கு துணைப் பாத்திரமாக இளமையான நகைசுவை நாயகனாக நிலைத்து நின்றது அவருடைய பெரும் சாதனைதான். கிட்டத்தட்ட அறுபத்தைந்து வயதுவரை கல்லூரி வளாகத்தில் இளமை லூட்டி அடித்துக் கொண்டிருந்தார். மற்றபடி அவரளவிற்கு சக பாத்திரங்களை மிகக் கேவலமாக நையாண்டி செய்தவர் (முக்கியமாக கருப்பு நிறத்தை) யாருமே கிடையாது. முக்கியமாக கவுண்டரின் நடிப்பில் லிமிட்டேஷன்ஸ் அதிகம். சத்தமாக திட்டினால் நகைச்சுவை என்று அர்த்தமா என்ன? சந்திரபாபுவை விட ஒரு திரை ஆளுமைமிக்க காமெடியன் யாரும் இருக்கிறார்களா என்ன? "சபாஷ் மீனா" என்றொரு படம். ரிக்ஷாக்காரனாக வரும் சந்திரபாபு சிவாஜி கனேசனோடு நடிக்கும் ஒரு காட்சி. தள்ளு முள்ளு என்று நடந்துகொண்டிருக்கும் காட்சியில் 'உன் மூஞ்சில என் பீச்சாங்கையை வக்க' என்று பேசிக்கொண்டே எதிர்பாராத நேரத்தில் சிவாஜியின் முகத்தில் நிஜமாகவே அடித்து விடுவார். அது ஒத்திகை பார்க்கப்படாமல் நடித்தது என்று சொல்வார்கள். சிவாஜியின் ரியாக்ஷன் அப்படித்தான் இருக்கும். ஏன், தற்காலத்தில் நச்சு இல்லாத சிறந்த நகைச்சுவைக்கு வடிவேலுவே சிறந்த உதாரணம். அவருடைய பல வசனங்களின் வீச்சு மிக அதிகம். சரி விடுங்கள். அவரவர் அரசியல் அவரவர்க்கு.
எழுதியது Sridhar V at 9/28/2008 06:04:00 AM 32 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: A Brief history of time, Mystery Spot, Red Shift, கவுண்டமணி, சுவேக், ஸ்டீபன் ஹாக்கிங்
அலெக்ஸா வரிசைப்படுத்துதலும், பிரபஞ்ச சக்தியும், ஆமீர்கானும்
September 24, 2008ஆரக்கிள் நிறுவனம் தன்னுடைய OpenWorld சந்திப்பை இந்த வருடம் சான் பிரான்ஸிஸ்கோவில் நடத்துகிறது. நீங்கள் ஒரு பிரபல பதிவரா, அப்படியென்றால் சகாயவிலையில் கான்பிரண்ஸ் பாஸ் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றார்கள். பல்வேறு தளங்களில் எல்லாரும் வளைத்து வளைத்து எழுதும் இத்தனை பதிவுகளை எப்படி வரிசைப்படுத்தி பிரபலமானதை கண்டுபிடிக்கிறார்கள் என்று ஆராய்ந்ததில் சில பல புதிய விசயங்கள் தெரிந்தன. கூகுள் ரீடர் மூலம் உங்களை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று குத்துமதிப்பாக அறியலாம். உங்கள் பதிவு ஓடையை Feedblitz போன்ற RSS aggregators மூலம் ஒழுங்குபடுத்தி எத்தனை சந்தாதரர் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஓரளவுக்கு பிரபலமான முறை அலெக்ஸா வரிசைபடுத்துதல் . உங்களில் பலர் இதனைப் பற்றி அறிந்திருக்கலாம். எந்த தள முகவரியைக் கொடுத்தாலும் உடனே கடந்த வாரம், கடந்த மூன்று மாதததிற்கான ஹிட் ரேட் என்று படமாகவே காட்டுகிறார்கள். வலைத்தளத்திற்கு கிடைக்கும் ஹிட்களை வைத்து தரவரிசைப் படுத்தி கிராஃப் போடுகிறார்கள். அட, எப்படி இவர்களால் எல்லா தளத்தின் பிரபலத்தையும் கண்டறிய முடிகிறது என்று கொஞ்சம் துருவிப் பார்த்தால், அலெக்ஸா டூல்பார் என்று ஒரு உபகரணப் பட்டி (தமிழுங்கோ) வைத்திருக்கிறார்கள். இதை நீங்கள் தரவிறக்கி உங்கள் உலாவியில் இணைத்து விட வேண்டும். இந்த பட்டி நீங்கள் உலாவும் தளங்களைப் பற்றிய விவரங்களை அலெக்ஸாவின் டேட்டாபேஸில் கொண்டு சேர்க்கிறது. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இதன் வரிசைப்படுத்துதல் நிகழ்கிறது. அலெக்ஸாவின் உபகரண பட்டி இல்லாதோரின் உலாவல் வரலாறு இதில் கணக்கெடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதாவது இந்த தரவரிசை சார்புடையவையாகத் (biased) இருக்கிறது. ஆகையால் அலெக்ஸாவைப் பற்றிய அதீத மதிப்பீடுகள் கொள்வது தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.
நமது தளத்தைப் பற்றிய தரவரிசையைப் பார்க்கலாம் என்று அலெக்ஸாவில் துழாவினால், ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. 'தம்பீபீ! நீ போக வேண்டிய தூரம் நிறைய இருக்குப்பா' என்று கொஞ்சம் ஈனோ சாப்பிட்டு என்னை நானே ஆற்றுப்படுத்திக் கொண்டேன். முழுத் தகவலையும் பார்த்தால், இந்தப் தளத்தின் பார்வையாளர்கள் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து மட்டும்தான் வந்திருக்கிறார்கள். அப்போ அமீரக, புதரக மக்கள் யாருமே இந்த வலைத்தளத்தை சீந்துவதே இல்லையா? வலைத்தளத்திற்கே வராமல் பின்னூட்டம் மட்டும் போட்டுவிடுகிறார்கள்ப் போல.
அலெக்ஸாவில் உங்கள் தரவரிசையை முன்னேக் கொண்டு வர இதோ 20 டிப்ஸ்கள். மிக எளிய வழிமுறை. அலெக்ஸா டூல்பாரை நீங்கள் உபயோகிக்கும் எல்லாக் கணிணிகளையும் நிறுவிக் கொண்டு வலைப்பக்கத்தை உலாவி முகப்பு பக்கமாக வைத்துக் கொண்டு அதன் வழியாகவே மற்ற தளங்களுக்கு சென்று உங்கள் வலைத்தளத்தின் ஹிட் ரேட்டை கன்னா பின்னாவென்று ஏற்றிவிடுங்கள். உங்கள் நண்பர்களும் அலெக்ஸா டூல்பார் வைத்துக் கொண்டு உங்கள் தளத்தை மேய்ந்தால் ரேங்கிங் எக்குதப்பாக உயர வாய்ப்புண்டு. வாழ்க வளமுடன்!
Da Vinci Code புகழ் டான் ப்ரௌன் எழுதிய புனைவு Angels and Demons. இது இப்பொழுது டாம் ஹாங்க்ஸ் நடிக்க திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வருகிறது என்று அறிகிறேன். ஒரு கால் கிராம் அ-பருப்பொருள் (anti matter) பற்றிய கதை. மிகவும் அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர். இதில் வரும் கார்லோ வெண்டிரஸ்கா (Carlo Ventresca) வாடிகனின் புனித ரோமானிய சர்ச்சின் அலுவலர் (Camerlengo). இவர் பெரும் பேச்சாற்றலுடையவர். சிறு வயதானவர். கதையில் பின்னர் அறியப்படுகின்ற கார்லோவின் பிறப்பைப் பற்றிய இரகசியம் மிகவும் வியப்பிலாழ்த்தும் கற்பனை. ஆண்டி மேட்டரும், மேட்டரும் மோதினால் பேரழிவு ஏற்படும். இல்லுமினாட்டி (Illuminati) என்னும் அடிப்படைவாத குழுவால் இந்த ஆண்டிமேட்டர் வாடிகன் சர்ச்சில் மறைத்து வைக்கப்படுகிறது. 24 மணிநேரம் அந்த அ-பருப்பொருள் வேக்வூம்-ல் (vaccum) மிதந்து கொண்டிருக்கும். அப்புறம் தரையிறங்கி பருப்பொருளோடு மோதினால் பேரழிவுதான். அந்த அபாயத்திலிருந்து உலகை காப்பாற்ற கதாநாயகன் ராபர்ட் லாங்க்டனோடு முயல்கிறார். இறுதியில் என்னவாயிற்று என்று புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். தற்போது CERN நடத்தும் Particle accelerator சோதனைக்கு முன்னோடி போல் இந்தக் கதை அமைந்திருந்தது. இதற்கு அப்புறம்தான் பிரசித்திப் பெற்ற Da Vinci Code புனைவு எழுதப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி CERN-ன் LHC (Large Collidor of Hadrons) சோதனை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த சோதனையினால் புதிய சக்தியை உண்டாக்க முடியும் என்று நம்புகிறார்கள். இந்த சோதனைக்கு எதிர்ப்பாளர்கள் முன் வைக்கும் வாதங்கள் சில இதன் அடிப்படையையே கேள்வி கேட்கின்றன. இந்த சோதனையின் விளைவு இப்படித்தான் இருக்கும் என்று அறுதியிட்டு சொல்ல முடியாத நிலைதான் இப்பொழுதும். ஆனால் ஒன்று நிச்சயம். இது வெற்றிபெற்றாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி இது ஒரு disruptive சோதனைதான். எனக்கு தோன்றிய இரு முக்கிய கேள்விகள்.
