December 20, 2009

பயணம் செய்கிறேன்!

ஒரு ‘சுருக்’ கவிதை மற்றும் ‘நறுக்’ கதைக்கு முன்னே ஒரு நன்றியறிவித்தல்.

பதிவர் சர்வேசன் ஒரு சிறுகதை போட்டி நடத்தி முடிவுகளும் அறிவித்திருக்கிறார். நிமித்தகாரன் பெரும்பாலான நடுவர்களுக்கு பிடித்து முதலிடம் பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இம்மாதிரி கதை போட்டிகள் நடத்துவதற்கு தேவைப்படும் உழைப்பு, நேரம், ஒருங்கிணைப்பு பிரச்சினைகள், நெகடிவ் விமர்சனங்களை எதிர்கொள்ளுதல் எல்லாம் தாண்டி ஒரு கிரியேட்டிவ் ஆர்வம் கண்டிப்பாக தேவை. அதற்காகவே சர்வேசனுக்கு ஒரு பெரிய நன்றி. நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த வெட்டிப்பயல் பாலாஜி, சிவிஆர், சென்ஷி, ராமலஷ்மி முதலானோருக்கும் நன்றிகள். இறுதிச் சுற்றில் தேர்வு செய்ய வோட்டுப் பெட்டி வைத்துவிட்டு பின்னர் கழட்டி விட்டுவிட்டார்கள். அந்த நேரத்திற்குள் வோட்டுப் போட்ட நண்பர்கள் அனைவருக்கும் பெரிய எழுத்தில் நன்றி. விடாமல் ட்விட்டரில் மொக்கை போட்டு நண்பர்களை தொந்தரவு செய்ததற்கு பயனாக நிறைய நண்பர்கள் போனால் போகிறதென்று வாழ்த்தினார்கள். சிலர் காரணமே தெரியாமல் வாழ்த்திவிட்டு ‘என்ன மேட்டர்?’ என்று சாவதானமாக கேட்டுக் கொண்டார்கள். எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பயணம் செய்கிறார்கள்

கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு
செந்திலிடம் சொன்னாள் நித்யா
”சந்திரனை என்னால் மறக்கவே முடியாது”.
“இப்படித்தான் காதலித்தோம் என்று நினைக்கிறேன்”
என்று நவீன் சொன்னபோது
கவிதாவால் நம்ப இயலவில்லை.
ராஜியைப் பற்றி சொல்லவேயில்லை கிரீஷ்.
ஓட்டலில் பார்த்த உயரமான கதிரவனை
சங்கீதாவிற்கு மிகவும் பிடித்திருந்தாலும்,
அடுத்த வரன் பார்க்கலாம் என்று
அம்மா சொல்லிவிட்டாள்.
மஞ்சள் தீற்றியக் கழுத்தோடு
மூணாறு போகும்போது
குமாரின் பெயரை சொல்லிச் சொல்லி
பழகிக் கொள்கிறாள் பவித்ரா.
இப்படித்தான்,
அவர்கள் ஒருவருக்குள் ஒருவராக
பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

வா! பயணிக்கலாம்

வியூகோ ஒரு ஜென் துறவி. உலகை சுற்றி பயணம் மேற்கொண்டிருந்தார். பயணம் என்பது அவருக்கு வாழும் முறையாகவே இருந்தது. பல வருடங்கள் கழித்து தனது சொந்த ஊரை வந்தடைந்தார். அங்கே அவரது பழைய சகா நிருமோ நிஷ்டையில் இருப்பதைக் கண்டார். வியூகோ உலக பயணம் கிளம்பியபோதும் நிருமோ இதே போல் நிஷ்டையில்தான் இருந்தார். எவ்வளவோ நாடுகள், சூழல்கள், மனிதர்கள், சம்பவங்கள், அபாயங்கள், சந்தோஷங்கள் என்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வியூகோவிற்கு அடங்காத ஆவல். தனது தொண்டைய கனைத்துக் கொண்டார். நிருமோ நிஷ்டையில் இருந்து கண் விழித்தார்.

வியூகோவைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே ‘என்ன அங்கேயே நின்று விட்டாய்? வா என்னுடன். நாம் பயணிக்கலாம்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.

உடன் வியூகோ தனது கையிலிருந்த சிவப்புக் கொடியை நிருமோவின் பக்கத்தில் நட்டுவைத்து விட்டு, மீண்டும் தேசாந்திரம் சென்று விட்டார்.

