காதோரமாய்

June 18, 2009

சாம்பல் நிறத்தில் புஷ்டியாக இருந்த முயலை இரு கைகளிலும் பொத்திக் கொண்டு புருபுருவென மூக்கால் தேய்த்தபடி ஆங்கிலத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தான் சந்துரு.

”ஷங்கி... உனக்குத் தெரியுமா... நீ செத்துப் போய்விட்டாய். நாலு மாசம் முன்னாடியே செத்துப் போய்விட்டாய். அது தெரியாம சுத்திட்டு இருக்கியா?”

உம்பர்டோ, மைக்கேல் ஜாக்சன், சர்ரியலிசம் என்று கலந்தடித்துக் கதைத்துக் கொண்டிருந்த வைத்தி திடீரென கையில் இருந்த பாட்டிலில் வோட்கா தீர்ந்துவிட்டதை உணர்ந்தான். ”இன்னும் கொஞ்சம் சரக்கு தேத்திக்கிடலாம் இவனே. இதை இப்படியே விட்டுடக் கூடாது. சூடோ மாரல்ஸ் பத்தி நெறயப் பேசனும்”

”ரூமில ஒரு ஷிவாஸ் ரீகல் இருக்கு. பாத்து எடுத்திட்டு வா. நான் இங்கேயே இருக்கேன்” பின்னிரவில் புல்வெளியில் படுத்துக் கொண்டு ஏகாந்தமாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவத்தை கலைக்க விரும்பாமல் சொன்னேன். நல்ல குளிர் எடுக்க ஆரம்பித்திருந்தது.

”பாத்து தம்பி! மொசலைப் போட்டு கசக்கிறாதீங்க. காதைப் பிடிச்சு தூக்குங்க”

ஒரு பொட்டலம் போல் கம்பிளியைப் போர்த்திக் கொண்டு சுள்ளிகள் வைத்து நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தார் அந்தக் கிழவர். ஓட்டல் வாட்ச்மேனா என்று தெரியவில்லை.

“யாரும் வளக்கிறாங்களா என்ன?”

“ஆமாப்பா. தோ.. அந்த வெள்ளக்கார சாமி ஆசிரமம் இருக்குல்ல. அங்கதான் அந்தப் பொண்ணு நெறய வளக்குது. வாத்து கூட நெறய இருக்கும். காசுக்கு எல்லாம் விக்க மாட்டாங்க” அவர் கை காட்டிய திசையில் பச்சை நிறப் புல்வெளி சரிவுதான் தெரிந்தது. மறுபக்கம் எதுவும் இருக்கலாம்.

முயலை ஓட விட்டு ஓட விட்டுப் பிடித்துக் கொண்டிருந்த சந்துரு திகைத்து போல் நின்றுவிட்டான்.

”யார் ஜென்னி? ஜென்னியென்றா சொன்னார்?” சந்துருவிற்கு தமிழ் தெரியாது.

“ஜென்னியா? சரியாக் கேக்கல. ஏதோ பொண்ணு வளக்கிற முயல்லாம்பா. கீழே விட்று” கையிலிருந்து பிடுங்கி கீழே விட்டேன். அந்த முயல் சரிவை நோக்கிக் குதித்துக் கொண்டே ஓடிவிட்டது.

அந்தக் கம்பளிக் கிழவர் சந்துரு தலையை பிடித்து உலுக்கிக் கொண்டே “ஜென்னியா? ஜென்னி...” என்று மீண்டும் மீண்டும் கேட்பதைப் பார்த்துவிட்டு

”தம்பி ரெம்ப சாப்டுருச்சுப் போல. இந்த முசல்லாம் ஆசிரமத்துது தம்பி. அந்தப் பொண்ணு பாசமா வளக்குது”

இப்பொழுதுதான் இரண்டு மாதமாகியிருக்கிறது சந்துரு பெங்களூரிலிருந்து சென்னை வந்து. வாக்கியத்துக்கு ஐந்தாறு ஆங்கிலக் கெட்ட வார்த்தையோடு பேசும் ஹை-ஃபை ஆங்கிலம்தான் அவனுடைய மொழி.

”ஜென்னி உயிரோடு இருக்கிறாளா?”

இரவு வானத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்களில் உர்சா மேஜரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த போது சந்துருவின் திடீர் மௌனம் உறுத்தவே ”என்னடா ஆச்சு? யார் ஜென்னி?” என்று கேட்டேன்.

”நீ கேட்கவில்லையா?” கிழவரைக் காட்டிச் சொன்னான். “அவள் உயிரோடுதான் இருக்கிறாள் ஜெய். அவள்தான் நான். நாந்தான் அவள். நான்கு மாதங்களுக்கு முன்னர் எல்லாரையும் சாகடித்துவிட்டார்கள். ஜென்னி, ஷங்கி எல்லாரையும்... எனக்கு இன்னமும் அவள் வாசனை ஞாபகமிருக்கிறது. ஆம்! அவள் இறக்கவில்லை. இதோ என் ஷங்கி இங்கு உயிரோடு இருக்கிறது. ஜென்னியும் உயிரோடுதான் இருக்கிறாள்”

அவனது பேச்சிலும் செயலிலுமே ஏதோ பெரிய வித்தியாசம் தெரிந்தது. சாதாரணமாக அவனது செயல்களில் எப்பொழுதும் ஒரு அதீத சுயக் கட்டுப்பாடு இருக்கும். இப்பொழுது வோட்கா அதிமாகிவிட்டதனாலோ என்னவோ அவன் சுதந்திரமாக உற்சாகமாக நின்று கொண்டு பேசினான். அவன் கண்களில் பிரகாசமான ஒளி தெரிந்தது போலிருந்தது.

சரிதான். பையனுக்கு சரக்கு இன்றைக்கு அதிகமாகி விட்டது.

”ஜெய்... நீ ஜென்னியைப் பார்த்திருக்கிறாயா? இல்லையா? அவள் எவ்வளவு அழகு தெரியுமா? நீ ஒருமுறை அவளைப் பார்த்தால் மயங்கிவிடுவாய் ஜெய்”

”டேய்.. படுத்தாதே. எங்கேயோ நான்கு மாதங்களுக்கு முன்னால் பெங்களூரில் செத்துப் போன உனது ஜென்னியும் முயலும் இந்த அர்த்தராத்திரியில் கொடைக்கானல் தமிழ்நாடு ஓட்டல் புல்வெளியில் உயிரோடு வரப்போகிறார்களா என்ன. பேசாமல் இரு. கொஞ்சுகிறேன் என்று முயலை கொடுமைப் படுத்தாதே. செத்துவிடப் போகிறது”

அலுவலக சகாக்கள் எல்லாரும் ஆளுக்கு கொஞ்சம் காசுபோட்டு வருடா வருடம் சுற்றுலா செல்வது வழக்கம். இம்முறை கொடைக்கானலில் மூன்று நாட்கள். நல்ல குளிருக்கு சூடா சரக்கேற்றிக் கொண்டு வழக்கம் போல் வைத்தியோடு விவாதித்துக் கொண்டிருந்தால் ஜென்னி, கென்னி என்று... சட்... இந்த வைத்தி வேற சரக்கு தேத்திக் கொண்டு வருகிறேன் என்று போனவன் ஆளையே காணோம்.