1. Law of conservation of energy தவறா?
2. இந்த சோதனை மூலம் பிறக்கும் புதிய சக்திக்கு என்ன பெயர் வைப்பது?
பள்ளியில் படிக்கும்போது ஆமீர்கானின் முதல் படம் தமிழகத்தில் ஓடி பெருவாரியான வெற்றி பெற்றது. ஷாருக்கான் அப்பொழுது டிவி சீரியலில் உற்சாகம் பொங்க நடித்துக் கொண்டிருந்தார். ஆமீர்கானின் சில திராபை படங்களை விடுத்தால் பெரும்பாலும் நல்ல படங்களாகவே தந்திருக்கிறார். இவருடைய 'லகான்' மேல் தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், அதை மிகத் திறமையாக லாபி செய்து அகாடமி விருதின் இறுதிக் கட்டம்வரை கொண்டு சென்றது இந்திய சினிமா அளவில் சாதனைதான். இந்த வருடம் 'தாரே ஜமீன் பர்' இந்தியப் படங்கள் சார்பில் அகாடமி அவார்டுக்கு செல்கிறது. இந்தப் படம் மிகச் சீராக, இந்திய பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு கொஞ்சம் டிரமடைஸ் செய்து எடுக்கப்பட்ட படம். படத்தில் எனக்குப் பிடித்த காட்சி ஆசிரியரான ஆமீர்கான் தனது மாணவனின் பெற்றோரை சந்தித்து 'டிஸ்லெக்சியா' குறைபாட்டைப் பற்றிப் புரியவைக்கும் காட்சி. மேண்ட்ரீன் மொழியில் எழுதியதைப் படிக்க முடியாமல் திணறும் தந்தைக்கு தன் மகனின் பிரச்சினைப் நேரடியாகப் புரிகிறது. முற்பாதி இன்னமும் அழுத்தமாக இருந்திருக்கலாம். பிற்பாதியில் அசட்டு ஆசிரியர்களின் நகைச்சுவையை தவிர்த்திருக்கலாம். அருமையான படத்திற்காக ஆமிர்கானுக்கு ஒரு பொக்கே. இவர் வலைத்தளத்தின் நுழைவு வாயிலில் இவர் கஜினி பட ஸ்டில்தான் இருக்கிறது. இன்னமும் இவர் மெமெண்டோ பார்க்கவில்லையா?
எழுதியது Sridhar V at 9/24/2008 02:23:00 PM 26 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: Alexa ranking, Angels / Demons, CERN, LHC, ஆமீர்கான், டான் பிரௌன், தாரே ஜமீன் பர்
ஒருபக்கம்: எல்லா எழுத்தும் எழுத்தல்ல
September 22, 2008சமீபத்தில் ஒரு நண்பருடன் விவாதித்துக் கொண்டிருக்கையில் எழுத்தை எப்படி அணுக வேண்டும் என்று ஒரு கேள்வி எழுந்தது. 'எழுத்திற்கு ஒரு அறம் தேவை' என்று வாதிட்டார் நண்பர். அந்த அறம் என்ன என்று விவாதிக்க புகுந்த போது, 'நீங்கள் எழுத்தை ஒழுக்கம் சார்ந்து அணுகுகிறீர்கள்' என்றும் சொன்னார். அறமும், ஒழுக்கமும் எந்தப் புள்ளியில் பிரிகிறது என்ற ஒரு குழப்பம் எழுகிறது. என்னைப் பொறுத்தவரையில் நேர்மையான எழுத்திற்கு எனது ஓட்டு எப்பொழுதும் உண்டு. ஒரு படைப்பாளியை தொடர்ந்து படிக்கும்போதே நேர்மையைப் பற்றிய ஒரு படிமம் கிடைத்து விடுகிறது நமக்கு. இந்தியாவில் குழந்தைகள் கவனிக்கப் படாமல் இருக்கிறார்கள் என்று கவலைப் பட்டுக் கொண்டே கல்லூரிப் பெண்களின் மேல் மறைமுக பாலியல் வக்ரத்தை பிரயோகிக்கும் படைப்புகளை எந்த அறத்திலும் சேர்க்க முடியாது என்பது என் எண்ணம். சரி விடுங்கள். ஒரு மத்தியதட்டு மூர்க்கனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
ஒரு காலத்தில் பத்திரிகைகளில் வருவதைத்தான் படிக்க முடியும் என்ற நிலை மாறி இன்று கட்டற்ற வெட்டவெளியில் ஏராளமாக படிக்க மற்றும் பார்க்கக் கிடைக்கிறது. இணைய தொழில்நுட்பத்தின் வீச்சைப் புரிந்து கொள்வதில் இன்னமும் நிறைய பேருக்கு சிக்கல் இருக்கிறது. இந்த மாதிரி transition காலத்தில் ஏற்படுகின்ற வழக்கமான சிக்கல்தான். பதிவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. எழுத்தாளர்களின் குறிக்கோள் எப்பொழுதும் உள்ளடக்கமும், பதிப்பகத் துறையும், அதிக வாசகர்களும்தான். வலைப்பதிய அத்தனை அகண்ட குறிக்கோள் தேவையில்லை. தீவிர உலக எழுத்தாளர்கள் பலரும் வலைத்தளத்தை ஒரு முகவரியாக, வாசல்படியாக (gateway) வைத்துக் கொண்டு தங்கள் எழுத்து திறமையை சந்தைபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். தீவிர வலைப் பதிவர்களும் தங்கள் வலைத்தளத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்துக் கொண்டு பல்வேறு வணிக சாத்தியங்களை அடையத்தான் செய்கிறார்கள். ஆனால் இரண்டு நிலைக்குமிடையே இன்னமும் பெரும் இடைவெளி இருக்கிறது. ஜே கே ரௌலிங்கின் ஹாரி போர்ட்டர் புத்தகம் படைத்த சாதனையை உதாரணமாகச் சொல்லலாம். தற்சமயம் வலைப்பதிவுகள் அம்மாதிரியான பெரும் வணிக வெற்றிகள் / விமர்சக ஈர்ப்புகள் சாத்தியமில்லை. இனி வருங்காலத்தில் இந்த வித்தியாசம் குறையலாம். இப்பொழுதே எழுத்தாளர்கள்களுக்கு குறைந்தபட்ச தகுதியாக கணிணியில் தட்டச்சு செய்யும் முறையை தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது.
நேர்மையான எழுத்தைப் பற்றி பேசும்போது சென்ற வாரம் பார்த்த ஒரு திரைப்படம் நினைவுக்கு வருகிறது. விக்டர்/விக்டோரியா ஒரு ம்யூஸிக்கல் நகைச்சுவைப் படம். ஓரினச் சேர்க்கை, க்ராஸ்-ட்ரெஸ்ஸிங், gay கலாச்சாரம் போன்ற பல விசயங்களை பின்புலமாக வைத்து என்பதுககளில் எடுக்கப்பட்ட அற்புதமான நகைச்சுவை திரைப்படம். யாரையும் காயப்படுத்தாத ரசமான நகைச்சுவை உத்தரவாதம். பாரிஸில் விக்டோரியா என்ற பாடகி நைட் கிளப்புகளில் வேலை தேடுகிறாள். அவளுடைய நேர்த்தியான குரலுக்கு வரவேற்பு இல்லை. பின்னர் அவள் கேரோல் டாட் (Carroll Todd)என்னும் ஆண் பாடகரை சந்திக்கின்றாள். டாட் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழும் gay. டாட்-இன் யோசனைப்படி விக்டோரியா விக்டர் என்னும் ஆணாக மாறுகிறாள். அதாவது பெண் போல வேடம் போடும் (female impersonator) ஆணாக அவள் வேடம் போட்டு பாரீஸின் நைட் கிளப்புகளில் பாடுகிறாள். நடனமாடுகிறாள். வெகு விரைவில் பாரிஸின் இரவு நட்சத்திரமாக ஆகின்றாள். அவள் பாடலையும் ஆட்டத்தையும் காண வரும் கிங் மார்செண்டின் மேல் காதல் கொள்கிறாள். கிங் ஒரு சிக்காகோவிலிருந்து வந்திருக்கும் நிழலுலக தாதா. விக்டோரியா மேல் ஈர்க்கப்பட்டாலும் அவள் ஒரு ஆண் என்பதால் அவனுக்கு தடுமாற்றம். பிறகு பெண் என்று கண்டுபிடித்து இருவரும் காதல் செய்கிறார்கள். ஆனால் விக்டோரியாவிற்கு தன்னுடைய தற்போதைய தொழிலை விட மனமில்லை. ஆண் கிராஸ் ட்ரெஸ்ஸ்ராக இருந்து கொண்டே கிங்-கை காதலிக்க நினைக்கிறாள். கிங்-க்கோ மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலைமை. விக்டோரியா மேல் இருக்கும் காதலால் விக்டர்-உடன் வாழ சம்மதிக்கிறான். தொடர்ந்து அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்று சுவையான சம்பவங்கள் மூலம் காட்டுகிறார்கள்.