------------------------
மேற்ச்சொன்ன ஜென் கதையை குறைந்தது 10 பேருக்காவது மெயிலில் ஃபார்வேர்ட் செய்தீர்கள் என்றால் தொடர்ந்து இம்மாதிரி ஜென் கதைகள் எழுதாமல் இருக்க முயற்சி செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

18 மறுமொழிகள்:

சின்ன அம்மிணி said...

சர்வேசன் போட்டியில் வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள்.
ஒரு அருமையான கதைக்கு எடுத்துக்காட்டாய் இருந்தது நிமித்தக்காரன்.

Sridhar Narayanan said...

வாங்க அம்மிணி :)

உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

'சுருக்','நறுக்' இரண்டுமே அருமை.

நான் யாருக்கும் மெயிலில் ஃபார்வர்ட் செய்யவில்லை. தொடருங்கள் ஜென் கதைகளை:)!

பினாத்தல் சுரேஷ் said...

12 வரிக்கவிதையில் 12 பெயர்கள். இதை டெலிஃபோன் டைரக்டரிக் கவிதை என்று சொல்லலாமா?

உன்னாலன்றோ வந்தது இந்தப்புதுவகை கவிதைக்கு!

ஜென் கதைதானே? தாராளமா எழுதிக்கங்க. என்ன, உங்க குற்றச்சாட்டு உண்மையாயிடும் :-)

Sridhar Narayanan said...

வாங்க ராமலக்ஷ்மி!

//'சுருக்','நறுக்' இரண்டுமே அருமை.//

மிகவும் நன்றி :)

//நான் யாருக்கும் மெயிலில் ஃபார்வர்ட் செய்யவில்லை. தொடருங்கள் ஜென் கதைகளை:)!//

ஆகா... இம்புட்டு நாளா எங்கிட்டுக்கா இருந்தீங்க? உங்க ஒருத்தர் துணையிருந்தா போதும். Zen and the Art of Bloggingனு ஒரு பொஸ்தவேமே எழுதிடறேன். :)

வாங்க பெனாத்தல்ண்ணே...

இப்படில்லாம் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தாத்தான் நீங்கள்லாம் நம்மள கவனிக்கறீங்க. இல்லையா? :)

//டெலிஃபோன் டைரக்டரிக் கவிதை//

டைட்டில் நல்லாருக்கு. நோட் பண்ணிக்கிறேன்.

//உங்க குற்றச்சாட்டு உண்மையாயிடும் //

ம்ம்... இதுக்கே ரென்சன் ஆயிட்டா? இனி வந்து கும்மப் போறவங்கள எப்படி தாங்கிக்கறது? நான் என்னயச் சொல்லிகிட்டேன் :)

ஆயில்யன் said...

கவிதை :) - எல்லாரும் எழுத ஆரம்பிச்சிடுவாங்க - எத்தனை பேரு டிராவல் பண்ணினாங்கன்னு கணக்கு எடுக்கறதுதான் கொஞ்சூண்டு சிரமம் :)

ஜென் கதை - ஆஹா என்னமோ விசயம் -தத்துவம் - சொல்லப்போறீங்கன்னு ரெடியானா கடைசியில நாங்களாத்தான் யோசிச்சு தெரிஞ்சுக்கிடணுமா? நொம்ப்ப கஷ்டமப்பா !

pappu said...

இப்படி ஜென், மேஜிக்கல் ரியலிஸ்ம் எல்லாம் எப்படி எழுதுறீங்க... நாங்கதான் அரைச்ச மாவையே வச்சு ஓட்டிட்டு இருக்கோம் போலயே. பொறாமையா இருக்கப்பா, அடுத்தவங்க க்ரியேட்டிவிட்டி பார்க்கும் போது :)

Sridhar Narayanan said...

வாங்க கடக ராசிக்காரரே... :)

//கொஞ்சூண்டு சிரமம் //

கணக்குப் போட்டுப் பார்க்க கால்குலேட்டராய்யா இது... கவுஜ. ஜஸ்ட் படிச்சிட்டு தாண்டிப் போயிட்டே இருக்கனும் :))

//ஆஹா என்னமோ விசயம் -தத்துவம் - சொல்லப்போறீங்கன்னு//

அதான் ஜென் கதைகளோட மகிமை. எப்பவும் அந்த மர்ம தத்துவம் இருக்கற மாதிரியே மெய்ண்டைன் பண்ணிக்கனும் :)

அகவயமான பயணத்திற்கு குறியீடாக இருக்கிறார் நிகிமோ. அவருடைய பயணத்தில் அவர் நிலை மாறவில்லை. அவருடைய சூழலும் மாறவில்லை. அதனால் அவருக்கு வியூகோவின் அனுபவங்கள் தேங்கியவையாக (stagnated) தெரிந்தன.

