டுபுக்கு என்ற பெயரில் பதிவிடும் திரு. ரெங்கராமன் இரு துருவங்களுக்கும் பயனம் செய்த முதல் இந்தியரைப் பற்றிய இடுகை ஒன்று இங்கே பதிவிட்டிருக்கிறார். தொடர்ந்த சில விவாதங்கள் இங்கேயும் அளிக்கப்பட்டிருக்கின்றன. நானும் அந்த இடுகைகளில் சில கருத்துகள் தெரிவித்திருந்தேன்.
’சாரா’ (எ) சரஸ்வதி காமேஸ்வரன் ஏகப்பட்ட பிரயத்தனங்களுக்குப் பிறகு இரண்டே இரண்டு பெண்மனிகள் கொண்ட குழுவில் எந்த வெளி ஆதரவாளரும் இல்லாமல் தன் சுயமுயற்சியில் இரண்டு துருவங்களுக்கும் 2007ல் போய் வந்திருக்கிறார். இவர் இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்றாலும் அதனை ஊடகங்கள் சரியாக அங்கீகரிக்காமல் விட்டுவிட்டன என்று ரெங்கராமன் வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். சரஸ்வதியின் நண்பர் பொயட்ரீயும் இதனை ஊடகங்களுக்கு முறையாக எடுத்து செல்வதில் உள்ள கசப்பான அனுபவங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.
சரஸ்வதி காமேஸ்வரன் வட துருவத்திற்கும், தென் துருவத்திற்கும் சென்ற செய்திகளின் தொகுப்பு இணையத்தில் கீழிருக்கும் சுட்டிகளில் பதியப்பட்டிருக்கின்றன. ரெங்கராமனின் பதிவுகளில் மேலும் பல தகவல்கள் இருக்கிறது.
Expedition Tracker
Icetrek Expeditions
சாதனையாளர்களை ஊடகங்கள் சரியானபடி அங்கீகரிக்காதது வருத்தம் அளித்தாலும், ஊடகங்களிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. NDTV-லோ நாளிதழ்களிலோ வெளிவரும் செய்திகளை அங்கீகாரம் என்று எண்ணுவதை விட முறையான வகையில் சாதனைகளை பதிவு செய்து இணையத்தின் மூலம் அதிக பேரைச் சென்றடைவதால் அதிகமாக பிரபலமடைய முடியும். இன்றைய இணைய உலகில் அதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. ஒரு நாள் டீவியில் வெளியிடப்படும் செய்திகளை காட்டிலும் இணையத்தில் முறையாக பதிவிடப்படும் செய்திகள் அதிகமானவர்களை அதிக நாட்களுக்கு சென்றடையும் என்பது எனது கருத்து.
அது என்ன ‘முறையாக’ பதியப்படும் விஷயங்கள்? இணையத்தின் பலமே அது பல்கிப் பெருகி பரவும் தன்மையைக் கொண்டது - Geometrical Progression போல. முறையாக பதியப்பட்டால் அதன் பலன்களும் பல மடங்குகள் அதிகமே. இன்றைய காலகட்டத்தில் Social Networking எனப்படும் சமூக தொடர்பு வலை உங்களையும் உங்கள் சாதனைகளையும் பிரபலமாக்க ஏராளமான வழிவகைகள் செய்து தருகின்றது.
Wikipedia - இது ஒரு இணைய ஆவணக் களஞ்சியம். இங்கு யாரும் தங்களைப் பற்றியோ அல்லது தங்களுக்கு தெரிந்த சாதனையாளர்கள் / சாதனைகள் / நிகழ்வுகள் / செய்திகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் இலவசமாக பதிவு செய்யலாம். பதிவு செய்யப்படும்போது எல்லாவித தகவல்களும் கொடுத்து விடுவது நல்லது. நாளை யாராவது ஒருவர் ‘தமிழர், வட துருவம்’ என்று தமிழிலோ, ஆங்கிலத்திலோ கூகுளில் தேடினால் இது சரியாக விக்கிபீடியாவின் சம்பந்தபட்ட பக்கத்தை கொண்டு வரும் வகையில் எல்லா தகவல்களும் பதியப்பட வேண்டும். உதாரணத்திற்கு மேலே தரப்பட்டுள்ள trekking பற்றிய பதிவுகளில் சரஸ்வதி காமேஸ்வரன் ‘சாரா’ என்றே குறிப்பிடப்படுகிறார். அதனால் விக்கி பக்கத்தில அவரது பொதுப் பெயரான ‘சாரா’ என்பதையும் சரியாக குறிப்பிட வேண்டியது அவசியம்.