எங்கள் நிறுவனத்தின் அட்மின் சத்யாவின் உறவினனாகத்தான் சந்திரசேகர் என்னும் சந்துரு அறிமுகமானான். தாய்மொழி தெலுங்கு ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பெங்களூரு. ஏனோ பெங்களூருவில் பொருந்தாமல் வேலை பார்க்க சென்னைக்கு வந்துவிட்டான். அவன் வீட்டில் ஏதோ பிரச்சினை என்றளவில் புரிகிறது. சத்யாவிற்கு அவன் மேல் ஏதோ வெறுப்பு இருந்தது நன்றாகவே தெரிந்தது. ”வசதிப்பட்டா உன் டீம்ல வச்சுக்க ஜெய்காந்த். பையன் மேல எனக்கு பெருசா நம்பிக்கை கிடையாது. அத்தைக்காகத்தான் பாக்குறேன். அப்புறம் என்னத் திட்டாத”.

சந்துரு ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவனாக, நவீன நகரவாசி நறுவிசாக, நாசூக்காய் இருப்பான். புருவம் எல்லாம் செதுக்கிக் கொண்டு, தோற்றத்திலும், உடல் மொழியிலும் அதீத கவனம் கொண்டிருப்பான். எப்பொழுதும் அவனிடம் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்தது. முக்கியமாக அவன் குரலும் பேசும் முறையும். எங்கள் நிறுவனம் சிறிய, மத்திய தர, அதிகம் லாபம் ஈட்டாத, மென்பொருள் சேவை நிறுவனம். சொன்ன வேலையை முடித்துக் கொடுப்பதில் சந்துரு சூரன். கூட்டத்தில் அதிகம் கலக்க மாட்டான். ஆனால் எப்படியோ இரண்டு மாதங்களில் எங்கள் கூட்டத்தோடு ஒட்டிவிட்டான். வெள்ளிகிழமை இரவு மொட்டைமாடி கொண்டாட்டங்களில் ஐக்கியமாகி, வைத்தியும் நானும் விவாதிக்கும் விஷயங்கள் புரியாவிட்டாலும் உன்னிப்பாக கவனித்து வருகிறான். எப்பொழுதும் எதையோ தொலைத்து போல ஒரு சோகத்தைக் காட்டிக் கொண்டிருப்பான்.

வைத்தி காக்டெயில் கலையில் கில்லாடி. சைனா டீயில் ரம்மை கலந்து சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? சிகரெட் பற்றவைக்க நெருப்புப் பெட்டி கேட்கலாம் என்று தேடினால் சந்துரு அவன்பாட்டுக்கு நடந்துப் போய்க் கொண்டிருந்தான். புல்வெளியைத் தாண்டி ஓட்டல் கேட்டை நோக்கி... வெளியிலா போகப் போகிறான்? அந்தக் கிழவன் ஏதோ ஆசிரமம் என்று கையைக்காட்டி சொன்ன திசை நோக்கி நடந்து போய்க்கொண்டிருக்கிறான் என்று நினைத்தேன். இதுதான் சின்னப் பசங்களோடு பானம் சாப்பிடும்போது பிரச்சினை. தேவையில்லாமல் உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறார்கள். அவன் நடையே வேறுவிதமாக இருந்தது. ஒருவழியாக அவனை மடக்கிப் பிடித்து ரூமிற்க்கு கூட்டி வந்தேன். பற்ற வைக்காத சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே வைத்தி கவுந்தடித்துப் படுத்து மட்டையாகியிருக்க, முரளி எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.

”என்ன மச்சி! தூங்கலையா இன்னமும்”

”டேய்... மணியப் பாருடா ஆறாகப் போகுது. விடிய விடிய குடிச்சிபிட்டு வந்து என்னைத் தூங்கலையான்னு கேக்கற... 7:30 மணிக்கு பிரேக்ஃபாஸ்ட் ரெடியாயிடுமாம். கெய்ஸர் போட்டிருக்கேன். ஒத்தொருத்தரா குளிச்சு கிளம்ப வேணாமா?”

விடுமுறை நாளில் கூட குளிக்க வேண்டும் என்று சொன்னதற்காகவே தனியாக இரண்டு பெக் அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஒருக்களித்து படுத்துக் கொண்டிருந்த சந்துரு முணுமுணுப்பாக ”ஜென்னி... ஜென்னி” என்று முனகிக் கொண்டு கைகளை தொடைக்கிடையில் செருகிக் கொண்டு சுருண்டு படுத்திருந்தான்.

”சின்னப் பையன ஏண்டா கெடுக்கறீங்க... ஓவராயிடுச்சுப் போல. பாரு புலம்பிட்டே இருக்கான்” என்றான் முரளி. யாரந்த ஜென்னி? இறந்துவிட்டாள் என்கிறான். பின்னர் இல்லை என்கிறான். ஏதாவது பழைய காதலின் மிச்ச சொச்சமாக இருக்கலாம்.

கொடைரோடு வரை ட்ரெய்னில வந்துவிட்டு அங்கிருந்து வோல்வோ பஸ் வைத்துக் கொண்டு கொடைக்கானல் வந்திருந்தோம். ஒம்போது மணிக்கு கும்பலாக எல்லாரும் பஸ் முன்னே சேர்ந்துவிட பேரிஜம் போய் சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டம் போட்டார்கள். எண்ணிப் பார்த்தால் சந்துரு மிஸ்ஸிங். சத்யா என்னிடம் ”நைட் செம டைட்டா ஜெய்? அவன ரொம்ப குடிக்க விடாத. அவன் ஒரு மாதிரி. இப்பத்தான் ரெகவர் ஆயிட்டு வர்றான். சரி அவன்பாட்டுக்கு தூங்கிட்டு இருக்கட்டும்... நாம ஈவ்னிங் வந்து பாத்துக்கலாம்” என்றான்.

நான் காலைச் சாப்பாட்டுக்கு சந்துருவை எழுப்ப முயற்சி செய்த போது மப்பு இன்னமும் தெளியவில்லை என்று தெரிந்திருந்தது. ஏனோ அவனைத் தனியா விட்டு செல்ல தயக்கமாக இருந்தது. ஜென்னி கென்னி என்று உளறிக் கொண்டிருக்கிறானே. யாரந்த ஜென்னி?

”இல்ல சத்யா... நீங்க எல்லாம் கிளம்புங்க. நான் அவன் தெளிஞ்சு எழுந்ததும் பில்லர் ராக்ஸ்-ல வந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன். தனியா விட்டுப் போறது சரியில்லப்பா”

நேற்றிரவு மாதிரி ஏதாவது ஆசிரமத்தை தேடி ஓடினாலும் ஓடிவிடுவான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்றும் இந்த பேரிஜம் ஏரியில் சுற்றிப் பார்க்க என்று ஒன்றும் கிடையாது. பேசாமல் ரூமில் கொஞ்ச நேரம் தூங்கலாம். சேத்தன் பகத்தை கொஞ்சம் புரட்டலாம். பிறகு சந்துருவை மெதுவாக கிளப்பிக் கொண்டு பில்லர் ராக்ஸ் போய் சேர்ந்து விடலாம் என்று ஒரு சோம்பல் திட்டம் போட்டேன். வைத்தி பஸ்சில் ஏற்கெனவே செட்டில் ஆகி தூங்க ஆரம்பித்திருந்தான்.

சத்யா தயக்கத்துடன் என்னை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே பஸ்சிலேறிப் போனான். என்ன குடும்பத்தகராறோ... என்னவோ. பொதுவாகவே சங்கோஜியாக தெரியும் சந்துரு, சத்யா தலை தெரிந்தால் சுத்தமாக அமைதியாகிவிடுவான்.

ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு ஹிந்திப் பட நாயகன் போல மஃப்ளரை ஸ்டைலாக கழுத்தில் சுற்றிக் கொண்டு சந்துருவை மீண்டும் எழுப்பலாம் என்று அவன் அருகில் போனேன். தூங்காமல் முகத்தில் ஏதோ தவிப்போடு படுத்துக் கொண்டிருந்தான்.

”ஹேங் ஓவரா? சரி சரி... அப்படியே கிளம்பி ஒரு வாக் போனா தலை சுத்தமாகிவிடும். வா வா” என்று தோளைப் பற்றி உலுக்கினேன்.

என்னைப் பார்த்தவுடன் மின்சாரம் வந்தது போல் பளீரென்று சிரித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான். அறையில் புதிதாக ஏதோ நறுமணம்.

”என்னடா வாமிட் எதுவும் பண்ணி வைத்தாயா? பெஃப்யூம் எல்லாம் அதிகமாக இருக்கிறது” என்றேன்

மெலிதாக புன்முறுவல் செய்தான். இந்த இரண்டு மாதங்களில் இவ்வளவு பிரகாசமாக அவன் இருந்தது கிடையாது. செழுமையான கன்னமும், பளபள உதடுகளுமாய் முந்தைய இரவு நனைந்த கோழியாய் சுருண்டிருதவனா இவன்? சட்டென என் கைகளைப் பற்றி கட்டியணைத்துக் கொண்டான். ”ஜெய்... உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்”

”ஃப்ரெஷாகிக் கொண்டு வா. பில்லர்ஸ் ராக் போகலாம். மற்றவர்கள் எல்லோரும் அங்கே வந்திருப்பார்கள்” என்றேன்.

“ஜெய், நீ ஜென்னியைப் பார்க்க வேண்டாமா? என்னை நம்பு ஜெய். அவள் ஒரு அழகான தேவதை. ஆனால் அவளை சாகடித்து விட்டார்கள். எனக்கு இப்பொழுது நன்றாகத் தெரிகிறது அவள் உயிரோடுதான் இருக்கிறாள். நீ ஒருமுறை அவளைப் பார்க்க வேண்டும் கண்டிப்பாய்” தவிப்பான குரலில் பேசினான்.

”இங்க பார்... சந்துரு. உன்னோட ஜென்னி யாரென்று தெரியாது. அந்தக் கிழவன் ஏதோ உளறியதில் நீ குழம்பிப் போய்விட்டாய்”

சந்துரு நான் சொன்னதை கவனிக்கவே இல்லை. ”ஜென்னி சாகவில்லை ஜெய். நேற்று ஷங்கியை பாத்தாய்தானே நீ? எனக்கு இப்பொழுது எல்லாம் தெளிவாகிவிட்டது. நான் இருக்கறவரைக்கும் ஜென்னிக்கு சாவே கிடையாது” எனக்கு முத்தம் கொடுக்காத குறையாக கட்டிக் கொண்டான். முத்தமே கொடுத்துவிட்ட மாதிரிதான் இருந்தது.

”ஓக்கே! ஓக்கே! ஜென்னி சாகவில்லை. நீ முதலில் கிளம்பி அறையை விட்டு வெளியில் வா” என்று நெட்டித் தள்ளிக்கொண்டு வெளியில் வந்தேன்.

“நீ நம்புகிறாய் அல்லவா?” சந்துரு மிகவும் உற்சாகமாகிவிட்டிருந்தான். நடனமாடுவது போல் இடுப்பை ஆட்டிக் கொண்டே சுழன்று சுழன்று சென்று கொண்டிருந்தான். யாரந்தப் பெண? பெயரைக் கேட்டதும் இவ்வளவு குதூகலிக்கிறான்? ம்ம்ம்...

வைத்தி இருந்திருந்தால் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும், டெஸ்டிரோன்ஸின் தூண்டுதலையும் பற்றி ஏதாவது புதிய மேட்டர் சொல்லியிருப்பான்.

”டேய்... டேய்... அந்தப் பக்கம் பாதை இல்லை. சரிவுதான் இருக்கிறது” என்று எச்சரிப்பதற்குள் சந்துரு சரிவில் இறங்கி நடக்க ஆரம்பித்திருந்தான்.

பச்சைப் புல்வெளி சரிந்து இறங்கி சட்டென நிமிர்ந்த போது எதிரில் பெரிய ஓட்டுக்கட்டிடம் ஒன்று தெரிந்தது. சந்துருவின் வேகத்திற்கு ஓடிப் போய் அவன் கையைப் பிடித்து ”எங்கேடா போகிறாய்”

”அங்கே பார்.” அவன் குரல் மிகவும் மென்மையாக மாறிவிட்டிருந்தது.

ஜோசஃப் ஸ்டான்லி என்ற ஐரிஷ்காரர் தங்கியிருந்த வீடு இப்பொழுது ஆசிரமம் போல் ஆகிவிட்டிருந்ததாக நுழைவு வாயிலில் போர்ட் சொன்னது. சந்துரு தலையை சாய்த்து என்னைப் பார்த்து சிரித்துவிட்டு அங்கே ஓடிக் கொண்டிருந்த முயல்களைக் காட்டினான். ஆகா! மறந்துவிட்டான் என்று நினைத்தால் மீண்டும் ஜென்னி மேட்டருக்கே வந்துவிட்டான் போலிருக்கிறது. சத்யா சொன்னது சரிதான். இவனைக் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும். ஒழுங்காக ஊருக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமே.

”இங்க உன் ஜென்னி இருக்கிறாளா என்று தெரிய வேண்டும். அவ்வளவுதானே? இல்லையென்றால் சமர்த்தாக திரும்பிவிட வேண்டும். ரொம்பப் படுத்தக்கூடாது” என்றேன்

உள்ளே சுற்றுலா பயனிகளும் சிலரும், தியானத்தில் திளைத்துக் கொண்டு சிலரும் இருக்க சந்துருவால் ஈர்க்கப்பட்டவன் போல் அவன் பின்னேயே நான் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது செல்ஃபோன் அடிக்க எடுத்துப் பார்த்தால் சத்யா.

“எங்கேடா இருக்கீங்க? நாங்க பில்லர் ராக்ஸ் வந்தாச்சு”

“ஆங் சத்யா... நாங்களும் கிளம்பிட்டோம். உன் கஸிந்தான் ஜென்னின்னு... இங்க ஜோ ஆஸ்ரமம் பக்கமா வந்திட்டான். இதோ கூட்டிட்டு வந்திடரேன்”

“என்னது ஜென்னியா? ஓ மை காட்! இப்பத்தான் கொஞ்ச நாளா அதையெல்லாம் மறந்து நார்மலாயிட்டிருக்கான்னு நினச்சேன். ஜெய்.. இந்த மேட்டர் நமக்குள்ள இருக்கட்டும். நீ.. நீ... புரிஞ்சிப்பன்னு நினக்கிறேன். இங்க எப்படியாவது கூட்டிட்டு வந்திடு. எனக்கு சத்தியம்லாம் பண்ணிக் கொடுத்திருகான் அவன்’ அவன் குரலில் ஒரு மிரட்சி இருந்தது. இந்த விஷயத்தின் ஆழம் புரியாமல் மிகவும் குழப்பமாக இருந்தது.

“மச்சி... நான் அவனக் கட்டுபடுத்தத்தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.“

சந்துரு எங்கே போய்விட்டான்? ஒரு பக்கவாட்டு கதவு வழியாக தோட்டப்பக்கமாக பாதை தெரிந்தது.