இந்தப் படத்தின் நல்ல நகைச்சுவையை விட அதன் நேர்மை என்னை கவர்ந்தது. பசியினால் தனது ஒழுக்கங்களை (virtues) மீறத் தயாராக இருக்கும் விக்டோரியாவிற்கு அதனால் எந்த குற்றவுணர்வும் இருப்பதில்லை. இருக்க வேண்டிய தேவையில்லை. ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர்களை வேற்றுகிரகவாசிகளாகவோ, விளிம்புநிலை மனிதர்களாகவோ உருவகப் படுத்தாமல் இயல்பாக சித்தரித்திருந்த விதம் மிகவும் பாராட்டுகுரியது. நான் ரசித்த வசனம்: கிங் ஆணுடடயில் இருக்கும் விக்டோரியாவிடம், 'நீ ஆணாக இருந்தாலும் பரவாயில்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்லி முத்தமிடுகிறான். பதிலுக்கு விக்டோரியா 'நான் ஆண் இல்லை' என்கிறாள். உடன் கிங் 'அப்படியென்றாலும் எனக்கு கவலையில்லை' என்று மீண்டும் முத்தமிடுகிறான் :-) A classical romance.
எலிவேட்டர் டாக் (elevator talk) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உடனடி உரையாடல் என்று சொல்லாம் என்று நினைக்கிறேன். எலிவேட்டரில் பயனிக்கும் போது அறிமுகமில்லாத சக பயனியிடம் அதிகபட்சம் புன்னகைத்திருப்போம். உடனடி உரையாடல் எத்தனை முறை சாத்தியப்பட்டிருக்கிறது? முன்பின் அறிமுகம் இல்லாத அவரிடம் அந்த குறுகிய கால அவகாசத்தில் எப்படி பேச்சை துவக்குவது? இம்மாதிரியான உடனடி உரையாடல் தொடங்கும் திறமை நிறைய இடத்தில் தேவைப்படுகிறது. நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் பொழுதோ, புதிய பொருட்களை விற்பனை செய்யும் பொழுதோ இந்தத் திறமை நிச்சயமாக கைகொடுக்கிறது. 30-40 விநாடிக்குள் எதிரிலிருப்பவரோடு சிநேகமாகி அவரையும் உரையாடலில் பங்கேற்கச் செய்தல் மிகவும் கடினமான ஒரு செயலே. சிலசமயம் இம்மாதிரி உரையாடல் வேறுவகை பலனைத் தரும் சாத்தியமும் உண்டு. ஒரு லிஃப்டில் நடக்கும் சிறு உரையாடல் கீழே.
முதல் ஆள்: Hi there
2-ஆம் ஆள்: Hello
முதல் ஆள்: Watt's my name. you?
2-ஆம் ஆள்: (puzzled): What's your name?
முதல் ஆள்: Right!
2-ஆம் ஆள்: Oh Wright?
முதல் ஆள்: So, What about you?
2-ஆம் ஆள்: I am Guud.
முதல் ஆள்: Great. Your good name?
2-ஆம் ஆள்: Guud.
முதல் ஆள்: You told that. Your name?
2-ஆம் ஆள்: Thats my name.
முதல் ஆள்: 'Thot' is your name?
2-ஆம் ஆள்: Yes. Guud.
முதல் ஆள்: Good. Is that Greek?
2-ஆம் ஆள்: No. Dutch.
முதல் ஆள்: Thot is Good.
2-ஆம் ஆள்: See you then Wright.
இருவரும் வெளியேறி சென்றுவிடுகிறார்கள் :-)
எழுதியது Sridhar V at 9/22/2008 10:54:00 PM 15 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: elevator talk, victor/victoria, எழுத்தாளர், எழுத்து, சினிமா, சிறு உரையாடல்
ஒருபக்கம்: இட்லிவடை, சீன திரைப்படம் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள்
September 18, 2008பதிவு எழுதத் தொடங்கிய இந்தச் சிறு காலகட்டத்தில், சில பதிவர்களுடன் நேரிலும், சாட்டிலும் அளவளாவும் வாய்ப்புகள் அமைந்தது. எல்லா பதிவர்களுடனும் பேசியதில் பொதுவான ஒரு சப்ஜெக்டாக இருந்தது 'யார் இந்த இட்லிவடை?'. இந்த வாரம் ட்விட்டரிலும் சிலர் இதைப் பேசிக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாது. இட்லிவடையேக் கூட இந்தக் கூட்டத்தில் இருந்து கொண்டு 'இவரா', 'அவரா' என்று கும்மியடித்துக் கொண்டிருக்கலாம். கடைசியில் இட்லிவடை என்பது ஒரு குழு மற்றும் அதில் இருப்பது 'கோயிஞ்சாமி' கூட்டம்தான் என்று முடிவாகச் சொல்லிவிட்டார்கள். அட யாருப்பா அந்த 'கோயிஞ்சாமி'?
இம்மாதிரியாக மறைந்து உறைய இணையம் சுவாரசியமானதொரு இடம்தான். இட்லிவடை இன்னமும் எவ்வளவு காலம் தாக்குபிடிக்கப் போகிறார்? Stay tuned!
சில வாரங்களுக்கு முன்னர் பார்த்த சீன மொழிப் படம் - 'காமம், எச்சரிக்கை' (Lust, Caution). விக்கிபீடியா பல சுவாரசியமானத் தகவலை தருகிறது இந்தப் படத்தைப் பற்றி. இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான புரட்சியை பின்புலமாக கொண்டு பின்னப்பட்ட கதை. ஹாங்காங்க் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் Kuang Yu Min தலைமையில் புரட்சி நாடகம் நடத்துகிறார்கள். Wang Chia Chi என்னும் பெண் அவனால் ஈர்க்கப்பட்டு அந்த கூட்டத்தில் சேர்கிறாள். தொடர்ந்து ஒரு ரகசியப் புரட்சிப் படை அமைத்து சீன போம்மை அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கொலை சதித் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களின் குறி சீனத் தேச துரோகி என்று நம்பப்படும் Yee. சியா சி-தான் அதில் முக்கியமானவள். அவள் யீ-யின் மனைவியுடன் நெருக்கமாகிறாள். தொடர்ந்து யீ-யை நெருங்கி, அவரை மயக்கி புரட்சியாளர்கள் பாசறைக்கு கொண்டு வர வேண்டும் என்பது திட்டம். முதல் திட்டம் படு தோல்வி. யீ ஷாங்காய் சென்று விடுகிறார். புரட்சியாளர்கள் குறிக்கோள் வெளியே தெரிந்துவிட ஒரு கொலை நிகழ்கிறது. புரட்சிப் படை சிதறுகிறது. மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் ஷாங்காயில் சியா சி-யும் குவாங்க்-ம் சந்திக்கிறார்கள். இப்பொழுது குவாங்கும் நண்பர்களும் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சி அமைப்பின் அங்கம். புரட்சி அமைப்பை நசுக்கும் போலிஸ் படைக்கு தலைமையேற்றுக் கொண்டிருக்கும் யீ அவர்களுக்கு பெரும் தலைவலி. மீண்டும் சியா சி-யை தூண்டிலாக உபயோகித்து யீ-யை அகற்றிவிட திட்டம் தீட்டுகிறார்கள்.
எதிர்பார்த்தபடி யீ வலையில் விழுகிறார். ஆனால் சியா சி-யும் வலையில் விழுகிறாள். யீ-யை காதலிக்கும் அவள் நடிப்பு அவளையறியாமலேயே அவளை விழுங்குகிறது. ஒரு கட்டத்தில் அவள் புரட்சி அமைப்பின் தலைவரிடம் புலம்புகிறாள் 'அவன் என் உடம்பை மட்டுமல்ல என் மனதையும் தனது பாம்பு கரங்களால் வளைத்து விழுங்குகிறான்'. இறுதியில் புரட்சிப் படை ஜெயித்ததா? யீ தப்பித்தாரா? சியா சி என்னவானாள்? என்று உச்சக்காட்சிகளில் சொல்லப்படுகிறது. மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். போர்ப் படத்திற்குண்டான துப்பாக்கி, டாங்கி, குண்டு பொழியும் விமானங்கள் போன்றவை இல்லாமலேயே அந்தப் போர்காலத்தை கண் முன்னே நிறுத்திவிடுகிறது. கல்லூரி மாணவர்கள் அமைக்கும் அமெச்சூர் புரட்சிப் படையின் நடைமுறை சிக்கல்கள் அழகாக சொல்லப் படுகின்றன. பெரிய சிக்கல் சியா சி-யின் கன்னித் தன்மை. அவள் Mrs. Mak என்றுதான் யீ-யின் குடும்பத்திற்கு அறிமுகமாகிறாள். யீ-யை மயக்கி அவருடன் உறவு கொள்ளும்போது உண்மை தெரிந்துவிடுமே. குவாங்க்-ம் சியா சி-யும் ஒருவரை ஒருவர் மறைமுகமாக விரும்பினாலும், சியா-வின் கன்னித்தன்மையை அகற்றும் பொறுப்பு இன்னொரு அனுபவம் வாய்ந்த நண்பனிடம் கொடுக்கப் படுகிறது. அடுத்து ஷாங்காயில் யீ-யை ரகசியமாக சியா சந்திக்கும் போது அவர் மிருகத்தனமாக அவளை அடைகிறார். தொடர்ந்து சந்திப்புகளில் யாரையும் நம்பாத யீ சியா சீ-ஐ பரிபூரணமக நம்புகிறார். காதல் காட்சிகள் சூடாக படமாக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் பத்து நிமிடங்களுக்கு படம் முழுவதும் யீ-யும் சியா-வும் காதல் செய்கிறார்கள். அதைப் படமாக்க கிட்டத்தட்ட 100 மணி நேரம் செலவழித்தார்கள் என்று விக்கி சொல்கிறது. ஷாங்காயில் நகைக்கடை நடத்துபவராக நமது பாலிவுட் நடிகர் அனுபம் கேர் வருகிறார். அவருக்கு உதவியாக Vijay Raaz-ம் வருகிறார். சீன மொழியில் இந்த தலைப்பு சிலேடையாக இருக்கிறது. அதாவது மாண்ட்ரீனில் (Mandarin - சீன மொழி) காமத்திற்கும், நிறத்திற்கும் ஒரே எழுத்துதான். அதேபோல் எச்சரிக்கைக்கும் மோதிரதிற்கும் ஒரே வார்த்தை. இதன் தலைப்பு 'வண்ண மோதிரம்' என்றும் சொல்லலாம். யீ-யை கொல்ல சியா சீ குறிக்கும் நாளில் யீ அவளுக்கு ஒரு மோதிரம் பரிசளிக்கிறார்.