உதாரணத்திற்கு முதலில் வட துருவத்தை சென்றடைந்தவர்களைப் பற்றிய பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. இது போல சாராவிற்கு பல பக்கங்கள் தொகுக்கப்பட்டு ஆவணப் படுத்தலாம். தமிழிலும் ஆவணப்படுத்துவது முக்கியம்.
சொந்த தளம்: என்னதான் விக்கிபீடியாவில் தொகுக்கப்பட்டு ஆவணபடுத்தப்பட்டாலும், பயனக் கட்டுரைகள், புகைப்படங்கள், வீடியோக்கள், நண்பர்களின் தளங்களில் இணைக்கப்பட்ட விவரங்கள் இவை எல்லாவற்றையும் தொகுத்து வைக்க சிறந்த இடம் சொந்த தளம்தான். மிகவும் எளிமையான முறையில், சிக்கனமாக, தனது பயனத்தை சுவாரசியமான கட்டுரைகளாக தொகுத்து வைக்கலாம்.
Facebook: சொந்த தளம் இருந்தாலும் அதை பலருக்கும் அறிமுகப்படுத்த பலரையும் தொடர்பு கொள்ள வேண்டும். பைசா செலவில்லாத, ஆனால் மிகப்பெரிய நெட்வொர்க்கிங் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய தளம் இது. உங்கள் நண்பர்களும், நண்பர்களின் தொடர்புகளும், இணையத்தை புழங்கக் கூடிய யாரும் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவிகரமான இடம்.
Orkut: Facebook உங்களுக்கு ஒரு முகவரி என்றால் Orkut இன்னொரு வகையில் அதே சாத்தியங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். இதில் பெரிதும் குழுமங்களாக மக்கள் பங்கு பெறுகிறார்கள். நிறைய விவாதங்களும் நடைபெறும். உங்களைப் பற்றிய விபரங்களை இணையத்தில் மக்கள் தேடக்கூடிய முக்கிய இடமாக இன்றும் இருக்கிறது ஆர்க்குட்.
பதிவு (Blog) சொந்த தளம் எல்லாம் அதிகப்படி என்று நினைக்கிறவர்கள் Blogs-ல் இலவச சேவை வழங்கிகள் மூலமாக தங்களைப் பற்றிய விவரங்களைப் பதியலாம். திரட்டிகள் மூலமாக, கூகுள் ரீடர் மூலமாக, இன்னமும் பல சாதனங்கள் மூலமாக இந்தப் பதிவுகளின் விஸ்தீரணம் மிகவும் அதிகம்.
அதிக பக்கங்களில், அதிக நெட்வொர்க்கில் பதிவதின் மூலம் கூகுள் போன்ற தேடு பொறியில் முதல் பக்கத்திலேயே உங்களுடைய தகவல்கள் தெரியப்படுவதற்கு சாத்தியங்கள் அதிகம்.
மேலும் LinkedIn, மின்னஞ்சல் குழுமங்கள், ட்விட்டர் போன்ற பல தகவல் தொடர்புகள் மூலம் உங்களைப் பற்றிய செய்திகள், சாதனைகள் எல்லாவற்றையும் பதியலாம். தற்போதைய இந்திய தொலைகாட்சிகள் மற்றும் செய்திதாள்கள் இந்த இணையப் புரட்சியில் பின்தங்கியே இருக்கின்றன. இணையத்தில் நீங்கள் அதிகப்படியான மக்களை சென்றடைந்தால் ஊடகங்கள் உங்கள் பின்னே தானாக வரும்.
இணையம் அல்லாத சில வழிகளிலும் ஊடகங்களைச் சென்றடையலாம். ஆனால் அதற்கு தேவையான அளவில் செய்தியை வடிவமைப்பது முக்கியம். இலவச மென்பொருட்களைக் கொண்டே சிறப்பான முறையில் செய்தியை வடிவமைத்து ஒரு Flier போன்று ஊடகங்களுக்கு மின்னஞ்சல் செய்வதனால் உடனடி கவனம் பெறும். அந்தந்த துறைக்கென்று நிறைய குழுமங்கள் இருக்கின்றன. அந்த குழுமங்களுக்கு சரியான முறையில் செய்தியை சேர்ப்பித்து அந்த குழுமங்களின் வாயிலாக பத்திரிகை ஊடகங்களுக்கு செய்தியை கொண்டு செல்லலாம். Event Management வல்லுனர்கள் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ஊடகப் பார்வைக்கு கொண்டு செல்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். என்ன கொஞ்சம் செலவாகலாம்.