“நான் நேர்ல வந்து பேசறேன் சத்யா. நீங்க பில்லர் ராக்ஸ்லேயே இருங்க”

தோட்டத்திற்கு சென்ற போது அங்கே சிற்சில வலைக் கூண்டுகளும் அதனுள்ளே புஷ்டியான புஸுபுஸு முயல்குட்டிகள் சுற்றிக் கொண்டிருக்க அழகான ஆரஞ்சு கழுத்து ஃப்ளெமிங்கோக்கள் நீரில் திளைத்துக் கொண்டிருந்தன. அந்த சிமெண்ட் பெஞ்சில்தான் அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள்.

அந்தப் பெண்ணைப் பார்த்தால் சுமாராக இருந்தாள். சிரித்தவாறே கையில் ஏதோ தாணியங்களை வைத்து முயல்களுக்குடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். இவள்தான் ஜென்னியா? அவளருகே சென்று

“ஹலோ... ஜென்னி?” என்றேன்

என் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் கண்களைச் சுருக்கிக் கொண்டு

“ஹலோ! என்ன வேணும்? சாமி மலைக்கு மேலே போயிருக்கு. நாளைக்கு வரும். சிலப்போ மேலேயே தங்கிடுவாரு. சிடி, கேஸட் எதுவும் வேணுங்களா?” என்றாள்

“இல்ல... நீங்க ஜென்னியா?” விஷயத்தை தெளிவாக்கி கொண்டுவிட்டால் இவனை சீக்கிரம் கொண்டு போய் சத்யாவிடம் விட்டுவிடலாம். நல்லவேளை இதுவரை அமைதியாகத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.

சற்று குழப்பமாக பார்த்தவள், சட்டெனத் தெளிவடைந்தவள் போல

“நான்... நான்... செல்வி. இவங்கதான் ஜென்னி. இப்பத்தான் வந்தாங்க” என்று பக்கவாட்டில் அவள் காட்டிய இடத்தில் பார்க்கும்போதுதான் சட்டென உறைத்தது.

தலைமுடியை சற்றே பின்னுக்கு தள்ளிக்கொண்டு என்னைப் பார்த்து சிரித்ததுக்கொண்டு, கூட்டினில் இருந்த விடுபட்ட பெண்மையாய், பேரானந்தமாய் அங்கே உட்கார்ந்திருந்தது அவன் இல்லை.

சாம்பல் நிறத்தில் புஷ்டியாக இருந்த முயலை இரு கைகளிலும் பொத்திக் கொண்டு புருபுருவென மூக்கால் தேய்த்தபடி ஆங்கிலத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தாள் ஜென்னி.

இந்த சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. போட்டியில் பங்குபெறும் கதைகளின் பட்டியலை இங்குக் காணலாம்.


தொடர்ந்து படிக்க...

32 கேள்விகளும் முந்திரிக்கொட்டை பதில்களும்

June 12, 2009

பதிவுலகில் இடம்பெறும் சங்கிலித்தொடர் இடுகைகள் சுவாரசியமானவை. சமீபத்தில் சுற்றி வரும் 32 கேள்விகள் ஒரு பேட்டிக்குரிய அம்சங்களுடன் இருப்பதால் நிறைய பிரபலங்கள் பங்குபெற்று வெளுத்து வாங்குகிறார்கள். அப்படியான இரு பிரபலங்கள் நம்மையும் கோர்த்து விட்டிருப்பதால் கொலைவெறியுடன் குதித்து விட்டேன். பதில்களை விட இதில் நான் இழுத்து விடப்போகும் பதிவர்கள் பட்டியல் சுவாரசியமானது. மேலும் விவரங்களுக்கு மேலும் படிக்கவும்.

எசகுபிசகான விளையாட்டை எளிதான மொழியிலும், வாக்கியங்களை கலைத்துப் போட்டாலே கவிதைதான் என்றில்லாமல் கவிதையையே கலைத்துப் போட்டு அ-கவிதை என்றும் வாசகர்களின் மனதில் ஆக்கர் போடும் அன்பர் ஜ்யோவ்ராம் சுந்தரும்

புத்தக சுனாமி, கிழக்கின் விடிவெள்ளி, தொய்வில்லாத தொடர்கதைகளின் துருவ நட்சத்திரமும், கன்னடிய நாட்டில் மையம் கொண்டு தமிழ் வெகுஜன ஊடகத்தை புயலென ஊடுருவிய ’இளைய பாரா’ என்றழைக்கப்படும் என்.சொக்கனும்

அழைத்ததால் விளைந்த விபரீதத்தைதான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பெற்றோர் வைத்த பெயர்தான். பிடிக்கிறதோ பிடிக்கலையோ, பெயரை மாற்றிக் கொள்வதாக உத்தேசம் இல்லை.

2) கடைசியா அழுதது எப்போது?

ஆண்கள் அழுதாலும் வெளியில் சொல்லிக் கொள்ளக் கூடாதாம். திரைப்படங்களில் உணர்ச்சிகரமான காட்சிகளை கண்டால் கண்கள் கரைகட்டிவிடும் சாதாரணந்தான் நான்.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

கையால் எழுதுவதை கிட்டத்தட்ட மறந்தே விட்டேன். எழுதினாலும் அவ்வளவு அழகாக இருக்காது. விண்ணப்பங்களிலும், செக் புக்கிலும் போடுவதற்கென்றே தனியாக கையெழுத்து பழகினேன். இதுவரை அந்தக் கையெழுத்தை மாற்றியதே இல்லை. பிடிக்கும்.

4) பிடித்த மதிய உணவு?

புளிப்பு அதிமான குழம்பும், உருளைக் கிழங்கும், அப்பளமும், தயிர்சாதமும் எப்போதும் ஃபேவரைட். கிடைக்காத பட்சத்தில் எல்லா வகை உணவும் சம்மதமே.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக. சந்தித்த முதலில் தானாக பேச முன்வரத் தயங்கினாலும், நல்ல நண்பனாகவே இருந்திருக்கிறேன் எப்பொழுதும்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

அருவிதான் எப்பொழுதும். கடலில் குளித்தால் உப்பு அரிக்கும். பின்னர் நல்ல தண்ணீரில் மீண்டும் குளிக்க வேண்டும்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

உடல்மொழி மற்றும் சிரிப்பு.

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பிடித்தது - சகஜமாக பழகும் சுபாவம். சிரித்த முகம்.
பிடிக்காதது - அப்படி எதுவும் இருக்கிறதா என்ன? (தப்பிச்சிட்டோம்ல!)

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி எதுவும் இல்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

சாம்பல் நிற மேலாடையும், அரைக்கால் சட்டையும்.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

கந்தசாமி பாட்டு. இதெல்லாம் டூப்பு.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

கறுப்பு மை.

14) பிடித்த மணம்?

முகர்வதற்காக உள்ள எல்லா மணமும்.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

இடுகையின் இறுதியில் பெரிய பட்டியலே இருக்கிறது.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

படிக்கும் அனுபவத்திற்காகவே படிப்பவன் நான். சுந்தரின் பிரபல எழுத்துகளை பரவலாக்கும் பதிவுகள் பிடிக்கும். சொக்கனின் அனுபவச் சிதறல்களை படிக்க பிடிக்கும்.

17) பிடித்த விளையாட்டு?

எல்லா விளையாட்டுகளும். கல்லூரிக்காலத்தில் கூடைப்பந்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன்.

18) கண்ணாடி அணிபவரா?