சோனி டிவியில் சில வருடங்கள் முன்னர் சூப்பர் சிங்கர் போல ஒரு புதிய குரல் தேடல் போட்டி நடத்தினார்கள். ஜாவேத் அக்தர், ஷங்கர் மகாதேவன் போன்ற பெரிய தலைகள் எல்லாம் பங்கேற்று பல வாரங்கள் ஓடிய நிகழ்ச்சி. அதுதான் நான் பார்த்த முதல் ரியாலிட்டி நிகழ்ச்சி. தற்போது தமிழ் சேனல்களிலே பற்ப்பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையான பார்வையாளர் பங்கேற்பு அதிகபடுத்துதல் நிகழ்வதில்லை. அதாவது பார்வையாளர்கள் பார்க்க மட்டும் செய்யக் கூடாது. நிகழ்ச்சியின் போக்கை தீர்மாணிக்கவும் வேண்டும். அதுவே ரியாலிட்டி ஷோக்களின் வெற்றி. Bruce Almighty படம் ஒரு சிறந்த உதாரணம்.
தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சுவாரசியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. 20 பங்கேற்பாளர்கள்தான் எஞ்சியிருக்கிறார்கள். சின்மயி மிகச் சிறந்த தொகுப்பாளராக பரிமளிக்கிறார். நான் ரசித்தது மால்குடி சுபாவின் உற்சாகமான ப்ரெசென்ஸ். Such a Bubbly Charcter she is.
எழுதியது Sridhar V at 9/18/2008 10:43:00 PM 16 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: lust caution, இட்லிவடை, ஒருபக்கம், சினிமா, சீன திரைப்படம், ரியாலிட்டி ஷோ
சவரம் செய்த முகம்
September 17, 2008தாத்தாவிற்கு நல்ல கருகருவென முடியிருக்கும். அந்த வயதிற்கு நரைமுடியைத் தேடித்தான் பிடிக்க வேண்டும். பக்கவாட்டிலும், பின்னாலும் ஒட்ட வெட்டியிருக்க, மேல் மண்டையில் வகிடு எடுத்து இரண்டு பக்கமும் தள்ளிவிட்டாற்ப் போல சற்றே சரிந்து அழகாக சிகை அலங்காரம் செய்திருப்பார். அவர் பாப்பாவை தூக்கிக் கொண்டு தெருவில் நடந்து போகும்போது தலையில் தேங்காய் எண்ணெய் வாசத்தோடு கலந்து ஒரு நறுமனம் பாப்பாவின் நாசியில் சுற்ற, கைகளைக் கட்டிக்கொண்டு உதட்டை 'ப்'என மூடிக்கொண்டு போவாள்.
தாத்தாவின் அடர்ந்த தலைமுடியை சீர்படுத்தும் பொறுப்பு ரொம்பக் காலமாகவே வேலுவிடம்தான் இருந்தது. முக்கால் கைகளை மறைக்கும் தொளதொள சட்டையும், பஞ்சு போல் வெளுத்த தலையும், ஒழுங்கில்லாத நரைத்த தாடியும் தடிமனான கண்ணாடிக்குப் பின்னால் சாம்பல் நிறக் கண்களுமாய் வாசக்கதவுக்கு அருகே இருக்கும் கதவில்லாத கம்பி ஜன்னலுக்கு வெளியே வந்து நிற்பார். தாத்தாவின் மனதறிந்தது போல் சரியான காலக்கட்டதில்தான் வருவார். 'பாப்பா, ஐயா இருக்காஹளா' என்று கேட்பார். தாத்தா கூடத்தில் டைரி எழுதிக் கொண்டோ, பின்கட்டில் பேசிக் கொண்டோ, உள் ரூமில் கடன் சிட்டைகளைச் சரி பார்த்துக் கொண்டோ, உள் திண்ணையில் தினமணி படித்துக் கொண்டோ இருப்பார். 'அமாவாசை கழிஞ்சு ஞாயித்துக் கிழமை வரச்சொல்லு' என்பார்.
வாரம் ஒரு முறை முகச் சவரம். மாதம் ஒரு முறை முடி வெட்டுதல் மற்றும் உடல் சவரம். அட்டவணை எல்லாம் போடாமல் அவர்களிருவருக்குமிடையே ஒரு ஒத்திசைவோடு கிரமப்படி நடந்து கொண்டிருந்தது. வேலு வெள்ளை நிற லுங்கியை தொடை வரை வழித்துவிட்டுக் கொண்டு குத்துக் காலிட்டு உட்கார்ந்துக் கொண்டு, சின்னதான ஒரு பெட்டியிலிருந்து தனது சவர உபகரணங்களை எடுத்து தயார் படுத்திக் கொண்டு காத்திருப்பார். அந்த காலத்தில் பெரும்பாலும் ஆண்களின் உடைகள் வெண்மை நிறத்திலேயே இருந்தன. பூப்போட்ட சிங்கப்பூர் லுங்கிகள் பின்னர்தான் பிரபலம் ஆனது.
தாத்தாவிற்கும் வேலுவிற்கும் இடையே சம்பாஷனைகள் எப்பொழுதும் நடப்பதில்லை. தாத்தா வெள்ளை நிறத் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு சப்பனமிட்டு உட்கார்ந்து கொள்வார். ஒரு மக்கிப்போன பிரஷ்ஷினால் அந்த் சோப்புக் கட்டியை சுழற்றி சுழற்றி நுரையை அவர் முகத்தில் பூச சவரம் தொடங்கிவிடும். சின்ன வயதில் வேலுவின் முழு சம்ரக்ஷணையையும் பார்ப்பது பாப்பாவிற்கு ஒரு பொழுதுபோக்கு. எல்லாம் முடிந்தவுடன் தாத்தா எழுந்து குளிக்க உள்ளே சென்றுவிட, பணப் பட்டுவாடா செய்வது பாப்பாவின் வேலை. பாட்டி கொடுத்தாலும் சரி பாப்பா கொடுத்தாலும் சரி வேலு இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தான் இறங்கிப் போவார். எப்பவாவது வாசத் திண்ணையில் தனது கருவிகளை கழுவி துடைத்துக் கொண்டிருக்கையில் 'என்ன படிக்கிறே பாப்பா?' என்று கேட்பார். 'தேர்ட் ஸ்டாண்டர்டு' என்று சொன்னால் தலையை அசைத்துக் கொண்டே போய்விடுவார். வேலுவிற்கு நல்ல பழுத்த வயது. சமயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் சவரக் கத்தியை எப்படி சரியான இடத்தில் வைக்கிறார் என்பதே அதிசயமாக இருக்கும்.
சிலசமயம் 'பாட்டி இருக்காஹளா? எதுனா பழைய துணி இருக்கா?' யாசகம் கேட்கும் சங்கடத்தை மறைக்கும் வகையில் ஒரு அசட்டு சிரிப்புடன் கேட்பார். பாட்டி எப்பொழுதுமே ஆற்றில் போட்டால் அளந்து போடு என்ற கறாரான கொள்கையுடன் இருப்பவர். 'நவராத்திரி கழிஞ்சு பாக்கலாம்' என்பார். அப்பொழுதுதான் சித்திரை வெய்யில் போடு போடென்று போட்டுக் கொண்டிருக்கும். பாப்பா கல்லூரியில் சேரும்வரை கிரமமாக வேலு வந்து போய்க் கொண்டிருந்தார். ஏதோ ஒரு நாள் அதிகாலையில் மொட்டை மாடிக்குப் படிக்கப் போகும்போது தட்டுமுட்டு சாமான் போட்டு வைத்திருக்கும் சேந்திக்கு அருகே தாத்தா கண்ணாடி வைத்து தானே சவரம் செய்து கொண்டிருந்ததை பார்த்தாள். வேலுக்கு வயதானபடியால் வரத்து குறைந்து போய்விட்டதாம்.