வியூகோ புறவயமான பயணத்திற்கு குறியீடு. நிகிமோ தன்னை அழைப்பது தன்னை நிராகரிக்கவே என்று உணர்ந்ததினால் அவர் தனது பயணத்தை தொடர்கிறார். நட்டுவைக்கப்பட்ட செங்கொடி மாறுதலுக்கான அடையாளம். அதன் மூலமாக அடுத்த முறை அவர்கள் இருவரும் சந்திக்கும்போது என்னாகும் என்று நமக்கு ஆர்வம் ஏற்படுகிறது இல்லையா?

இதை வேறு வகையாகவும் அணுகலாம்.

//நொம்ப்ப கஷ்டமப்பா //

தத்துவம்னு கேக்காமப் போயிருந்தீங்கன்னா இந்தக் கஷ்டமெல்லாம் இருந்திருக்காதில்லை? :))

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சாரே!

Sridhar Narayanan said...

வாங்க பப்பு!

அப்படி நாமே ஜென் கதை ஜென் கதைன்னு அடிக்கடி சொல்லிகிட்டோம்னா, எப்பவாச்சும் அடுத்தவங்க சொல்லிட மாட்டாங்களா என்ன? விட மாட்டோம்ல :)

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

சென்ஷி said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..

கவிதை- எனக்குப் பிடிச்சிருக்குது. நல்ல வடிவமைப்பு.. தொடருங்கள்..

(எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத பின்நவீனத்துவக் காதல் இந்தக் கவி வரிகளில் தெறிக்கிறது) :)

ஜென் கதை மற்றும் அக, புற வழிப்பயண தத்துவ அலசல்கள் அசத்தல்..

(ஒரு பழைய்ய கதையில நல்லா படிச்சா நல்ல வேலை கிடைக்கும், வேலை கிடைச்சா பணம் சம்பாதிக்கலாம், பணம் சம்பாதிச்சு வீடு கட்டலாம், வீடு கட்டி நிம்மதியா கால் மேல கால் போட்டு உக்காரலாம்ன்னு சொல்ற அப்பாக்கிட்ட, பையன் இப்பவே அதானே செஞ்சுட்டு இருக்கான்னு சொல்றதும் ஜென் கதையில சேருமா? அக, புற சிந்தனை வடிவிலேயே சொல்லுங்க.) :-)

டைம் கிடைச்சா மறுக்கா வர்றேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இம்மாதிரிப் பட்டியல் கவிதைகள் நிறைய எழுதப்பட்டுள்ளன என்றாலும், உங்களுடையதும் நன்றாக இருக்கிறது. இப்படித்தான், அதனால், ஆகவே மாதிரியான இணைப்புச் சொற்களை முடிந்தவரையில் கவிதைகளில் தவிர்ப்பது நல்லது. அப்புறம் தலைப்பும் பிடிக்கவில்லை.

மதுரையம்பதி said...

அடடே!, ஜெயிச்சுப்புட்டீரா?, :)...வாழ்த்துக்கள். அரசியலாகட்டும், இந்த மாதிரி செலக்ஷன் ஆகட்டும், நான் ஓட்டுப் போட்டு ஜெயித்த முதல் ஆள் நீர்தான்...:)

ambi said...

ஓட்டு போட்ட எனக்கு இன்னும் காந்தி படம் போட்ட பேப்பர் உள்ளடக்கிய கவர் வந்து சேரவில்லை என நியாபகபடுத்துகிரேன். காந்தி என்று இல்லை,பெஞ்சபின் பிராங்க்ளின் படம் போட்ட பேப்பர் என்றாலும் பரவாயில்லை. :p

அப்புறம் நானும் கவிஜை, ஜென் கதைகள் எல்லாம் எழுதி விடுவேன் என எச்சரிக்கிறேன். :))

Viji said...

Congrats for a score of 90:-). You deserve it, for all your b'ful tamil:-).