இல்லை.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

ஃபார்முலா, க்ளிஷேக்கள் இல்லாத எந்த திரைப்படமும் பிடிக்கும்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

Vantage Point

21) பிடித்த பருவ காலம் எது?

குளிர்காலம். அதுவும் பனிவிழும் மலர்வனமாக இருந்தால்...

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

புதுமைபித்தனின் சிறுகதைகள் இணையத்தில் கிடைத்தது. மற்றபடி இணையத்தில் ‘கண்ட’தையும் மேய்ந்து கொண்டே...

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

படம் எதுவும் இல்லை. இருந்தாலும் அடிக்கடி மாற்றுவதில்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

சத்தமாக பேசும் சத்தம் மட்டும் பிடிக்காது.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

அதிக தூர பிரயாணம் என்றால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இருமுறை பிரயாணம் செய்திருக்கிறேன்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

தனித்திறமை என்று பட்டியல் போடும் தனித்திறமை கிடையாது. பல வருடங்கள் கழித்தாலும் ஒருமுறை படித்ததிலேயே சிலவற்றை நினைவுகூர முடிவது வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னால் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது? அவரவர்க்கு அவரவர் நியாயம்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பல்

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

நிறைய சுற்றுவது இல்லை. நானொரு வீட்டுப் (இணையப்) பறவை :)

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே.

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

அப்படி ‘முக்கி’ய காரியம் ஒன்றும் பெரிதாக இல்லை.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

வாழ்க்கை - விடை தெரியாத புதிர். கிடைக்காத விடையை தேடிக் கொண்டே இருப்பதுதான் சுவாரசியமான வாழ்க்கை.

நான் அறிந்த, வாசிக்கும் பலரும் ஏற்கெனவே இந்தத் தொடரில் பங்கேற்று விட்டாலும் இந்தத் தொடரை தொடரும் உத்வேகத்தோடு நான் அழைக்கும் பதிவர்கள்:

பிரபு ராஜதுரை - மிகவும் தீர்க்கமாகவும் முழுமையாகவும் எழுதக்கூடிய மிகச் சிலப் பதிவர்களில் ஒருவர். வக்கீல் தொழிலில் இருக்கும் இவரின் அனுபவங்களும், கருத்துகளும், சினிமா பற்றிய பதிவுகளும் மிகவும் சுவாரசியமானவை. இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை. வேலை அழுத்தமாக இருக்கலாம். ஆனாலும் இந்தக் கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலளிப்பார் என்று நினைக்கிறேன்.

இலவச கொத்தனார் - வெண்பா, குறுக்கெழுத்து, விக்கி பதிவுகள், புதசெவி என்று சுவாரசியமாக எழுதிக் கொண்டிருந்தவருக்கு அநியாயமாக அலுவலக வேலைகள் எல்லாம் செய்யச் சொல்கிறார்களாம். இந்த மீம்-ஐ முன்னிட்டாவது ஒரு புதசெவி பதிவு போடுவார் என்று எதிர்பார்க்கலாம். தொடர்ந்து விக்கி பசங்களையும் (பெருசுகளையும்) இந்த மீம்-க்குள் கோர்த்து விடுவார் என்று நம்புகிறேன்.

இராதா ஸ்ரீராம் - நடைபாதையில் அதிகம் நடமாட்டமில்லை என்றாலும் தொடர்ந்து மற்ற பதிவர்களை வாசித்து ஊக்குவிப்பவர். சென்ற வருடம் சந்தித்த காட்டு தீ அனுபவத்தின் பாதிப்பு இன்னமும் இருக்கலாம். இந்தத் தொடரை தொடர்ந்து அதிக பதிவுகளிடுவார் என்று நம்பப்படுகிறது.

சென்ஷி - இவரின் உண்மைப் பெயர் தெரியாது. ஆனால் தமிழ் பதிவுலகின் ரொமாண்டிக் காதலர் என்று மட்டும் தெரியும் :) திடீர் திடீரென்று பின் நவீனத்துவ பாய்ச்சல், மாய-யதார்தத மயக்கம் எல்லாம் காட்டுவார். இவருடைய ஒரு பதிவைப் பற்றி பரிசல்காரன் செய்த ஆய்வு பதிவுலகில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.

பினாத்தல் சுரேஷ் - தமிழ் பதிவுலகின் முதுபெரும் எழுத்தாளர். இவரின் அங்கத நடைக்கு அநேக வாசகர்கள் உண்டு. அவ்வப்போது ஃப்ளாஷ் அடித்து பதிவுலகை பிரகாசமாக்கிவிடுவார். ’என்ன எழுதுவது’ என்று யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல். இதைப் பற்றியும் எழுதுங்களேன் சுரேஷ்.

வெங்கிராஜா நல்ல புனைக்கதை எழுத்தாளர். நிறைய திரைப்படங்களைப் பற்றிய முழுமையான விமர்சனம் எழுதியிருக்கிறார். கடந்த சங்கமம் போட்டியில் முதல் பரிசு பெற்ற படைப்பாளி.

அம்பி திருமணம், குடும்பம் எல்லா பொறுப்புகள் கூடிய போதும் பொறுப்பாக கோபிகா, நயந்தாரா என்று பதிவுகள் போட்டுக்கொண்டிருந்த தம்பியை இப்படி அநியாய ஆபீசரா ஆக்கி ஆப்பு வைத்துவிட்டார்களே என்று வருத்தமாக இருக்கிறது. உங்களின் 32 நண்பிகளின் பெயரோடு இந்த 32 கேள்விகளையும் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

சுரேஷ் கண்ணன் இலக்கியம், புத்தகம், சினிமா என்று பல தளங்களில் தீர்க்கமாக எழுதக் கூடியவர். திரைப்படங்கள் பார்ப்பதற்கு சில நல்ல யோசனைகள் தந்திருக்கிறார்.

விஜி இவர் ஒரு ஆங்கிலப் பதிவர். ஆனால் தமிழ் பதிவுகளை ஆர்வமாக படிக்கிறவர். இவரால் இந்தத் தொடர் ஆங்கிலப் பதிவுகளுக்கும் சென்றால் நல்லதே.

தென்றல் - ஒரே மாநிலத்தில்தான் (கலிபோர்னியா) இருவரும் இருக்கிறோம். ஆனால் சந்திக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. நல்ல தகவல் செறிந்த பதிவுகள் இடுபவர். இப்பொழுதுதான் இந்திய பயனத்திலிருந்து திரும்பியிருக்கிறார். தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.

பரத் - சக ட்விட்டரர். நிறைய வாசிப்பவர். படம் பார்ப்பவர். எல்லாம் தாண்டி ட்விட்டரில் சிநேகமாக உரையாடுபவர். முந்தைய ஒரு மீம் ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டவர். இந்த ஆட்டத்தில் இவருக்கும் ஒரு துண்டை போட்டு வைக்கிறேன் :). வாங்க பரத். வந்து கலக்குங்க!


தொடர்ந்து படிக்க...

முங்காவின் முத்தம்

June 11, 2009

'இலியாஸ்! இலியாஸ்!’ என்று கண்ணாடி சுவற்றை தனது முட்டை வாயால் இடித்துக் கொண்டிருந்தான் முங்கா. நீரின் அடியில் இருந்த காவி நிறக்கற்களை வாயால் கவ்வி எடுத்துக் கொண்டு வந்து கண்ணாடி சுவற்றின் மேல் இடித்தான். அகல இலைகளோடு மிதந்து கொண்டிருந்த லில்லி ’இங்கேருந்து கத்தினா அவனுக்கு எப்படி கேட்கும்?. மேலே போய் கத்து’ என்றது.