வேலுவிடம் தாத்தா எப்போதும் நேரடியாகப் பேசினது இல்லை. பாப்பா திருமணம் ஆகிப் போகிறவரை பெரும்பாலும் அவள்தான் தாத்தாவிற்கு காரியதரிசி மாதிரி. சரியான கூட்டணிதான் இருவரும். தாத்தாவின் பேரப் பிள்ளைகளில் முதல் பேத்தி என்பதினால் பாப்பாவிற்கு எப்பொழுதும் ஸ்பெஷல் மரியாதை உண்டு. தாத்தா என்றுமே வெள்ளையில்தான் சட்டை போடுவார். அரைக்கை சட்டை என்றால் 'ஸ்லாக்', முழுக்கை என்றால் 'ஷர்ட்', என்று வகைப் படுத்தி வைத்திருப்பார். பித்தான்கள் பித்தளையில் தனியாக நூலில் கோர்க்கப்பட்டு சட்டையில் சேர்த்துக் கொள்கிற மாதிரி இருக்கும். நல்ல நெடிய மாநிற மேனியில் ஆங்காங்கே விபூதி அடையாளத்தோடு எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருப்பார். எண்ணெய் வைத்து இழைத்துப் பின்னி விட்ட இரட்டை ஜடையும், சீட்டிப் பாவாடையும் சட்டையுமாக பாப்பாவைத் தூக்கிக் கொண்டே கோவிலுக்கு போவார். ஐந்து வயதுவரை இப்படி தூக்கிக் கொண்டேதான் போனார். பின்னர் அவர்கள் கூட்டணியில் மற்ற பேரப்பிள்ளைகள் சங்கரன், சண்முகம் என்று தொடர்ந்து சேர பாப்பாவிற்கு மேற்பார்வையாளராக பிரமோஷன் ஆகிவிட்டிருந்தது.
கிழக்கு கோபுரவாயில் வழியாக உள்ளே சென்று தரிசனம் முடித்துவிட்டு வடக்கு கோபுரவாயில் வழியாக நாச்சிமுத்துவின் கடைக்கு போவார்கள். 'பாப்பாக்கு ஒரு ஃப்ரூட்மிக்சர்?' என்று எப்பொழுது போனாலும் கேட்பார் நாச்சிமுத்து. அவர் கைகளில் பரபரவென கண்ணாடி தம்ளர்கள் சுழன்று கொண்டே இருக்க பெரிய தெர்மக்கோல் தொட்டியிலிருந்து ஃப்ரூட் மிக்சரை ஊற்றிக் கொண்டே இருப்பார். ஆனால் பாப்பாவிற்கு சாப்பிட்டதாக நினவில்லை. தாத்தா வெளியில் எதுவும் சாப்பிடுவதில்லை. கோவில் பட்சணக் கடையில் சிலசமயம் லட்டு, அதிரசம் என்று ஏதாவது வாங்குவது உண்டு. தாத்தா ஒரு முறை வார்டு கவுன்சிலராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அதற்கு சர்பத் கடை நாச்சிமுத்துதான் முழுமுதற்க் காரணமாக இருந்ததால் அவர் கடையில் எப்பொழுதும் ஒரு இரண்டு நிமிடம் தங்கல் உண்டு. அடுத்த முறை தேர்தலில் நிற்கவில்லை. புதுப் பஸ்ஸ்டாண்டிற்கு நில ஆர்ஜிதம் செய்யும் விஷயத்தில் மனோகரன் போன்றவர்கள் 'வட்டிக் கடை நடத்திப் பொழைக்கிறவ்ன் எல்லாம் மக்கள் சேவை செய்யறேன்னு நாடகம் போடறாங்க' என்று நக்கலடித்ததில் காயம்பட்டு விட்டார்ப் போல. நாச்சிமுத்துவோடு பேசும்போது 'கெடக்குறான் அந்த பொறம்போக்குப் பய.' என்று அவ்வப்போது ஆறுதல் சொல்வார்.
கல்லூரி படிப்ப்பை முடிக்கு முன்னரே 'குத்த வச்ச பொட்டப் புள்ளையை எம்புட்டு நாள் வூட்டுலே வச்சிருப்பிய' என்று சாமிநாத மாமா ஜரூராக வரன் பார்த்து முடித்து வைத்தார். திருமணம் ஆனபிறகு சுந்தரேசனுக்கு ஊர் ஊராக சுற்றும் விற்பனைப் பிரதிநிதி வேலையாதலால் பெரும்பாலும் தாத்தாவோடு கடித தொடர்புதான் இருந்தது. அவ்வப்போது பண்டிகை விடுமுறைகளுக்கு மட்டும் தாத்தாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு இருந்தது. சென்ற புரட்டாசி மாதத்தின் மத்தியில்தான் பாட்டி தவறிப் போனார். தாத்தா வெளியில் கலங்காமல் இருந்தாலும் மனதில் நொறுங்கிப் போய்விட்டார்ப் போல. அவ்வப்போது வந்து கொண்டிருந்த கடிதங்கள் மொத்தமாக நின்று போய் மூன்று மாதம் ஆகிவிட்டது.
போன வியாழக்கிழமை அதிகாலையில் திருநா மாமா போன் பண்ணியிருந்தார். தாத்தாவிற்கு இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது என்று ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக. சனி, ஞாயிறாக பார்த்துக் கொண்டு சுந்தரேசனோடு பாப்பா ஊருக்கு வந்தாள். இரண்டு கிட்னிகளும் சுத்தமாக் பிரயோஜனப்படாது என்று சொல்லிவிட்டார்களாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்த இரத்த அழுத்த மாத்திரையின் பக்க விளைவாக இருக்கலாம் என்று டாக்டர் சொன்னார். வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டார்கள். வாரம் இருமுறை டயாலிஸஸ் செய்ய வேண்டுமாம். திருநா மாமாவிற்கு இப்பொழுதே ஆயாசமாக ஆகிவிட்டிருந்தது. கிட்னி மாற்று சிகிச்சையைப் பற்றி அங்கே யாரும் பேச்செடுக்கிற மனநிலையில் இல்லை. டாக்டர்களும் ஒரு குறைந்தபட்ச வாய்ப்பினைத்தான் கொடுத்திருந்தார்கள்.
பாப்பாவிற்கு நம்பவே முடியவில்லை. தாத்தா எப்படி இப்படி கெழண்டு போனார். பாட்டியின் இழப்பிற்கு அப்புறம் தாத்தா சுத்தமாக வாழும் ஆசையை தொலைத்தவராக இருந்தார். ஒரு குழந்தையைப் போல நினைவு தப்பி தொடர்பில்லாமல் செய்கைகள் இருந்தன. வெளுத்துப் போன தலைமுடியும், மழிக்காத முகமுமாய் பேச்சு வெகுவாக குறைந்து போய் விட்டிருந்தது. தலைமுடி பராமரிக்காமல் விடப்பட்டு சிக்குப் பிடித்து இருந்தது. இவளைப் பார்த்தபோது அவர் விழிகள் மேலும் கீழுமாய் உருண்டது மட்டும்தான் தெரிந்தது. சிரித்தாரோ அல்லது சிரிக்க முயற்சித்தாரோ.
திருநா மாமாவிடம் கேட்டு பாப்பாவும் சன்முகமும் தாத்தாவிற்கு முகச்சவரம் செய்துவிட ஆரம்பித்தார்கள். சண்முகத்தின் ஷேவிங் ரேஸர் இரண்டாம் மனிதருக்கு சவரம் செய்ய சரிவரவில்லை. அதுவும் அடர்ந்த சிக்கலாகிப் போன தாடியில் அடிக்கடி மாட்டிக் கொண்டு திணறடித்தது. சண்முகம் உள் ரூமில் தேடிக் பிடித்து சவரக் கத்தி ஒன்று கொண்டு வந்தான். பாப்பாதான் தைரியமாக அதை வைத்து முழுச் சவரமும் செய்துவிட்டாள். கன்னத்தின் சுருக்கங்கள் பளிச்செனத் தெரிய பொக்கைவாயோடு சோகையாக சிரித்தார். மறுநாள் திருநா மாமா தாத்தாவின் தலை முழுவதும் மழித்து விட்டார். சிக்குப் பிடித்த தலையில் பேன்கள் தொல்லை வேறு. 'எங்கடா பிடிச்ச இந்த கத்தி. நல்ல கூர்மையா இருக்கே' என்று சண்முகத்திடம் கேட்க அவன் அந்தப் பெட்டியைக் காட்டினான். அந்தப் பெட்டியில் ஓரிரண்டு சீப்புகள், கத்திரிக்கோல், கையால் இயக்கப்படும் முடிவெட்டும் மெஷின் எல்லாம் இருந்தன. கூடவே ஒரு கடன் சிட்டை. பாப்பாவிற்கு பழக்கமான தாத்தாவின் கையெழுத்தில் 'வேலு - அ. ரூ 30/- வ. ரூ 12/- ' என்று வரிசையாக வட்டிக் கணக்கு குறிக்கப்பட்டு '27/06/1987' அன்று சிட்டை முறியடிக்கப் பட்டிருந்தது.
மொட்டைத் தலையோடு தாத்தாவின் சவரம் செய்த முகம் ரொம்பச் சின்னதாக ஆகிவிட்ட மாதிரி இருந்தது பாப்பாவிற்கு.