ஒன்றுமே செய்யாமலேயே இணையத்தினால் புகழ் பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு சாதனையாளர் என்றால் இணையத்தின் மூலமாக முறையாக சந்தைபடுத்தி உங்களுக்கு உரிய அங்கீகாரம் கட்டாயம் பெறலாம்.
கதை சொல்லும் நேரம்...
இதுவரை வெளியான சிறுகதைகள்
சாதனையும், சமூக தொடர்புவலைகளும்
April 30, 2009எழுதியது Sridhar V at 4/30/2009 09:21:00 PM 8 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: Social Networking, இணையம், சாதனை
உலக மகா எழுத்தாளர்களால் எரிச்சல்!
April 28, 2009இணையத்தின் பல்வேறு சாதனைகளில் ஒன்று எழுத்தாளர்களை இணையத்திலும் எழுத வைத்து அவர்களையும் சாதாரணர்களாக ஆக்கியது. முன்பு இலக்கிய சச்சரவுகளை தேடித்தேடி படிக்க பத்திரிகைகளை நாடியிருக்கிறேன். ஆனால் சில ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களினால்’ ஏற்படும் எரிச்சலுக்கு படிப்பதையே நிறுத்திவிடலாமா என்று தோன்றுகிறது.
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் படித்திருக்கிறீர்களா? கணையாழியின் கடைசிப் பக்கங்கள்? ’21-ம் நூற்றாண்டின் விளிம்பில்’ மற்றும் ’கற்றதும் பெற்றதும்’ கட்டுரைத் தொடர்கள்? ஸ்ரீரங்கத்து அடையவளஞ்சான் சந்திலிருந்து, எமஐடி-யில் படித்ததும், ஏர்போர்ட்டில் கண்காணிப்பாளராக வேலை செய்ததும், பெங்களூர் ஜாலஹள்ளிக்கு குடி பெயர்ந்ததும், இந்திய தேர்தலை நவீனபடுத்திய ‘மின்னனு ஓட்டு இயந்திரம்’ அறிமுகப் படுத்தியதும், பாலகுமாரனுக்கு சிறுகதை எழுதுவது எப்படி என்று சொன்னதும், அவருடைய திரையுலக நண்பர்கள் பற்றிய செய்திகளும் இன்னபிற செய்திகளும் சாதாரண வாசகனாக மட்டும் இருக்கக் கூடிய, அவருடன் வேறெந்த பரிச்சயமும் இல்லாத என்னைப் போன்றவர்களுக்குக் கூட தெரிந்திருக்கும் வகையில் அவரே வெளிப்படையாக எழுதியிருக்கிறார். அவர் கடைசி காலத்தில் காசுக்கு கஷ்டப்பட்டார் என்றெல்லாம் எழுதுவது வாசகர்களை முட்டாளாக்கும் மோசடி வேலை.
உலகமகா எழுத்தாளர்களால் எள்ளல் செய்யப்படும் ‘மிடில் கிளாஸ் மோரன்’களுக்காகவே சுஜாதா ’மத்தியமர்’ என்னும் தொடர் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக எழுதியிருக்கிறார். சுஜாதாவை படிக்காமலேயே அவரை பெரிய எழுத்தாளராக மதிப்பதாக பம்மாத்து காட்டுவது எந்த பதிப்பாளரை திருப்திபடுத்த? எரிச்சல்!
ஐயா உலக மகா எழுத்தாளர்களே! நீங்கள் எழுத்தாளர்கள் என்னும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள ஏதாவது படிக்கும்படி எழுதுங்கள். இந்த கடித போக்குவரத்துகள், சுய சொறிதல்கள், தம்பட்டங்கள் எல்லாம் புளித்துப் போன பழைய கஞ்சி. கடிகாரம் போல் நிற்காமல் ஓடும் ஹிட் கௌண்டர்களை எல்லாம் நம்பாமல் உங்களின் தரத்தை நீங்களே உணர்ந்து கொள்ளூம் காலம் எப்பொழுது வரும்?
வரிக்கு வரி தொடுப்பு கொடுத்து விமர்சித்து எழுத ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் வியவஸ்தைகெட்ட தளங்களுக்கு வீண் விளம்பரம் வேண்டாம் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
எழுதியது Sridhar V at 4/28/2009 06:12:00 AM 8 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: எரிச்சல்