’நான் அவளை மீண்டும் பாத்தேன் இன்றைக்கு. வட்டவடிவமாக பிரகாசமான பொன் மஞ்சள் நிலவைப் போல் சிரித்த முகத்துடன் தோன்றினாள். அவள் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம் தெரிந்தது.’

’ஓ! அந்த மஞ்சள் அழகியா. அவள் பெயர் கிம்னோ. இலியாஸிடம் முதுகுத்தண்டு சிகிச்சைக்கு வருகிறாள். இங்கு இருக்கும் வாளிப்பான தங்க மீன்களை எல்லாம் விட்டுவிட்டு உன்னைப் பார்த்து சிரிக்கிறாள் என்றால் அவள் பார்வையில்தான் கோளாறு. நீ ஒரு சோம்பேறி’

‘இல்லை. அந்த கூனன் ராகி அங்கே மேஜை மேலிருந்து காமவெறியோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் பார்வை எனக்கு ஊசிகளாக குத்துகின்றன. அதான் பதுங்கிக் கொண்டிருக்கிறேன்’

‘அவனைத்தான் தண்ணீர் டிரம்மில் போட்டு சுற்றோ சுற்று என்று சுற்றி, புனுக்குக்காக பிதுக்கி எடுத்து விட்டானே இலியாஸ். ஒரு வாரத்துக்கு அவனால் நடக்கக் கூட முடியாது’

’நான் அவளை மீண்டும் பார்க்க வேண்டும்’

‘இங்கிருந்து சமுத்திரம் போகிற வழியில் எங்காவது அவள் முகம் தென்படலாம்’

‘சமுத்திரத்தில் என்ன இருக்கும்?’

‘பெரிய பிரம்மம் இருக்கும். நிறைய நீந்தலாம். ராகியிடமிருந்து உனக்கு விடுதலை கிடைத்துவிடும். பெரிய பெரிய செடிகள் கூட உண்டு. சரணம், சரணம் என்று சொல்லிக் கொண்டே போ’

‘கிம்னோவை மீண்டும் பார்க்க முடியும் அல்லவா?’

முங்கா தனது சிறிய வாலை துழாவிக் கொண்டே தொட்டியை சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பதை கவனித்த இலியாஸ்ஸுக்கு மிகுந்த சந்தோஷம். நல்ல கருந்தேக்கு பலகையை வெட்டியெடுத்தது போல கட்டுக்கோப்பான உடலுடன் இருப்பான் இலியாஸ். வெள்ளைப் பற்கள் பளீரிட வட்டக் கண்ணாடி வழியே முங்காவைப் பார்த்துக் கேட்டான்.

‘எதற்காக பரபரப்பாக தொட்டியை சுற்றி சுற்றி வருகிறாய்? இவ்வளவு அவசரமாக?’

தான் சமுத்திரம் நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக சொன்னான் முங்கா. தொட்டியின் பக்கவாட்டில் மஞ்சள் வெளிச்சப் புகை நடுவே இருக்கும் ஃப்ளோரஸண்ட் விளக்குகளை காட்டி அது போல நூறு கோடி விளக்குகளைக் கடந்தால் சமுத்திரம் என்று அம்மா சொல்லியிருக்கிறாள் என்றான். லில்லிதான் விளக்குகளின் எண்ணிக்கைக்கு கணக்கு வைத்திருக்கிறாள். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவளுக்கு பதினொன்றுக்கு மேல் எண்ணத் தெரியாது.

இலியாஸ் கிம்னோவிடம் பல்வேறு படிவங்களை கொடுத்து சம்பிரதாயங்களை பூர்த்தி செய்த பின்னர் சிகிச்சையைத் தொடங்கினான். சுற்றிலும் வகை வகையாக தசைகளை வலுப்படுத்தும் உபகரணங்களுக்கு நடுவில் ஒல்லியான மேஜையில் கிம்னோவைப் படுக்க வைத்து அவளுடைய முதுகில் மசாஜ் செய்தான்.

‘உனது முதுகெலும்பு படு மோசமாகிவிட்டது. பதினெட்டு மணி நேரத்திற்கும் மேல் உட்கார்ந்தே வேலை செய்கிறாய் என்று நினைக்கிறேன். நரம்பு மண்டலம் மொத்தமும் பாதிக்கப்பட்டு பொட்டலம் போல் சுருண்டு போய்விட்டது’ என்றான். திமிலில்லாத சிறிய காதுகளைக் கொண்ட ஜாக்வின் மாட்டின் வாலில் தினமும் நாலங்குலம் வெட்டியெடுத்து சூப் வைத்துக் கொடுத்தான். மூன்றே வாரத்தில் கிம்னோவின் முதுகெலும்பு பிரமாதமாக புத்தம் புதியதாகி மாட்டு வால் போல் வெளியே நீண்டு வளர்ந்திருந்தது. அவளால் இப்பொழுது பத்து மைல்கள் நிற்காமல் ஓட முடிகிறது. இரண்டு மணி நேரங்கள் நீச்சலடிக்க முடிகிறது. ஆனால் காதல் செய்ய முடியாமல் கடுமையான மூச்சிரைப்பு நோய் இருந்தது. அவளது நுரையீரலில் களிம்பாக சளி படிந்து இருக்கிறது.

தொட்டியின் அடியில் கற்களை புரட்டுவதும் கண்ணாடிச் சுவரை இடிப்பதுமாக இருந்த முங்காவை நிறைய வேடிக்கைப் பார்த்தாள்.

‘இலியாஸ் கைராசிக்காரந்தான். ஆனால் பெண்கள் என்றால் அதிகமாக வழிகிறான்’ என்று முங்காவிற்கு அதிகம் கோபமாக இருந்தது.

’நீ கிம்னோவை முத்தமிட விரும்புகிறாயா?’ இலியாஸ் வட்டக் கண்ணாடி வழியாக முங்காவைப் பார்த்துக் கேட்டான்.

‘பார்! நீ பிறந்த அதே குளத்தில்தான் நானும் தலைபிரட்டையாகப் பிறந்தேன். காங்கோ நாட்டு அழகி என்னை முத்தமிட்டாள். நான் இப்படியாகி விட்டேன்’ என்றான் இலியாஸ்.

’முத்தத்தின் மூலம் ஆயிரக் கணக்கான கிருமிகள் தொற்றிக் கொள்ளும்’ என்று சிடுசிடுத்தாள் கிம்னோ.

‘நீ புரட்டும் கற்களில் பச்சைக் கற்கள் தோன்றினால் எடுத்து வைத்துக் கொள். அதில் மாவாங் மூலிகைகள் இருக்கிறது. அந்தக் கற்களோடு நீ கிம்னோவை முத்தமிடலாம்’ என்றான் இலியாஸ்.

முங்கா தொட்டியை சுற்றிச் சுற்றி வந்து சிறிய சிவப்பு கற்களை முட்டை வடிவ வாயால் கவ்வி தள்ளித்தள்ளிப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த முக்கியமான நாளில் முங்கா வாய் கொள்ளாமல் பச்சை கற்களை கொண்டு மேல்பரப்பில் சுற்றிக் கொண்டிருந்தான்.

சிறிய வலை மூலம் அவனைத் தூக்கிய இலியாஸ், அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த கிம்னோவின் குவிந்த உதடுகளுக்கு அருகில் கொண்டு சென்றான். கண்களை விரித்துக் கொண்டு கிம்னோ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, முங்கா காற்றில் எழும்பி பறந்தவாறே உற்சாகமாக கத்திக் கொண்டே திறந்திருந்த அவள் வாயினுள் விழுந்தான். பட்பட் என்று வாலை அடித்துக்கொண்டே கிம்னோவின் வயிற்றினுள்ளே வழுக்கிக் கொண்டு போனான்.