எழுதியது Sridhar V at 9/17/2008 09:27:00 PM 18 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: கடன் சிட்டை, சிறுகதை, பாப்பா
தொடர்ச்சியாக - ஞாநி, ஜெமோ மற்றும் பல
September 11, 2008குமுதம் வெப் டீவிக்காக ஞாநி எடுக்கும் பேட்டிகள் சிலவற்றை தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். இதில் கவர்ந்த அம்சம் என்னவென்றால், பேட்டி கொடுக்கிறவர்களுக்கு பேட்டி எடுப்பது ஞாநி என்று உணர்வு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் ஞாநி ஏனோ மேலோட்டமாகவே பேட்டிகள் எடுத்தமாதிரி இருந்தது. அமீர், பாலகுமாரன் பேட்டிகள் விதிவிலக்கு. அமீருக்கு விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லை. 'வன்முறை அதிகம் இருக்குதுன்னா, அப்புறம் ஏன் ஜெர்மனியில அவார்ட் கொடுத்தாங்க' என்ற மனநிலையில் இருந்தார். பருத்திவீரன் நுணுக்கமாக எடுக்கப் பட்ட திரைப்படம் என்பதை மறுப்பதற்கேதுமில்லை. ஆனால் ஒரு படைப்பாளி விமர்சகரை எதிர்கொள்ளும் நிலைகள் அவருக்கு புரியவில்லை. சுப்புடு விமர்சனம் செய்வார் ஆனால் அவருக்கு சங்கீதம் தெரியாது போன்ற கருத்துகள் மூலம் அவருடைய அறியாமையை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார். முன்னர் மொழி திரைப்பட விழாவிலும் அவர் ஞாநியை கண்டிக்கும் தொனியில் சிவாஜி படத்திற்கு வக்காலத்து வாங்கி பேசியதும் நினைவில் தோன்றியது. பாலகுமாரன் பேட்டியில் அவரும் சிறிது கோபப்பட்டது தெரிந்தது. 'ஒரு ஆணுக்கு இரு மனைவியரை அனுமதிக்கும் இந்த சமூகம், ஒரு பெண்ணிற்கு அனுமதி கொடுக்குமா' என்ற தொனியில் கேட்ட கேள்விக்கு பாலகுமாரன் தடுமாறித்தான் போனார். 'ஒரே வீட்டிலேயே இரண்டு மனைவிகளோடு இருக்கிறேன்' என்று பெருமையாக வேறு சொல்லிக் கொண்டார். நமது இந்திய சமூகத்தில் இருக்கும் பலதார பிரச்சினையின் அடித்தளமே வேறு என்றுதான் தோன்றுகிறது. உலகில் உள்ள பசி, பட்டினி, பெட்ரோல் தட்டுப்பாடு, குளோபல் வார்மிங், மதச்சண்டைகள், தீவிரவாதம் போன்ற சகலப் பிரச்சினைகளுக்கும் ஒரே காரணமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இந்த தனிமனித ஒழுக்கம் கொஞ்சம் அதிகமாகவே பேணப்படுகிறது போல் தெரிகிறது.
ஞாநியின் பிம்பத்திற்கு அவர் கரண் தப்பார் போல கூர்மையான பேட்டிகள் எடுக்க முயற்சிக்கலாம்.
மும்பையில் ஷபனா ஆஸ்மிக்கு வீடு கிடைக்கவில்லை. அவர் இஸ்லாமியர் என்பதால். இது ஒரு பெரிய பிரச்சினைதான். இன்னொரு பக்கம் ஏதாவது ஒரு கட்டிடத்தைக் காட்டி இது 'தாவூத்'க்கு சொந்தம் என்று சொன்னால் போதும், மக்கள் அம்பது அடி அந்தபக்கமாகவே உலாவுகிறார்கள். இப்பொழுது ராஜ் தாக்கரே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். அமிதாப்பச்சன் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் 'ராஜ் தாக்கரே என்னுடைய நல்ல நண்பர்' என்று சொல்லியிருக்கிறார். இல்லை, இல்லை. அது ஒரு ஜோக்காம். அமிதாப்பின் புனித பிம்பம் சரிந்து பல நாட்களாகிறது. அமர்சிங் போன்றோரின் அண்மை அவருடைய கடன்களை தீர்க்க உதவியிருக்கலாம். ஆனால் அதற்காக தான் ஒரு தொழில்முறை விவசாயி என்று சொல்வதின் அரசியலை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள். ஏதோ சொல்வார்களே 'நாயை அடிப்பானேன் ........ சுமப்பானேன்' என்று. அவர் மனைவி தீர்மானமாக 'நான் ஹிந்தியில்தான் பேசுவேன்' என்று ஒரு விழாவில் சொன்னது மீண்டும் பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கிறது. நமக்கு ஹைதரபாத், பெங்களூரு தாண்டினாலே வடநாடு வந்துவிடும். ஆனால் மராட்டியர்களுக்கு எப்பொழுதும் அவர்கள் மராட்டியர்தான். ஹிந்தி பேசுபவர்கள்தான் வடநாட்டினர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் புதிய மாதவி தாக்கரேக்களைப் பற்றி திண்ணையில் எழுதியிருக்கிறார். அவர்களும் மகராஷ்டிராவிற்கு பிழைப்புத் தேடி வந்தவர்கள்தானாம். ஆனால் மகராஷ்டிராவை சுவீகரித்துக் கொண்டுவிட்டார்கள். தசாவதார வசனம் நினைவிற்கு வருகிறது. 'தமிழன் நீ தமிழ் பேசலைன்னா, தமிழ் எப்படி வளரும்?' என்று தெலுங்கரான பல்ராம் நாயுடு கேட்க. 'உங்களை மாதிரி ஒரு தெலுங்கர் யாராவது தமிழ் வளப்பாங்க' என்று தமிழரான கோவிந்த் சொல்கிறார்.
என்னைப் பொறுத்தவரை நீண்ட தூரப் பயனங்கள் எப்பொழுதுமே கடினமானவை. விடுமுறைகள் பொதுவாக வீட்டிலேயே ஏதாவது கதை புத்தகத்தில் ஆழ்ந்தோ, நல்ல திரைப்படங்கள் பார்த்தோ பொழுதுபோக்கப் படவேண்டியவை. ஐந்து வருடங்களுக்கு முன்னர் வரை அப்படித்தான் எனது விடுமுறைகள் இருந்தன. அதற்கப்புறம் என்னவா? ஹி..ஹி.. திருமணம் ஆகிவிட்டது. ஜெயமோகனின் பயனக்கட்டுரைகள் படிக்க மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது. சுடச்சுட கட்டுரை எழுதி இணையத்தில் அளிப்பதால், நாமும் கூடவே பயனம் செய்கின்ற உணர்வு மேலிடுகிறது. அகோபிலத்தில் அவருடைய அனுபவங்களைப் படிக்கும் போது சிறு நெருடல். அஹோபிலத்தின் மிகப்பெரிய சிக்கலாக அதைச்சுற்றி உருவாகியிருக்கும் குடிசைப்ப்பகுதி என்று சொல்கிறார். சுத்தமென்பதையே அறியாதவர்கள் எந்தவிதமான பொறுப்பும் இல்லாமல் அந்தச் சூழலை சீரழிக்கிறார்கள் என்றும் எழுதுகிறார். இது அந்தக் குடிசைவாசிகளின் தவறு மட்டுமா? சுத்தமும், சுகாதாரமும் சொல்லிக் கொடுக்காமல் அவர்களை அப்படியே விட்டு வைத்திருப்பது யாருடைய தவறு என்ற கேள்வி எழுகிறது.
இந்தக் கட்டுரைகளை ஒரு வழிகாட்டியாக வைத்துக் கொண்டு பயனம் செய்ய ஆசை உண்டாகிறது.
R P ராஜநாயஹத்தின் எழுத்துக்களை சில வருடங்களுக்கு முன்னர் திண்ணையில் படித்தேன். அந்த நேரத்தில் ஊட்டியில் நடந்த தளைய சிங்கம் கருத்தரங்கத்தைப் பற்றிய செய்திகளில் அவர் பெயர் அடிபட ஆரம்பித்தது என்று நினைக்கின்றேன். பின்னர் ராயர் காபி கிளப் குழுமத்தில் மிகத் தீவிரமாக ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தார். அவரே சொன்ன மாதிரி gibberish ஆங்கிலமாகத்தான் இருக்கும். இப்பொழுது வலைத்தளம் தொடங்கி பல அனுபவங்களைப் பதிகிறார். சுவாரசியமாக இருக்கிறது. 1985-ல் மு.க. அழகிரி மதுரையில் குடியேறியதைப் பற்றி எழுதியிருக்கிறார். மதுரைச் சாலையில் ஆட்டோவிற்கு பேரம் பேசும் அழகிரியைப் பற்றி படிக்கும்பொழுது காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது என்று எண்ணத் தோன்றுகிறது. இம்மாதிரி பழைய சம்பவங்களை அசைபோடுவது மிகுந்த சுவாரசியமானதுதான். என்ன அடிக்கடி ஜெயமோகனைத் தொட்டு அவர் ஒரு மனநோயாளி என்று நையாண்டி செய்வதுதான் புரியவில்லை. மனநிலை தவறியவர்கள் திருந்தக் கூடாதா? இல்லை எழுதத்தான் கூடாதா? கனிமொழி கூட ஒரு விழாவில் இதையே ஆயுதமாக உபயோகித்தது நினைவிற்கு வருகிறது. அவரவர் நியாயம் அவரவர்க்கு.