I really njoyed reading "Suruk"

அனுஜன்யா said...

ஓஹோ, 'நச்' போட்டியிலும் நீங்க வின்னரா? சார், இதெல்லாம் சுத்த ஐ வாஸ் சார். காதில் ஏகப்பட்ட புகைச்சலுடன் 'வாழ்த்துகள்'. சர்வேசன், சென்ஷி, ராமலக்ஷ்மி, பாலாஜி இப்படி எல்லோரும் கவுத்துப்புட்டீங்களே :((((

இதுல கவிதை வேறயா? அதுக்கு முன்னாடியே ஜ்யோவ செட் அப் பண்ணியாச்சா? இந்த உலகத்தில் நியாயமே இல்லையாஆஆஆ.

சரி சரி வாழ்த்துகள் எல்லாவற்றுக்கும். Continue to rock man.


அனுஜன்யா

Sridhar Narayanan said...

வாங்க சென்ஷிண்ணா!

//எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத //

எதுக்கு இப்ப உங்க சொந்த அனுபவத்தை பற்றி சொல்லிகிட்டிருக்கீங்க? :)

//அதானே செஞ்சுட்டு இருக்கான்னு சொல்றதும் ஜென் கதையில சேருமா//

:) அந்தக் கதையில் வேறு வடிவங்களும் படித்திருக்கிறேன். தனுஷ் படத்தில் கூட அரைகுறையாக அந்தக் கதையை ஜோக்காக சேர்த்திருப்பார்கள். அதில் தத்துவ புரிதல் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

அப்ப இந்தக் கதையில் மட்டும் என்ன வாழுதாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. :))

உங்க வருகைக்கும், கருத்துகளுக்கும், மீள் வருகைக்கும் மிக்க நன்றிகள்.

வாங்க சுந்தர்ஜி!

//பட்டியல் கவிதைகள் //

இதில் பெயர்களை இரண்டு, மூன்றாக சுருக்கிக் கொண்டால் ஒரு நல்ல சிறுகதை கிடைக்கலாம். சரி.. சரி... திட்டாதீங்க :)

//உங்களுடையதும் நன்றாக இருக்கிறது//

மிக்க நன்றி!

//இணைப்புச் சொற்களை //

எனக்கும் தெரிந்தது (நிஜமாத்தாங்க). கொஞ்சம் எளிமையாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

முதலில் வைத்திருந்த தலைப்பு ‘சுயம்வரம்’. ஆனால் பயணம் இந்த இடுகையின் பொதுச் சரடாக தெரிந்ததால் இப்படி... ரைட்டு! அடுத்த முயற்சியை சரியாக செய்திருவோம்.

உங்க வருகைக்கும், பாராட்டுகளுக்கும், ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி!

வாங்க மௌலிண்ணா!

நீங்களும் ஓட்டுப் போட்டீங்களா? அப்ப அந்த 7 ஓட்டுல என் வோட்டைத்தான் சர்வேசன் சேத்துக்கலப் போல :)

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

வாங்க அம்பி அப்பா!

//பெஞ்சபின் பிராங்க்ளின் படம் போட்ட பேப்பர் என்றாலும் பரவாயில்லை.//

பக்கத்து வீட்டில் பெஞ்சமின் என்ற சீனப்பையன் இருக்கிறான். படம் எடுத்திருக்கிறேன். சீக்கிரம் படம் போட்ட பேப்பரை அனுப்பி வைக்கிறேன். :))

வாங்க விஜி!

//I really njoyed reading "Suruk"//

மிக்க நன்றி. ’சுருக்’ பிடித்திருக்கிறது என்று சொல்லி நைசாக ‘நறுக்’கை நீங்கள் குட்டியதும் சூப்பர் :)

Sridhar Narayanan said...

//ஜ்யோவ செட் அப் பண்ணியாச்சா//

வாங்க அனுஜன்யா. உங்களத்தான் முதல்ல செட் பண்ணின ஞாபகம் :)

//Continue to rock man. //

ரைட்டு... அடுத்து ஒரு ரொமாண்டிக் கவிதை எழுதி நான் ‘பாறை’ இல்லைன்னு நிரூபிச்சிடறேன் தல. திட்டாதீங்க :)

SurveySan said...

'Nach contest' officially completed.
prize money dispatched.

thanks to you for donating your $20 to udavum karangal as well :)