’முங்கா மூலிகைகளை உனது நுரையீரலுக்கு கொண்டு சேர்த்து விடுவான். இனி உனக்கு மூச்சிரைப்பே வராது’ என்று சொல்லியவாறே இலியாஸ் கிம்னோவின் உதடுகளை தனது உதட்டால் மூடினான்.


தொடர்ந்து படிக்க...

பார்த்ததில் பிடித்தது - 2

June 7, 2009

கடந்த சில மாதங்களாக பார்த்த திரைப்படங்களைப் பற்றி பதிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்து செயல்படுத்தாமல் விட்டதால் சற்றே பெரிய பட்டியலாக நீண்டுவிட்டது.

பார்த்ததில் பிடித்தது - 1

மலையாளம்

மம்மூக்காவின் கருத்த பக்ஷிகள் மற்றும் ஒரு வடக்கன் வீரகதா என்ற இரண்டு படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு படங்களுக்கும் இடைவெளி சுமார் இருபது வருடங்களாவது இருக்கும். ஆனால் மம்மூக்கா அப்படியே அதே கம்பீரத்துடன் இருக்கிறார். கருத்த பக்ஷிகள் கொஞ்சம் டிரமாடைஸ் செய்யப்பட்ட படமாக இருந்தாலும், மிகவும் காத்திரமான படம். பத்மப்ரியா துணிச்சலான பெண்ணிற்கும் அரை பைத்தியத்திற்கும் வித்தியாசம் உணர்ந்து நடிக்க முயற்சிக்கலாம். இறுதியில் அந்த கண் தெரியாத குழந்தை ‘காற்றை பிடிக்கான்’ என்று சொல்லும்போது மனம் கனத்துதான் போகின்றது. வடக்கன் வீரகதாவிற்காக மம்மூக்காவிற்கு தேசிய விருது கிடைத்தது நினைவிருக்கிறது. எம்டிவி-யின் (M T Vasudevan Nair) கதைக்கு முன்பாக துரோகியாக மட்டுமே அறியப்பட்டிருந்த சந்துவின் பாத்திரத்திற்கு மம்மூக்கா நன்றாகவே உயிர் கொடுத்திருந்தார். களரி சண்டைகள் இயல்பாக நம்பமான முறையில் படமாக்கப்பட்டிருந்தன.

திலீப்பின் தென்காசி பட்டணம், கல்யாணராமன் போன்ற படங்களும் பார்த்தேன். மிகவும் எளிமையான முறையில் அழகாக கதை சொல்கிறார்கள். இயல்பான படம் பார்த்த திருப்தி கிடைத்தது.

தமிழ்

பசங்க ஒரு அறிமுக இயக்க்நரின் படத்திற்கே உரிய உணர்ச்சிகரமான கதை. ஆனால் அதைக் கொடுத்திருக்கும் விதம் அருமையாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது படத்தின் மண்வாசனை கமழும் வசனங்கள் மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு. வகுப்பில் உறுதி மொழி எடுப்பது, ப்ராக்ரஸ் ரிப்போர்ட் கொடுக்கும்போது கைதட்டி உற்சாகப் படுத்துவது, ‘இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு’ என்று போன் பேச தொடங்குவது போன்ற இயல்பாக சிரிப்பை வரவழைக்கும் உரையாடல்கள், போதும் பொண்ணு, சோப்பி பொண்ணு போன்ற ரிஃப்ரெஷிங்கான பெயர்கள்... இப்படி ஒரு பெரிய பட்டியலே போடலாம். தவிர்த்திருக்க வேண்டியது பசங்களுக்கு கொடுக்கப்படும் சினிமாத்தனமான பில்டப். கூட்டமாக வருவது, வில்லத்தனமாக பேசுவது, பெரிய தாதா படங்களுக்கு கொடுக்கப்படும் பின்னனி இசை, ஆரம்ப போலிஸ் ஸ்டேஷன் காட்சிகள் எல்லாம் ஒவ்வாமை ஏற்படுத்தி விடுகின்றன. இயக்குநர் பாண்டிராஜ் இப்பொழுது மதில் மேல் பூனையாக இருக்கிறார். அடுத்த படத்தில் எந்தப் பக்கம் தாவுகிறார் என்று தெரிந்து விடும்.

ஈரானி

The Cow பாரசீகத்தில் பசுவை ‘காவ்’ என்று சொல்கிறார்கள். சமஸ்கிருதத்திலும் / ஹிந்தியிலும் அப்படித்தான் என்பது ஒரு ஆச்சர்யமானது. பசுவை இவ்வளவு நேசிக்க முடியுமா என்பது போல் இருக்கிறது ஹாசனின் பாசம். அவர் பசுவை குளிப்பாட்டி துடைத்து விடுவது மிகவும் இயல்பான நடிப்பு. ஒரு நாள் அந்தப் பசு இறந்து போக அவர் என்னவாகிறார் என்பதும், அதனை அந்த கிராம மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும்தான் கதை. மிகவும் நுண்ணிய உணர்வுகள் பிரதானபடுத்தி எடுக்கப்படும் படங்களை வேற்று மொழிகளில் பார்ப்பதில் ஒரு வசதி. இதெல்லாம் ஒரு படமா என்று நகைக்க அதிகம் பேர் பார்த்திருக்க மாட்டார்கள். விவாதம் செய்து நேர விரயம் செய்ய வேண்டாம்.

ரோமானியா

4 Months, 3 Weeks and 2 Days மிகவும் பாதித்த ஒரு படம். நேரம் இருப்பின் தனிப் பதிவாக இந்தப் படத்தை பற்றி எழுதலாம். கறுப்பு / வெள்ளையாக பாத்திரங்களின் படைக்காமல் பல்வேறு படிமங்களாக கொண்டு கதை சொல்வது மிகவும் சிரமமானது. ரோமேனியாவில் இரு கல்லூரிப் பெண்கள் கம்யூனிச ஆட்சியின் போது கருக்கலைப்பு செய்ய முயல்வதில் தொடங்குகிறது படம். இறுதியில் கருக்கலைப்பு முடிந்துவிடுகிறது, அங்கே சூழ்ந்து நிற்கும் வெறுமையோடு படம் முடிவடைகிறது. ஒடிலியா (Otilia) தனது நண்பிக்காக சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் டாக்டரின் இச்சைக்கு இணங்குவதும் தொடர்ந்து தனது காதலனை அவனது வீட்டில் சந்தித்து அவனோடு சண்டை போட்டு பிரிவதும் ஒரு மனித மனத்தின் இரு வேறு புள்ளிகளாக சித்திரிக்கப் படுகிறது. ஒடிலியாவின் போக்கில் கதை சொல்லப்பட்டாலும், கேப்ரியலாவின் பாத்திரம் அருமையாக சொல்லப்பட்டிருக்கும். படத்தில் பல காட்சிகள் ஒரே ஷாட்டாக, கேமரா எந்தப் பக்கமும் நகராத வகையில் எடுக்கப்பட்டிருக்கும். ஒடிலியாவின் காதலன் வீட்டில் நடக்கும் டின்னர் பார்டி ஒரு எடுத்துக் காட்டு.