கிறுக்குப் பிடித்த கடவுள்கள் (Gods must be crazy I & II). 80-களில் வெளிவந்த சிறந்த நகைசுவைப் படம். ஆப்பிரிக்க காடுகளில் உள்ளடங்கிய கலஹாரி பாலைவனத்தில் இருக்கும் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் நாகரீக உலகத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நகைசுவையோடு சொல்லிக் கொண்டு போகிறது. முதல் பகுதியில் கோகோகோலா பாட்டில் உண்டாக்கும் கலவரத்தைப் பற்றிய கதை. ஒரு டப்பாக் காருடன் காட்டிலே அந்த விஞ்ஞானி பயனிப்பதிலாகட்டும், புதிதாக வந்த பள்ளிக்கூட டீச்சரைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு தடுமாறுவதாகட்டும், நகரத்தின் பழக்க வழக்கங்களைப் பற்றிய அறிவில்லாமல் Xi (பழங்குடி மனிதன்) ஆட்டை வேட்டையாட தயாராவது போன்ற பல காட்சிகள் சிரிப்பிற்கு உத்தரவாதம். இரண்டாவது பகுதியில் வரும் பெண் ஆய்வாளர் அழகாகவும் கூர்மமயாகவும் நடித்திருந்தார். மிருகங்களைப் பற்றி நிறைய காட்சிகள் சுவையாக இருக்கும். கழுதைப்புலியிடமிருந்து தப்பிக்க தன் உயரத்தை கூட்டிக் கொள்ளும் சிறுவன் மனதைக் கொள்ளை கொள்கிறான். எனக்கு இரண்டாவது பகுதி மிகவும் பிடித்திருந்தது.
அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு என்னதான் வசதிகள் இருந்தாலும், அமெரிக்காவில் முடிவெட்டிக் கொள்வது ஒரு பிரச்சினைதான். நம்மூரில் 1, 2 அமெரிக்க டாலரில் 'முடி'கின்ற காரியம் இங்கே 10-12 அமெரிக்க டாலர் ஆகின்றதே என்ன்னும் எரிச்சல்தான். தானாகவே முடிவெட்டிக் கொள்கிற பிரஜைகளை அதிகம் பார்க்கலாம். மதுரையிலும் எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டுக்காரர் வீட்டிற்கு வெளியிலே ஒரு முக்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார அவர் மனைவி கடகடவென 'கட்' பண்ணி விடுவார். அமெரிக்கா வந்த புதிதில் முடிவெட்டும் கருவி வாங்கிவிடலாமா என்று மிகவும் யோசித்து விட்டு கடைசியில் ஒரு பார்பர் ஷாப்பைக் கண்டுபிடித்து துணிந்து 'தலை'யைக் கொடுத்துவிட்டேன். தன்னை பார்பர் என்று அறிமுகப் படுத்திக் கொண்ட அந்த கனவான் ஒரு வியட்நாம் நாட்டுக்ககரர். பெயர் 'கென்' என்றும், 12 வருடமாக முடிவெட்டுவதாகவும் தெரிவித்தார். 12 டாலர் ஆகும், அருகிலிருக்கும் அலங்கார சீமாட்டியிடம் வெட்டிக் கொண்டால் 10 டாலர்தான் என்றார். என்னய்யா வித்தியாசம் என்றால், தான் ஒரு பார்பர் என்றும் அந்த அம்மணி வெறுமே முடிவெட்டுபவர் மட்டுமே என்றார். அதாவது இவர் முடியழகு நிபுனராமாம். சரி ஒரு கலைஞனை ஊக்குவிப்போம் என்ற நல்லெண்ணத்திலும், அம்மினியை அடுத்த சேரிலிருந்துதான் நன்றாக பார்க்க முடியும் என்ற கெட்ட எண்ணத்திலும் கென்னிடமே முடி வெட்டிக் கொள்ள சம்மதித்தேன். சுவாரசியமான உரையாடல் தொடர்ந்தது. எடுத்த எடுப்பிலேயே 'நீங்கள் இந்தியரா' என்று கேட்டவர், ஹைதரபாத்திலிருந்தா வருகிறீர்கள் என்றார். எங்கு சென்றாலும் தெலுகு மக்கள் தங்கள் கொடியை நாட்டி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். அருகிலிருக்கும் இந்திய உணவகமான 'உடுப்பி ஹோட்டல்' அதிபருக்கு தாந்தான் முடிவெட்டுவதாக பறைசாற்றினார். நல்லது என்று வாழ்த்தினேன். எம்மாதிரி முடிதிருத்த வேண்டும் என்று கேட்டவரிடம், 'கொஞ்சமாக வெட்டுங்கள்' என்றேன். உடனே அவர் 'ரஜினிகாந்த் மாதிரி வெட்டிவிடவா?' என்று கேட்டாரே பார்க்கலாம். இதுதான் மார்கெட்டிங் சாகசமோ?
எழுதியது Sridhar V at 9/11/2008 11:00:00 PM 22 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: gods must be crazy, அமெரிக்கா, கென், சினிமா, ஜெமோ, ஞாநி, ராஜநாயஹம்
தொடர்ச்சியாக - சரோஜா முதல் சாருவரை
September 8, 2008சரோஜா - வெங்கட் பிரபுவின் இரண்டாவது படம். முதல் படம் பிரம்மாண்டமான வெற்றியான இயக்குநர்கள் பலர் இரண்டாவது படத்தில் சறுக்கியிருக்கிறார்கள். விதிவிலக்குகள் வெகு சிலர்தான். வெங்கட் பிரபு தப்பித்துவிட்டார். ஒரு புத்துணர்ச்சி படம் முழுவதும் விரவி இருக்கிறது. ஃபார்முலா கதை, க்ளிஷேக்கள் போன்றவற்றை கவனமாக தவிர்த்துவிட்டு படத்தை வெகு திறமையாக இயக்கியிருக்கிறார். நான்கு நண்பர்கள் சென்னையிலிருந்து ஹைதரபாத் செல்லும் பொழுது மாற்றுப் பாதையில் போக நேர்கிறது. அங்கே ஒரு கடத்தல் கோஷ்டி ஒரு பெண்ணை கடத்திக் கொண்டு வந்து அவளுடைய பணக்கார அப்பாவை ப்ளாக்மெயில் செய்கிறார்கள். அந்தப் பெண்தான் சரோஜா. சந்தர்ப்பவசத்தால் அந்த பெண் நண்பர்கள் குழாமைச் சேர எல்லாரும் சேர்ந்து வில்லன் கோஷ்டியிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். இறுதியில் அந்தப் பெண் அவள் அப்பாவை சேர்ந்தாளா? நான்கு பேரும் தப்பித்தார்களா? உச்சக் கட்டத்தில் சில எதிர்பாரா திருப்பங்களோடு படம் இனிதே முடிகிறது. பிரேம்ஜியின் காமெடி பெரும் பலம். சில ஒரிஜினல் டைலாக்குகளை ரசிக்க முடிகிறது. இயல்பாக நடிக்கிறார்கள். காமிரா உத்திகள் சில நன்றாக இருக்கின்றன. வில்லனின் அடியாள் சரோஜாவிடம் (கடத்தப்பட்ட பெண்) தவறாக நடக்க முனையும்போது காமிராவின் அதிர்வுகள் காட்சியை தெளிவில்லாமல் காட்டுகிறது. ஆனால் ஏதோ நடக்கிறது என்று மட்டும் ஒரு படபடப்பு உருவாக்குக்கிறது. 1.5 மணி நேரக் கதையை சாமர்த்தியமாக சில பாடல் காட்சிகள், திருமண நிச்சயதார்த்தம், எஸ்.பி.பி. சரணின் குடும்பப் பின்னனி, பிரும்மானந்தம் காமெடி என்று 2.5 மணி நேரத்திற்கு கொடுக்கிறார்கள். பிற்பகுதி இருட்டு கொஞ்சம் அயர்ச்சி தருகிறது. சரோஜா - புத்துணர்ச்சி. இறுதி கிரடிட்ஸில் வெங்கட் பிரபுவின் பெயருக்கு கிடைக்கும் கைதட்டல் நிச்சயம் ஒரு வெற்றிதான்.
பாலுமகேந்திரா - அழியாத கோலங்களும், மூன்றாம் பிறையும், வீடு-ம் தமிழ் சினிமா உலகின் மைல்கற்கள் என்பது நிச்சயம். குறிப்பாக வீடு படம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மனதை கசிய வைத்த படம். அதன் படைப்பாளி அனுஹாசனோடு விஜய் டிவியில் காபி குடிக்க வந்திருந்தார். கூடவே அவருடைய சிஷ்யர்கள் சீமான், ராமசுப்பு (கற்றது தமிழ்) மற்றும் வெற்றி மாறன் (பொல்லாதவன்). அவருடைய 'அது ஒரு கனாக் காலம்' அவ்வளவாக ரசிக்கவில்லை. விடலைப் பருவத்தின் இன்பாச்சுவேஷன் என்பதெல்லாம் சரி. ஆனால் காட்டிய களம் சரியாக அமையவில்லை. 'மூன்றாம் பிறை என்பது நானும் ஷோபாவும்தான்' என்று சொன்னார். "ஷோபாவின் பிரிவு தந்த வலியில் ஒரு சதவீதம்தான் அந்தப் படத்தின் உச்சக் காட்சியான இரயில்வே ஸ்டேஷனில் சீனு அழும்காட்சி." என்று சொன்னார். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் நடிகை மௌனிகா தன்னை அவருடைய மனைவியாக அடையாளப் படுத்திக் கொண்டது நினைவிற்கு வந்தது. நடிகைகள், இயக்குநர்களுக்கிடையே இருக்கும் இந்தவகை உறவானது இயல்பே என்று அவர் நினைத்திருப்பார்ப் போல. ஜீரணிக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. மேலும் அவர் சொக்கலிங்க பாகவதரைப் பற்றி நினைவு கூர்ந்த விஷயமும் ஏனோ அவர் படைப்புகளிலிருந்து அவரை அந்நியப் படுத்திவிட்டன. சிகரம் வைத்தாற்ப் போல காந்தியின் அகிம்சையை உச்சபட்ச வன்முறை என்று அவர் சொல்ல, அனுஹாசன் கூடவே 'கால்பெட்டி' வாசித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து 'வெள்ளைக்காரனை என்ன செய்ய முடியும்? அவன்கிட்ட வண்முறை எடுபடாது. அதனால் காந்தி இண்டெல்க்சுவல் வண்முறை என்ற பெயரில் அவனுடைய மனதை அடித்தார்' இப்படித்தான் ஏதோ சொன்னார். காந்தீயத்தைப் இப்படி ஒற்றைப் பரிமாணத்தில் சுருக்கியது அநியாயம். என்ன செய்ய... சில சமயம் படைப்பாளிகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது அந்த படைப்புகளை ரசிக்க சௌகரியமாக இருக்கும்.