ஜெர்மன்

Run Loila Run இது ஒரு பரீட்சார்த்த சினிமா ஆனால் பெரு வெற்றிப் பெற்ற முயற்சி என்று சொல்ல வேண்டும். திரைப்படங்களில் கதை சொல்லும் முயற்சியில் இந்தப் படம் ஒரு மைல் கல். லோலாவைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும் அவளுடைய ஓட்டம் அந்த சம்பவங்களில் ஏற்படுத்தும் பாதிப்பையும் காட்டுகிறது படம். அவள் காதலன் மானி ஒரு கள்ளக் கடத்தல் செய்யும்போது பணப்பையைத் தொலைத்துவிட சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். லோலா ஓடத் துவங்குகிறாள். படிகளில் ஒரு நாயை எதிர்கொள்கிறாள். அது குரைப்பதினால் வேகமாக ஓடுகிறாள். வழியில் பலரை சந்திக்கிறாள். அதாவது பலரின் செயல்களை அவளுடைய ஓட்டம் பாதிக்கிறது. ஒரு வீடில்லாத ஏழை மானி ட்ரெயினில் தவறவிட்ட பணப்பையுடன் லோலாவின் ஓட்டத்தின் நடுவில் வருகிறான். லோலா தனது தந்தையை வங்கியில் சந்தித்து பணம் கேட்கிறாள். அவர் முடியாது என்று சொல்வதோடு நில்லாமல் அவள் தன் பெண்ணே அல்ல என்றும் தான் அவளுடைய அம்மாவை விவாகரத்து செய்யப் போவதாகவும் சொல்கிறார். இப்படியாக தொடர்ந்து செல்லும் சம்பவங்கள் மானியுடன் லோல இணைந்து செய்யும் ஒரு கொள்ளை சம்பவத்தில் முடிகின்றன. போலிஸ் லோலாவை சுட்டு விடுகிறது. அவளது முதல் ஓட்டம் முடிய, இரண்டாவது ஓட்டம் துவங்குகிறது. இந்த ஓட்டத்தின் தொடக்கத்தில் லோலா ஓடும்போது மாடிப்படியில் எதிர்படும் நாய் அவளை தடுக்கி விட அவளுடைய கால் சுளுக்கிக் கொள்கிறது. சில நொடிகளை அவள் தவற விடுகிறாள். அதனால் தொடர்ச்சியாக வரும் சம்பவங்களில் ஏற்படும் மாற்றங்களும் புதிய கதையைக் கொண்டுச் செல்கின்றன. மூன்றாம் ஓட்டத்தில் லோலா வேகமாக நாயைத் தாண்டி விடுகிறாள். இந்தப் படத்தைப் பார்ப்பது விவரிக்க முடியாத அனுபவம். கட்டாயம் தவறவிடக் கூடாத திரைப்படம் இது.

ஆங்கிலம்

Basic Instinct - Series 1 & 2 - அபாயங்களுக்கு அடிமை என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. பணக்கார எழுத்தாளர் கேத்தரீன் ட்ராமல் ஒரு Risk Adict. அவர் எழுதும் கதைகள் போலவே அட்சரம் பிசகாமல் கொலைகள் நிகழ்கின்றன. அவரே செய்தாரா இல்லை அந்தக் கதையைப் படித்த மனநோயாளி யாரேனும் செய்த கொலைகளா என்பதுதான் இந்த இரு திரைப்படங்களின் அடிநாதம். முதல் படத்தில் இருந்த ஒரு மிஸ்டிக்கல்தன்மை இரண்டாம் படத்தில் க்ளினிக்கலி பெர்ஃபெக்ட் தன்மையாக மாறிப் போய்விட்டது. தொன்னூறுகளில் வெளியான முதல் படத்தின் மூலம் ஷாரன் ஸ்டோன் திரை ஆளுமை மிகப் பெரும் வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட பதினான்கு வருடங்கள் கழித்து இரண்டாம் பாகத்திலும் இளமை குன்றாமல் நடித்திருந்தார்.

Schindler's List ஸ்பீல்பெர்குக்கு இயக்குநருக்கான ஆஸ்கர் விருது பெற்றுக் கொடுத்த முதல் படம். இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகளினால் நடந்தேறிய யூத இனப் படுகொலையை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆஸ்கர் ஷிண்ட்லர என்னும் ஜெர்மானியர் தன்னுடைய அரவணைப்பில் நிறைய யூதர்களை ஜெர்மானிய இனவெறியர்களிடமிருந்து பாதுகாக்கிறார். இந்தப் படத்தில் அநேகமாக ஷிண்ட்லரின் பட்டியலில் இருந்த அனைத்து யூதர்களின் பெயரும் சொல்லப்பட்டு விடுகின்றன. ஒரு ஆவணப் படத்தின் தீர்க்கத்தோடு எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படம்.

Shrek - Series அனிமேஷன் படங்களில் முன்னோடியானப் படம். நான்கு பாகங்கள் இதுவரை வந்திருக்கின்றன. அனிமேஷன் படங்களில் வால்ட் டிஸ்னியின் மோனோபோலியை முடிவுக்கு கொண்டு வந்தப் படம் என்றும் சொல்லலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் யுனிவர்ஸல் ஸ்டுடியோவில் ஷ்ரேக் 4 பார்தத்து ஒரு சிறந்த அனுபவம். இனி வரும் காலங்களில் நிறைய 4-டி படங்கள் உருவாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

Slumdog Millionnaire எட்டு ஆஸ்கர்களையும், கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள் என்ற எதிர்பார்ப்பில் ஒரு பென்ஹர், காந்தி, டைட்டானிக் ரேஞ்சுக்கு எதிர்பார்த்துக் கொண்டு போனதில் மிகவும் ஏமாற்றம் கொடுத்தப் படம். திரைக்கதை அமைப்பும், எடிட்டிங்கும் மிகவும் அருமை என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஹிந்தி

A Wednesday நஸ்ருதீன் ஷா மணிக்கட்டை முறுக்கிக் கொண்டு காஃபி குடித்துக் கொண்டே செல்ஃபோன் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்கிறார். வசனங்கள் மிகவும் கூர்மையானது. ஆம் ஆத்மி (பொது ஜனம்) பிரதிநிதியாக அவர் போடும் திட்டங்கள் பாதியிலேயே புரிந்து விடுகிறது. இந்தியத் திரைப்படங்களில் போலிஸும் தொழில்நுட்பம் பயன்படுத்துவதில் திறமைசாலிகள் என்று காண்பிக்கும் ஒரே படம் என்று நினைக்கிறேன். எனிமி ஆஃப் த ஸ்டேட் போன்ற படங்கள் வருவதற்கு இன்னமும் காலம் இருக்கிறது.

ஜாக்கிசானின் தீவிர ரசிகனாக சில படங்களும் பார்த்தேன். சான் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக நடித்த கார்ஜியஸ் அவர் பாணி படங்களிலிருந்து விலகி புதுமையாக இருந்தது.

குறும்படம் - Signs

இதுவரை பொறுமையாகப் படித்தவர்களுக்கு ஒரு அருமையான குறும்படம் இங்கே.





அவ்வப்போது அச்சுபிச்சு காமெடி படங்களும் விரும்பிப் பார்ப்பதுண்டு. Policy Academy Series-ல் சில படங்களும், கல்லூரிக் காதல் / டேட்டிங் படங்கள் சிலவும் பார்த்து ரசித்தேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் :)

இன்னமும் பல திரைப்படங்கள் பற்றி எழுத வேண்டும். விரைவில் அடுத்தப் பட்டியல்.


தொடர்ந்து படிக்க...