குன்னக்குடி வைத்தியநாதன் - 'இந்தப் பாட்டை மூச்சு விடாம எஸ்பிபி பாடியிருக்கார். நான் அதை எப்படி வாசிக்கப் போறேன். பாருங்க' என்று அகலமாக சிரித்துக் கொண்டு வயலினிலிருந்து வில்லை எடுக்காமல் 'மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ' என்ற பாட்டை வயலினில் அவர் வாசிக்க, நாம் அவரையே பார்த்துக் கொண்டிருப்போம். பட்டையான விபூதி, பெரிய குங்குமப் பொட்டு. மணி பர்சை திறந்தாற்ப் போல பளிச்சென சிரிப்பு. குழைவானக் குரலில் ஏற்ற இறக்கத்துடன் பேசிக் கொண்டே கச்சேரி செய்யும் பாங்கு. ஏன் இவ்வளவு animated gestures என்று யோசிக்கிறவர்களுக்கு, அரங்கில் அத்தனை கண்களையும் இழுத்துப் பிடிக்கும் உத்திகளைப் பற்றி யோசித்திருக்க மாட்டார்கள். நிறையப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 'தோடி' என்ற படத்தில் சேஷகோபாலன் நடிக்க வைத்தியநாதன் இசையில் 'கொட்டாம்பட்டி ரோட்டிலே' என்ற ஜனரஞ்சகமான பாட்டு பிரபலம். இவரும் ஒரு காட்சியில் வந்து சேஷகோபாலனை கச்சேரி செய்ய வற்புறுத்துவார். திருவையாறு தியாகராஜ சபாவின் செயலாளராக பல கச்சேரிகளை ஒருங்கிணைத்து ஆளுமையை நிரூபித்தவர் இன்று நம்மிடம் இல்லை. மேடையிலிருந்து ரசிகனை நேரடியாக தன்னோடு இணைத்துக் கொள்ளும் வல்லமை படைத்த அவரைப் போன்ற இசைக் கலைஞர்கள் அபூர்வம். அவருடைய அசகாய சாதகம் இன்றைய இசை கலைஞர்களுக்கு ஒரு பாடம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.
இரா முருகன் - அரசூர் வம்சம் படித்த பொழுது பல்வேறு பிரமிப்புகள் அடைந்திருக்கின்றேன். எத்தனை செய்திகள். வரலாறு குறிப்புகள். அங்கதங்கள். போதாக்குறைக்கு மூத்தகுடிப் பெண்கள் பாடும் நலுங்குப் பாட்டுகளும், காற்றில் மிதந்து கொண்டு சிறுநீர் கழிக்க செல்லும் வயசனும் போல சில மேஜிக்கல் ரியாலிசம் (அப்படிச் சொல்லலாமா?) வேறு. அநாயசமாக எழுதுகிறார். பொதுவாக சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்வதில் எனக்கு அதிக நம்பிக்கை. இல்லையென்றால் நானெதற்கு ஒரு வலைப்பக்கத்தை திறந்து வைத்து எழுதிக் கொண்டிருக்கப் போகிறேன். ஒரு நாள் நமக்கும் எழுத்து கைவரும் என்ற நம்பிக்கையில்தானே. ஆனால் இரா.மு எழுதுவதைப் படிக்கும்பொழுது 'நாமெல்லாம் என்னத்த எழுதி... என்னத்த கிழிச்சு...' என்ற சுயபச்சாதாபம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அவருடைய தளத்தில் தமிழ் படைப்பிலக்கிய ரசனைக்கும் ஆங்கில படைப்பிலக்கிய ரசனைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி சொல்கிறார். 'இங்கீலிஷில் தமிழ் நாவல் எழுதினால் அது போய்ச் சேரும் வட்டம் மாணப் பெரிது'. விக்ரம் சேத், கோவிந்த் நிஹ்லானி போன்றவர்களோடு வோட்கா பானம் பண்ணிக் கொண்டு அரசூர் வம்சம் போன்ற புதினங்களின் ஆங்கிலப் பதிப்பை விவாதித்துக் கொண்டு... ம்ம்ம்... அடுத்த புனைவை ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்து விட வேண்டியதுதான்.
சாரு நிவேதிதா - ஆனந்த விகடனில் கோனல் பக்கங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னரே, புனைவுலகில் சாரு நிவேதிதா பெயர் பிரபலம்தான். கோனல் பக்கங்களை விடாமல் படித்து வந்திருக்கிறேன். ஆபிதீன் மற்றும் நாகூர் ரூமி சொன்ன குற்றச்சாட்டுகளையும் தாண்டி இன்றைக்கு உயிர்மை, கலாகௌமுதி போன்ற இதழ்களில் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார். அவருடைய எழுத்தில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் புனைவுலகின் தவிர்க்க முடியாத ஒரு படைப்பாளி என்பது உண்மை. சமீபமாக தனது தளத்தை கட்டணத் தளமாக மாற்ற ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்ப் போல. ஆன்லைனில் துக்ளக் ஒரு வாரத்திற்கு 20 USD கட்டணம் என்று வேறு உவமானம் கூறுகிறார். அப்படியா என்ன? அவர் முதலில் செய்ய வேண்டியது ஒரு Content management தளத்திற்கான அடிப்படையான RSS / Atom ஓடைகளை அளித்து, தேடும் வசதி சேர்த்து, அவர் எழுதியவற்றை வகைப் படுத்தி படிக்கிறவர்களுக்கு வசதி செய்து தரலாம். பிறகு கூகுள் ஆட்ஸ் போன்றவைகளை சேர்த்து, இணைய தளத்திற்கு அதிக வாசகர்களை ஈர்த்தாலே போதும். ஒரு எழுத்தாளரின் தளம் என்பதால் பல்வேறு புத்தகங்களை விற்பனைக்கு காட்சிப் படுத்தலாம் - 'நான் படிக்கும் புத்தகம்', 'இந்த புத்தகத்தைப் படித்தவர்கள், இதனையும் ரசித்தார்கள்' என்பது போல. அந்தப் புத்தகங்களை விற்பனை செய்யும் தளத்திற்கு நேரடி இணைப்பு கொடுப்பதின் ஆன்லைன் வர்த்தகம் செய்யலாம். சில கட்டுரைகளை கட்டணத்திற்கும் அளிக்கலாம். ஒட்டுமொத்தமாக கட்டணத் தளமாக மாற்றுவது என்பது இணையத்தில் தற்கொலைக்கு சமானம். அவர் தளத்தில் சுட்டிய ப்ளாக்குகளுக்கு அதிக ஹிட்கள் கிடைக்கின்றன என்று சொல்கிறார்கள். இந்த ப்ராண்டிங்கை வைத்து வர்த்தகத்தில் சாதிக்கும் சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. ஞாநி போன்றவர்கள் restricted access-உடன் தளங்கள் நடத்துகிறார்கள். ஆனால் இணையத்திற்கு ஏற்றவாறு சரியான முறையில் தனது எழுத்தை மார்கெட்டிங் செய்வதில் இரா. முருகன் ஒரு முன்னோடி (Pioneer). ஒருவருடைய எழுத்து நிறைய பேரை எளிதாக சென்றடையும்பொழுது அவருடைய படைப்புகள் காசு கொடுத்து வாங்கும் சாத்தியங்கள் கூடுகின்றன. இதை catapult effect என்பார்கள். உண்டிவில்லில் பின்னால் அதிகமாக இழுத்துவிட்டு விடும்பொழுது முன்னால் அதிகதூரம் பாய்கிறது.
தொடர்ந்து எழுதுவது என்பதே எனக்கு ஒரு சவால்தான். ஒரு சில புனைவுகள், பயனக் கட்டுரைகள் என்று அரைகுறையாக எழுதப்பட்ட பலவும் அப்படி அப்படியே கிடக்கின்றன. நேரப் பங்கீடு என்பது மிகவும் கடினமானதாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி ஏதோ எழுதிக் கொண்டு 'இருக்க'த்தான் ஆசை. 'இணையமும் இருத்தலியலும்' என்று அடுத்த பதிவு எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் :-)
எழுதியது Sridhar V at 9/08/2008 08:36:00 PM 25 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: குன்னக்குடி வைத்தியநாதன், சரோஜா, சாரு, தொடர்ச்சியாக, பாலு மகேந்திரா